வியாழன், ஜூன் 13, 2024

பைசாபாத்: ஒரு துளி இந்தியா

அது பழமையான நகரம். விக்கி கணக்குப்படி 70% இந்துக்கள், 28% முஸ்லிம்கள் வாழும் நகரம். இரண்டு விழுக்காடு கிறித்துவர்கள், பெளத்தர்கள் என பிற மதத்தினர்.
சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்ட அயோத்தி நகரம் இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1986இல் சர்ச்சைக்குரிய கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு பூஜைகள் அனுமதிக்கப்பட்டது உத்திரப்பிரதேசத்தில்
 24 மாவட்டங்களில் கலவரம் மூண்டபோதும் இந்த நகரம் அமைதியாக இருந்துள்ளது. இரண்டு தரப்பு மக்களும் பொறுப்பு மிக்க ஜனநாயக அமைப்புகளும் சமூக அமைதியை தொடர்ந்து பேணி உறுதி செய்து வந்துள்ளார்கள். 

1988இல் என் டி திவாரி முதல்வராக இருந்தபோது உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஒரு கலவரம் வெடித்துள்ளது. 

சமாஜ்வாதிகட்சியின் அகிலேஷ் முதல்வராக இருந்தபோது 2012 அக்டோபர் 24 அன்று துர்கா பூஜை பண்டிகையின்போது உள்ளூர் பீ ஜே பி எம் எல் ஏ ஆன ராம் சந்திர யாதவும் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட பிற வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளும் திட்டமிட்டு நடத்திய கலவரத்தில் இசுலாமிய மக்கள் நடத்தி வந்த அறுபதுக்கும் மேற்பட்ட கடைகளை கொள்ளை அடித்து தீ வைத்து சாம்பலாக்கினார்கள். 

களத்தில் நேரடி விசாரணை செய்து ஆய்வு நடத்திய ரிஹாய் மஞ்ச் என்ற அமைப்பு, கலவரம் மிக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டது என்றும் இஸ்லாமிய மக்களின் கடைகள் இலக்கு வைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன, துர்கா பூஜை ஊர்வலத்துக்கு என்றும் கொண்டுவரப்பட்ட வேன்களிலும் டிராலிகளிலும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களை ஏற்றி சென்றார்கள் என்றும் அறிக்கை அளித்தது.

 உள்ளூர் பி ஜே பி கட்சியினரும் ஆர் எஸ் எஸ் காரர்களும் கலவரத்துக்கு ஒரு மாதம் முன்பே இஸ்லாமிய மக்கள்தான் துர்கா தேவி சிலையை திருடி சென்று விட்டார்கள் என்றும் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் பாடல்கள், சொற்பொழிவுகள் அடங்கிய பதிவுகளை மக்கள் மத்தியில் விநியோகம் செய்து கலவரத்தை தூண்ட எல்லா ஏற்பாடும் செய்து வந்ததாகவும் நேரடி சாட்சிகளும் கூட பதிவு செய்தார்கள். கலவரம் நடந்தபோது போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்றும் மக்கள் கூறினார்கள்.

பி ஜே பி எம் எல் ஏ உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றாலும் சாட்சிகள் பிறழ்ந்தார்கள் என்றும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய சான்றுகளை தரவில்லை என்றும் காரணம் கூறி 2023ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள்.

குறிப்பிடத்தக்க இதுபோன்ற திட்டமிடப்பட்ட கலவரங்களை தவிர்த்து
எப்போதும் அந்த நகரம் அமைதியாகத்தான் இருந்துவருகிறது. இரண்டு மத மக்களும் தமது அன்றாட வாழ்க்கை நடத்தும் பொருட்டு உழைக்கிறார்கள். இரண்டு தரப்பு மக்களின் பண்டிகை காலங்களில் அமைதியும் வணிக உறவும் சிறப்பாக நீடித்து அமைதியை காத்துள்ளது.

குறிப்பாக ஒரு பதிவை இங்கே சொல்ல வேண்டும். பைசாபாத் நாடாளுமன்ற தொகுதியில் பிஜேபி இது வரையிலும் 5  முறை மட்டுமே வென்றுள்ளது. அதாவது பாபர் மசூதி பிரச்சனையை கிளப்பிய 1991, 96, 99, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் வெறுப்பு அரசியலை விதைத்து தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 2024இல் இப்போது சமாஜ்வாடி கட்சி வென்றுள்ள நிலையிலும் ஒட்டுமொத்த உ பி மக்களும் இப்போது வேறு அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையிலும் 
நீண்ட கால அரசியல் ஆதாய இலக்கை நோக்கி பிரச்சாரம் செய்யப்பட்ட ராமர் கோவிலும் கட்டப்பட்டு விட்ட நிலையிலும்
இனிமேல் பைசாபாத் தொகுதி பிஜேபிக்கு ஒருகாலத்திலும் கிடைக்காது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

கடந்த காலங்களில் இந்த தொகுதியில் காங் கட்சி ஏழு முறை, சமாஜ்வாடி இரண்டு முறை, இந்திய கம்யுனிஸ்ட் கட்சி ஒரு முறை, ஜனதா கட்சி ஒரு முறை, பகுஜன் சமாஜ் கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
... ...

மண்டைக்காடு, கோயம்புத்தூர், குஜராத், உத்தர பிரதேசம், மணிப்பூர் என நாடெங்கும் பி ஜே பீ, ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புக்கள் நடத்தும் கலவரங்கள் யாவும் நன்கு திட்டமிட்டவை என்பதும் ஏற்கனவே குறி வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களை கொள்ளை அடித்து அதன் பின் தீ வைத்து கொளுத்துவது அவர்களின் பாரம்பரியமான நடைமுறை என்பதும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. 

இவை யாவும் மதத்தின் பேரால் நடத்தப்பட்டவை. மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து நடத்தப்பட்ட கொள்ளைகள், கொலைகள். இவை யாவற்றுக்கும் மக்கள் இப்போது ஒரு முடிவு கட்டி உள்ளார்கள். எந்த மக்கள்? எந்த ஊரில் அமைந்த இராமர் கோவிலின் பெயரால் இந்தியா எங்கிலும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மதவெறி பிரச்சாரம் செய்து வந்தார்களோ அதே ஊரின் மக்கள் இப்போது பிஜேபி ஆர் எஸ் எஸ் சங் பரிவார் குடும்பத்துக்கு மிக வலிமையான அர்த்தம்மிகு பாடத்தை புகட்டி உள்ளார்கள். அதை மேலும் உறுதி செய்வதாக அந்த மாநில மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு பாதிக்கும் மேற்பட்ட  இடங்களை அதாவது 80 தொகுதிகளில் பாதிக்கு மேற்பட்ட 43 இடங்களில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார்கள் என்பது சாதாரணமான ஒன்றாக பார்க்க முடியாது. 400க்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் வெல்வோம் என்ற மார்தட்டி திரிந்த மோடியின் அகங்காரத்தை, முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்தின் பிளவுவாத, உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசியலை பைசாபாத் மக்களும் ஒட்டுமொத்த உ பி மக்களும் நிராகரித்துள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்துத்துவா சக்திகள் தம் அரசியல் ஆதாயங்களுக்காக பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வந்த ராமர் இனிமேல் அவர்களுக்கு பயன்பட மாட்டார். ராமருக்கும் பைசாபாத் மக்களுக்கும் தம் அன்றாட வாழ்க்கை அமைதியாக நடந்தேற மத நல்லிணக்கம் சமூக அமைதி ஆகியன அவசியம் என்பதை நன்கு உணர்ந்து உள்ளனர். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வணிக உறவு ஆகியவற்றின் மீது அவர்களின் கவனமும் கவலையும் குவிந்துள்ளது என்பதே ஒட்டுமொத்த உ பி மக்களும் குறிப்பாக பைசாபாத் மக்களும் இப்போது ஏனைய இந்திய சகோதர சகோதரிகளுக்கு விடுத்துள்ள செய்தியும் சமிக்ஞையும் ஆகும்.
...
(தீக்கதிர் 10.6.2024 அன்று வெளிவந்துள்ள எனது கட்டுரை)

கட சிங்காரி

மாட்டுகாரவேலா ஒம் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா...

மச்சானை பாத்தீங்களா...

கேட்டேளே அங்கே அதை... 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை... 

என் வீட்டு தோட்டத்தில்... 

பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம்...

தாண்டியா ஆட்டமும் ஆட...

வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி...

ஒன்ன விட இந்த உலகத்தில்...

வெள்ளி சலங்கைகள்... 

நாதம் என் ஜீவனே...

காவியம் பாடவா தென்றலே...

என்ன? ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாமல் இருக்குதா? சம்பந்தம் இருக்குது.

கட சிங்காரி? ஜேச்சா? சரி. உடுக்கை, பம்பை, நாகரா, தப்பு, உருமி, முரகோஸ், ஜால்ரா, துடி, கின்னாரம், கடம், கொன்னக்கோல், மோர்சிங், கிலுகிலுப்பை, மகுடி, சங்கு, தாண்டியா... 

இப்போது பிரபலமாக ஒளிபரப்பாகும் zee சரிகம ஆகட்டும், இளையராஜா, ரஹ்மான் அல்லது எந்த ஒரு பிரபலமான கலைஞரின் கச்சேரி ஆகட்டும், இவரை நீங்கள் பார்க்காமல் கடந்து செல்லவே முடியாது. அவர் பெயர் ஜெயச்சந்திரன் என்ற ஜேச்சா. 

அவர் போன்ற கலைஞர்களை பொதுவாக ஆல் ரவுண்டர் என்று கச்சேரி அல்லது ஆர்கெஸ்ட்ரா வட்டாரங்களில் சொல்வார்கள். மேலே நான் சொன்ன தோல் இசை கருவிகள் இவர்களை சுற்றி இருக்கும். மட்டும் இன்றி மாட்டின் கழுத்து மணி ஒலி, 

சலங்கை, விசில், குருவி, கிளி போன்ற பறவைகளின் குரல் ஒலி ஆகிய

சத்தங்களை பாடல்களில் உருவாக்கி தரும் கலைஞர்கள் இவர்கள். காலமாகி விட்ட மீசை முருகேஷ் அப்படிப்பட்ட கலைஞர்தான். இவர்களை சுற்றி இருக்கும் வேறு பல பொருட்களை பார்த்தால் வேடிக்கையாகவும் இருக்கும். ஆனால் பாடல்களில், காட்சி பின்னணி இசை BG ஆகியவற்றில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.

மேலே நான் குறிப்பிட்டுள்ள பாடல்களில் இந்த கலைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 

...

மாட்டுக்கார வேலா ஒம் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா... என்ற பாடலில் மாட்டை பிடித்துக்கொண்டு உருமி இசைத்துக்கொண்டு வருபவர் எம் கே சோமசுந்தரம் என்ற சிங்காரம். மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்களிடம் ஸ்டுடியோ நிர்வாகியாக பணி செய்தார். கூடவே பாடகர், நடிகர், உருமி இசைக்கலைஞர் ஆகிய பன்முகத்திறன் கொண்ட ஆளுமையாக சிங்காரம் இருந்துள்ளார். 

வீட்டில் தண்ணீர் ஊற்றி வைக்கும் மண்பானைதான் கச்சேரிகளில் கடம் ஆகிறது. அதே கடத்தின் வாயில் ஆட்டுத் தோலை இழுத்துக்கட்டி மூடி அதில் அடித்து இசைக்கும் புதிய இசைக்கருவி ஒன்றை சிங்காரம் கண்டுபிடித்துள்ளார். அதற்கு என்ன பெயர் வைப்பது என்று குழம்பியபோது கட சிங்காரி என்று பெயர் சூட்டியுள்ளார்கள். 

சிங்காரத்தின் மகன்தான் ஜெயச்சந்திரன் என்ற ஜேச்சா. தனது பன்னிரெண்டாம் வயதில் கே வி மகாதேவனுக்கு வாசித்துள்ளார். 1973இல் இருந்து இப்போது வரை இளையராஜாவுக்கு இசைத்து வருகிறார்.  மற்ற இசையமைப்பாளர்களிடமும் பணி செய்துள்ளார். 40 வருடங்களாக 10,000 பாடல்களுக்கும் மேல், 300 இசையைப்பாளர்களுடன் பணி ஆற்றிய நெடிய இசை அனுபவம் அவருடையது. அன்றி தனியாக இசை ஆல்பங்களும் கொடுத்துள்ளார். விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவர் குறித்தும் அவர் இசைக்கும் தோல் கருவிகள் குறித்தும் ஆன ஓர் ஆவணப்படம் யூடியூபில் உள்ளது. தொடுப்பு 

https://youtu.be/fddvSIRkw7s?si=fbLWNtBLzHwXyAIL&mibextid=NOb6eG

... ...