கோவிட் தொற்று காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதி* உருவானார் (*நிகற்புதம்= 100 கோடி, அதாவது 1 பில்லியன்).
கொரோனா காலம் இந்த உலகில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதியை உருவாக்கி உள்ளதாக ஆக்ஸ்பாமின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
டாவோசில் நடக்கவுள்ள உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்துக்கு முன் ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள Profiting from pain என்ற குறிப்பில் பல அதிர்ச்சி ஊட்டும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
மிக முக்கியமானது: தொற்று காலத்தில் புதிதாக 40 புதிய நிகற்புதாதிபதிகள் உருவானார்கள். மாடெர்ணா, ஃபைசர் போன்ற பகாசூர மருந்து கம்பெனிகள் ஈட்டிய லாபம் மட்டும் ஒவ்வொரு வினாடிக்கும் 1000 டாலர்கள், அதாவது 77000 ரூபாய், ஒரு நிமிடத்துக்கும் ரூ.46,20,000, ஒரு மணி நேரத்தில் ரூ.27 கோடியே 72 லட்சம் லாபம் மட்டும். வருமானம் தனி.
கோவிட் தொற்று காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதி உருவானார், மொத்தம் 573 புதிய நிகற்புதாதிபதிகள் இப்படி உருவானார்கள். எதிர்முனையில் இந்த 2022இல் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 26.30 கோடி மக்கள் கொடும் வறுமையில் வீழ்வார்கள் என்று ஆக்ஸ்பாம் எச்சரிக்கின்றது.
தொற்று கண்டறியப்பட்ட 2019 டிசம்பருக்கு முந்தைய23 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2019 டிசம்பருக்கு பின் இந்த நிகற்புதாதிபதிகளின் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த நிகற்புதாதிபதிகளின் சொத்து மதிப்பு, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 13.9%! அதாவது 2000ஆவது ஆண்டில் இவர்களின் சொத்து மதிப்பு 4.4%, எனில் இப்போது மூன்று மடங்கு.
2020க்கு பிறகு 2668 நிகற்புதாதிபதிகள் தோன்றியுள்ளார்கள், இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 12.7 கற்பம் (1 கற்பம்=1 லட்சம் கோடி, ஒரு ட்ரில்லியன்). அதே நேரத்தில் உலகின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, உலகின் அடிமட்ட சாமான்ய மக்களின் 40% பேரின் சொத்தை விடவும் அதிகமாம்.
மருந்து கம்பெனிகள் தமது கொரோனா தடுப்பூசி வாக்சின் மருந்தின் அதிகபட்ச விலையை விடவும் 24 மடங்கு விலைக்கு உலக நாடுகளின் அரசுகளுக்கு விற்றுள்ளார்கள், ஆனால் பொருளாதாரத்தில் அடிமட்ட நிலையில் உள்ள நாடுகளில் உள்ள 87% மக்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி பெறவில்லை என்றும் ஆக்ஸ்பாம் சொல்கின்றது.
இந்த கொடூர கொள்ளையில் மருந்துகம்பெனிகள் மட்டுமே ஈடுபட்டன என்பதும் இல்லை. எரிசக்தி, உணவு கம்பெனிகளும் கொடூர வருமானம், லாபம் அடித்துள்ளன. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், டோட்டல் எனெர்ஜீஸ், எக்ஸான், செவ்ரோன் ஆகிய பெரிய எரிசக்தி கம்பெனிகள் மொத்தமாக அடித்த லாபம் மட்டும் ஒவ்வொரு விநாடிக்கும் 2600 டாலர்கள், அதாவது ஒவ்வொரு மணிக்கும் ரூ.72 கோடிக்கும் மேல். வாசிக்கும் நீங்கள் கணக்கு போட்டுப்பாருங்கள், இரண்டு வருடங்களில், அதாவது 17520 மணி நேரத்தில் அவர்கள் அடித்த கொள்ளை எவ்வளவு? சுமார் ரூ.12,61,440 கோடி. இதே காலகட்டத்தில் உணவு உற்பத்தி துறையில் புதிதாக 62 புதிய நிகற்புதாதிபதிகள் உருவெடுத்து உள்ளனர்.
கார்கில் கம்பெனிக்கு சொந்தமாக மேலும் 3 கம்பெனிகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கார்கில் கம்பெனி உலகின் விவசாய துறையில் 70% மார்க்கெட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன் கார்கில் குடும்பத்தில் 8 நிகற்புதாதிபதிகள் இருந்தார்கள், கொரோனா தொற்றுக்கு பின் அக்குடும்பத்தில் 4 புதிய நிகற்புதாதிபதிகள் பிறந்தார்கள்.
கொரோனா காலத்துக்கு பின், இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் வரலாறு கண்டிடாத அளவுக்கு விலைவாசி அதிகரிப்பும் அரசியல் குழப்பமும் நிலவுகின்றன. உலகின் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் 60% நாடுகள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டு விட்டன.