செவ்வாய், செப்டம்பர் 21, 2021

1921 மாப்பிளா கிளர்ச்சியும் அந்தமானும்


1921  பற்றி Conrod Wood எழுதிய Moplah rebellion and it's Genesis என் நூலை மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று நான் தமிழாக்கம் செய்த நூல் 2007இல் அலைகள் பதிப்பக வெளியீடாக வந்தது.

அக்கிளர்ச்சி படுகொலைகள் மூலம் கொடூரமாக அடக்கப்பட்ட பின் சில ஆயிரம் மாப்பிளா மக்கள் அந்தமானுக்கு குடியேற்றம் செய்யப்பட்டார்கள். ஆறு வருடங்கள் முன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். கொடிய காலத்தின் சுவடான செல்லுலார் சிறையை பார்த்தேன். 60000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கடல் வழியே பயணித்த நம் மூதாதையர் அந்தமானில் குடியேறியதாக மானுடவியல் வரலாறு சொல்கின்றது. ஆறு ஆதிவாசி இன மக்கள் இப்போதும் அந்தமானில் வசிக்கின்றார்கள். இன்று நாம் சுற்றுலா தலமாக கருதும் அந்தமான், வெறும் கரடு முரடான பிரதேசமாக இருந்துள்ளது எனில் அத்தீவை செப்பனிட்டு செம்மையாக்கி மனிதன் வாழத்தகுந்த பூமியாக மாற்றியது யார் என்ற கேள்வி உள்ளது. Maddy என்னும் மலபார் நண்பர் ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் historic alleys என்னும் தன் வலைப்பூவில் மலபார், அம்மக்கள், பண்பாடு, மலபாரின் சில நூற்றாண்டு வரலாறு, மாப்பிளா கிளர்ச்சி, மாப்பிளா மக்கள் குறித்து மிகப்பல அரிய தகவல்களை ஆங்கிலத்தில் பதிவிட்டு வருகின்றார். அவரது ஒரு பதிவின் தமிழாக்கம் இது.

..... ...... ....

TSS மஹாராஜா என்ற அக்கப்பல் 1879இல் கட்டப்பட்டது. இம்முறை அக்கப்பல் இதுவரை சென்றிடாத ஒரு புது வழியில் பயணம் சென்றது. தெற்கில் மெட்றாஸ் நோக்கிய பயணம். கப்பலில் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இருந்தார்கள், அனைவரும் பிரிட்டிஷ் அரசால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள். கூடவே பெருமளவு மளிகை சாமான்களும் கல்கத்தாவி ஏற்றப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின், தபால் தந்தி துறையின் கடித மூட்டைகளும் இருந்தன. மெட்றாஸ் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, அழுக்கடைந்த வேட்டி கட்டிய ஒரு கூட்டம் ஏறியது. கூடவே அவர்கள் சுமந்துகொண்டு வரும் சுமைகள். அவர்களில் பெரும்பாலோர் பெல்லாரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மாப்பிளா சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள். வெப்பம் மிகுந்த கப்பலின் கீழ்த்தளத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பலர் கப்பலில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார்கள். பரந்து விரிந்த நீலத்திரைக்கடலான வங்காள விரிகுடாவில் கப்பல் பயணத்தை தொடர்ந்தது. மாப்பிளாக்களில் சிலர், தங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay கொண்டு செல்கின்றனர் என்றும் வேறு சிலரோ சிங்கப்பூர் அல்லது மொரீசியஸ்க்கு கொண்டு செல்கின்றனர் என்றும் பேசிக்கொண்டார்கள். வேறு சிலரோ, தாங்கள் இனி என்றுமே திரும்பி வராத கருப்பு நீர்த்தீவுக்கு (காலாபாணி Kalapani, அதாவது ஹிந்தி மொழியில் கருப்பு நீர் என்றும் ஆயுளுக்கும் தண்டனை அனுபவிக்க போகின்றவர்கள் என்றும் பொருள்) சென்றுகொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார்கள். சிலர் கூண்டுகளில் அடைக்கப்பட்டார்கள், மற்றவர்கள் கப்பலின் தளத்திலோ காலி பங்கர்களிலோ உட்காரவோ படுத்துக்கொள்ளவோ அனுமதிக்கப்பட்டார்கள். மஹாராஜா தன் பயணத்தை தொடர்ந்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் ப்ளேயர் என்னும்   தண்டனைக்குடியேற்றம் நோக்கி, ஆயுளுக்கும் இனிமேல் மீண்டு வர முடியாத தண்டனை த்தீவை நோக்கி ஒருவழிப்பயணம் மேற்கொண்டார்கள்.

இங்கே இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மாப்பிளாக்கள், மலபாரின் எரநாட்டை சேர்ந்த மக்கள், தொடர்ந்து அத்தீவுகளில் வசிக்குமாறு காலம் கட்டாயப்படுத்தியபோது, தங்கள் சொந்த கேரள மண்ணின் ஊர்களின் பெயர்களையே இந்த ஊர்களுக்கும் சூட்டினார்கள் - காலிக்கட், வாண்டூர், மன்னார்கட், திரூர், மஞ்சேரி என.

இப்போதோ காலிக்கட் என்ற பெயர் வரலாற்று ஏடுகளிலும் மூத்த குடிமக்களின் நினைவிலும் மட்டுமே உள்ளது, ஏனெனில் கேரளாவின் காளிக்கட், கோழிக்கோடு என்று பெயரை மாற்றிக்கொண்டுவிட்டது. ஆக இப்போது உலக வரைபடத்தில் இருக்கின்ற காளிக்கட் என்ற ஊர் கேரளாவில் இல்லை, மாறாக தெற்கு அந்தமான் தீவுகளில் தலைநகர் போர்ட் ப்ளேயருக்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது!

தமது அரசுக்கு தொந்தரவாக இருக்கின்றவர்களை குற்றவாளிகள் என அறிவித்து தனிமைப்படுத்த மட்டுமே 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் கண்டுபிடித்த ஒரு தீவுதான் அந்தமான் தீவுகள். இரண்டாவது உலகப்போரின் போக்கில் 1942-45 காலகட்டத்தில் ஜப்பானியர் வசம் இத்தீவு இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இத்தீவுக்கு வந்துள்ளார். இந்திய தேசிய ராணுவத்தின் INA கொடியை அங்கே ஏற்றினார். கோழிகோட்டின் எரநாடு மாப்பிளாக்களை ஆயுள்தண்டனை கைதிகளாக இங்கே குடியேற்றியது பிரிட்டிஷ் ஆட்சி. ஆக இத்தீவை தண்டனைக்குடியேற்றமாக மட்டுமே பிரிட்டிஷார் பயன்படுத்தினார்கள்.

தொடக்கத்தில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வெள்ளையர்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay நாடு கடத்தினார்கள். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்தியர்களை அந்தமான் தீவுக்கும் கரக்பூர் அருகிலுள்ள ஹிஜிலி கேம்புக்கும் Hijli Camp அனுப்பினார்கள். அவை கொடும் தண்டனைக்குரிய சிறைகள். பின்னாட்களில் சிங்கப்பூருக்கும் பாட்டனி வளைகுடாவுக்கும் அனுப்பி அந்த பூமிகளை கைதிகளை கொண்டே செப்பனிட்டார்கள். கைதிகள் மிகக்கடுமையான உழைப்பை செலுத்தினர். இந்தியர்களின் காய் கால்களில் எப்போதும் இடப்பட்டு இருந்த சங்கிலிகள் எழுப்பிய க்ளிங் என்னும் ஓசை காரணமாக, இந்தியர்களை அங்கே இருந்தோர் க்ளிங் என்று அழைத்ததாகவும் தெரிகின்றது.

சாதிய மனநிலையில் ஊறிய இந்து மத்திய தர வர்க்க அரசியல் கைதிகள் உடலுழைப்பு அனுபவம் இல்லாதவர்கள். மேலும் இந்துமத நம்பிக்கை, கடல்கடந்து பயணிப்பது பாவம் என்று சொல்கின்றது. இவை இரண்டும் வெள்ளையர்கள் சிந்தனையில் 'இவர்களுக்கு இப்படி ஒரு தீவாந்தர தண்டனையை கொடுத்தால் என்ன' என்று சிந்திக்க தூண்டியது.

அந்தமானை ஒரு தண்டனைக்குடியேற்றமாக penal settlement மாற்றும் திட்டம், கிழக்கிந்திய பகுதியில் ஒரு கடல் வழியை கண்டறிந்தபின் 1789இல் தொடங்கியது. ஆனால் குடியேற்றத்துக்குப்பின் தீவில் சந்தித்த கொடும் நோய்கள், ஒத்துக்கொள்ளாத புதிய தட்பவெப்ப சூழல் ஆகியவற்றால் நிகழ்ந்த மரணங்களுக்கு பிறகு 1796இல் கைவிடப்பட்ட து. அடுத்த 60 வருடங்களும் சமகால மனிதர் தீண்டாத தனி தீவாகத்தான் அந்தமான் இருந்தது. 60000 வருடங்களுக்கு முன் அங்கே குடிபுகுந்த நம் மூதாதையர் ஆன ஆதிவாசிகள் ஏற்கனவே அங்கே இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்கின்றேன். 1857 சிப்பாய் கிளர்ச்சிக்கு பின் இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் போக்குகள் காரணமாக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, சிறைகளில் இடம் இல்லாமல் போனது. 1858க்கு பிறகு அந்தமானில் மீண்டும் குடியேற்றம் தொடங்கியது. மூன்றாம் வகுப்பு, அதற்கு கீழான நிலையில் இருந்த கைதிகள், அரசின் கஜானாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கைதிகளை கொண்டு தீவை செப்பனிட தொடங்கினார்கள். தீவின் பழங்குடிகளை அவர்களது பாரம்பரிய இடங்களில் இருந்து வெளியேற்றினார்கள். ஓரளவு கட்டுமானங்கள் உருவானபின் மூன்றாம் வகுப்பு கைதிகள் இரண்டாவது நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள், காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே உள்ள நிலப்பரப்பில் தங்கி வாழ அனுமதிக்கப்பட்டார்கள். இது சற்றே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கவே, இந்தியாவில் தங்கள் சொந்த ஊர் மக்களுக்கு இச்செய்தியை தெரிவிக்கவே, அந்தமானுக்கு குடிபுக கைதிகள் தாமாகவே முன்வந்தார்கள்! இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்காத நிர்வாகம், கெடுபிடிகளை அதிகரித்தது. இதன் பின்னர்தான் நட்சத்திர மீன் வடிவிலான செல்லுலார் சிறை கட்டும் திட்டம் உருவானது. இங்கே அரசின் ஆதரவில் மட்டுமே வாழ முடிந்த கைதிகளையும் கொடும் கிரிமினல் குற்றவாளிகளையும் அடைக்க திட்டமிட்டார்கள்.

1910இல் கட்டி முடிக்கப்பட்ட செல்லுலார் சிறையில் 698 தனியறைகள் இருந்தன. 15x9 அடி பரப்பளவு, 10 அடி உயரத்தில் ஒரு ஜன்னல். இங்கே ஒருமுறை வந்த எவரும் மீண்டும் வெளியே வருவதும் தீவில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதும் கனவிலும் நடக்காதது. 6 மாத தனிமைச்சிறை, பின் நான்கரை வருட கூட்டுழைப்பு, பின் 5 வருடக்கூலி உழைப்பு, அடுத்த 10-15 வருடங்களுக்கு தன்னைத்தானே சமாளிக்கும் திறனுடன் அரசின் உதவியோடு தீவில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பது, இதன் பின் சொந்த ஊருக்கு திரும்பலாம்.

பெண் கைதிகளுக்கு மூன்று வருட தண்டனை, அதன் பின் தீவிலுள்ள யாரையாவது திருமணம் செய்துகொள்ளலாம், அல்லது 15 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பலாம், அல்லது கணவனின் தண்டனைக்காலம் முடியும்வரை காத்திருக்கலாம். டேவிட் பாரி David Barry என்ற சிறை கண்காணிப்பாளர் மிக கொடூரமான மனிதனாக இருந்துள்ளான். குறிப்பாக அரசியல் கைதிகளை தொடக்க காலத்தில் மிகக்கொடுமையாக நடத்தியுள்ளான், தாங்கள் பிறந்ததே பாவம் என்று கைதிகள் குமைந்து வருந்தும் அளவுக்கு கொடுமைகள் இழைத்துள்ளான்.

1924 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிம்ப்சனுக்கு ரிச்சர்ட் அளித்த பதில்: கடந்த ஜூலையில் போர்ட்பிளேயரில் மட்டும் 1235 மாப்பிளாக்கள் இருந்தார்கள். 72 பேர் செல்லுலார் சிறையில், 12 பேர் விடலைகள், 40 பேர் விவசாயிகள், தங்கள் வாழ்க்கையை தாங்களே சமாளித்து கொள்பவர்கள், மீதியுள்ளோர் கைதிகள் அடைக்கப்படும் இடத்தில். மாப்பிளாக்களை பிற கைதிகளிடம் இருந்து பிரிக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால் தொடக்க காலத்தில் செல்லுலார் சிறைவாச காலம் அடிக்கடி குறைக்கப்பட்டது. அந்தமானில் வாழ்வதற்கு, தனியாகவோ குடும்பத்துடனோ, விருப்பப்பட்டால் அதற்கு அரசு அனுமதி வழங்கியது, தீவுக்கு வருவோரின் பயணச்செலவை அரசே ஏற்றுக்கொண்டது. 

மலபாரில் இருந்து அந்தமானுக்கு வந்தவர்கள் 1133 கைதிகள். இவர்களில் 379 பேருக்கு 'தம் வாழ்க்கையை தாமே சமாளித்துக்கொள்ளும் வல்லமை உடையவர்கள்' என்ற தகுதியை நிர்வாகம் 1926இல் வழங்கியது. அந்தமானை தண்டனை குடியேற்றம் என்ற நிலையில் இருந்து சுயவிருப்ப குடியேற்றம் voluntary settlement என்று பிரிட்டிஷ் அரசு உயர்த்தியது. மனைவியருக்கும் உறவினருக்கும் பயணக்கட்டணத்தை அரசே வழங்கியது. பண்டிகைகள் கொண்டாட, வழிபாட்டு தலங்கள் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அரசின் முதலாவது அறிக்கையின்படி, 1302 கைதிகளில் 90 பேர் இறந்தனர், 79 பேர் இந்தியாவில் சொந்த ஊருக்கு திரும்பினர், மீதி 1133 பேரில் 754 பேர் உடலுழைப்பு கைதிகள், 379 பேர் தங்களை தாங்களே சமாளித்து கொள்பவர்கள். மற்றொரு அறிக்கையின்படி 1932இல் மாப்பிளாக்கள் என்போர் 1885 கேரள முஸ்லிம்கள். இவர்கள் காலனிய அரசுக்கு எதிராகவும் இந்து மத நிலச்சுவான்தார்களுக்கு எதிராகவும் மாப்பிளா கிளர்ச்சியை நடத்தியவர்கள் (Dhingra, 2005:161). இவர்களை மறுசீரமைக்கவே 1921-26 காலக்கட்டத்தில் அந்தமானுக்கு கொண்டுவந்தார்கள், விவசாய நிலத்தில் குடியேற்றப்பட்டார்கள் (Mukhopadhyay, C, 2002:29). தம் சொந்த மதத்தை பின்பற்றவும் சொந்த ஊரின் பண்பாட்டை பின்பற்றவும் அனுமதிக்கபட்டார்கள். 1920களில் தம் சொந்த ஊரின் மலையாள மொழி உரையாடலின் சாயலையே இங்கும் பேசினார்கள் என சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றுள்ள அந்தமானில் நாம் பார்க்கும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையோர் மாப்பிளா சமூக மக்களே. 1921இல் தொடங்கிய இந்த இடப்பெயர்ச்சி 1926இல் முடிந்தது. 1931 மக்கள்தொகையின்படி, 1885 மாப்பிளாக்கள் இருந்துள்ளார்கள், 1171 ஆண்கள், 714 பெண்கள். பிற தகவல்கள், 2500 பேர் அங்கே குடியேறினர் என்று சொல்கின்றன. தண்டனைக்காலம் முடிந்த பிறகும் கூட கேரளா திரும்பாமல் தம் குடும்பங்களை அங்கே அழைத்துக்கொண்டனர். ஆக அந்தமான் தீவுகளை செப்பனிட்டு பல கிராமங்களை உருவாக்கியதில் மாப்பிளாக்களின் பங்கு மிகப்பெரியது.

ஒரு கைதி தன் தாயாருக்கு எழுதிய கடிதம் மூலம் ஒரு விசயம் தெரியவந்தது. 1925 ஜூன் 20 அன்று 25 மாப்பிளாக்கள் மலபாருக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந்தமானில் இருந்த தண்டனைக்கைதிகளின் குடும்பத்தை தேடி வந்தார்கள். விளைவாக 300 குடும்ப உறுப்பினர்கள் அந்தமானுக்கு இடம் பெயர்ந்தார்கள். அதே கைதி இரண்டு மாதங்களுக்கு பின் எழுதிய கடிதத்தில், பெங்களூருக்கு அருகில் உள்ள பெல்லாரி சிறையில் இருந்த 400 கைதிகள் தம் குடும்பத்தாருடன் அந்தமானுக்கு குடியேற விண்ணப்பித்த விவரம் உள்ளது. அந்தமானில் மவுண்ட் ஹாரிட் Mt.Harrit க்கு மேற்கே உள்ள கிராமங்களில் குடிபுகுந்தார்கள். தங்களது கிராமங்களுக்கு தமது சொந்த (கேரள) மண்ணின் கிராமப்பெயர்களையே சூட்டினார்கள் என்பதை தொடக்கத்தில் பார்த்தோம்.

தெற்கு அந்தமான் பகுதி இவ்வாறான கைதிகளால் குடியேற்றமானது. விரைவிலேயே மேலும் பல மாப்பிளாக்கள் இரண்டாம் தரத்துக்கு உயர்த்தப்பட்டு தங்களை தாங்களே சமாளித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் கொடும் சிறைகொடுமைகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து நிலைமை மோசமானது. 1939இல் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின்னும் போரில் ஜப்பான் 1941இல் இறங்கிய பின்னும் அந்தமானில் நிலைமை முற்றிலும் தலைகீழானது. போர்ட்பிளேயர் மீது ஜப்பானியர் 1942இல் குண்டு வீசினர். மார்ச் 1942இல் பிரிட்டிஷ் நிர்வாகம் வெளியேறியது, ஜப்பானியர் வசம் வந்தது. அப்போது 6000 கைதிகளும் அந்தமானிலேயே பிறந்த 12000 குடிமக்களும் இருந்தார்கள். தொடக்கத்தில் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்த ஜப்பானியர் பின் வந்த நாட்களில் இந்தியர்களை கொடுமை செய்தனர். உணவுப்பற்றாகுறையை சரிக்கட்டவே இந்த கொடுமைகள் நடந்தன. இதற்கு Operation Baldhead என்று திட்டமிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு ஆதரவானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரையும் ஜப்பானியர் சுட்டுக்கொன்றனர்.


காலம் ஓடியது. அந்தமானின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக மாப்பிளாக்கள் இருந்தனர். சிலர் தமது கடந்தகால வரலாற்றை நினைவுகூர மற்றவர்கள் அது குறித்து பேச விரும்பவில்லை. மதமும் விவசாயிகள் போராட்டமும் பிணைந்து ஒரு கிளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்ல, விளைவாக பல அப்பாவிகள் உயிரையும் உடைமைகளையும் இழக்க, இறுதியாக தம் சொந்த மண்ணில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள தீவில் வந்து குடியேற, இக்கொடுங்கதையை நினைப்பதை விடவும் மறப்பது எளிது என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.

மிகச்சரியாக சொன்னால், அந்தமான் என்றாலே இப்போதும் அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடியவர்களை நாடுகடத்தி சிறைவைக்க பயன்பட்ட ஒரு தீவாகவே அறிகின்றோம். ஆனால் Strange இன் கூற்று வேறுமாதிரி உள்ளது: அங்கே அரசியல் கைதிகளாக குடியேற்றப்பட்டவர்கள் சுமார் 500 பேர் மட்டுமே. அவர்களில் பலரும் பின்னர் மையப்பகுதி இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்கள். மாப்பிளா சமூகம் உள்ளிட்ட பிற சாதாரண கைதிகள் பல்லாயிரம் பேர்கள்தான் அந்தமானில் நிரந்தரமாக குடியேறியவர்கள், இன்று நாம் பார்க்கும் அழகிய தீவுகளை உருவாக்க உழைத்து சோர்ந்தவர்கள் இவர்கள்தான்.

- மு இக்பால் அகமது

புகைப்படங்கள்: அந்தமான் சிறையும் ஒரே நேரத்தில் மூவரை தூக்கில் இடக்கூடிய கொட்டடியும் (படங்கள் நான் எடுத்தவை)



சனி, செப்டம்பர் 11, 2021

மாப்பிளா கிளர்ச்சி (4)


(சலீல் இலக்கில் அவர்களின் பதிவின் தமிழாக்கத்தை தொடர்கின்றேன்)

5. கோணோம்பாற சீரங்கந்தோடி அரீப்புரம் பாரக்கல் சக்காரியாவின் பரம்பரை வீட்டுக்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜி, அவர் மகன் ஆயாமு, மகள் கடியாமு, மருமகன் நானத் இஞ்ஞாலி ஆகியோர். நோய்வாய்ப்பட்டு இருந்த ஹாஜி, பிரிட்டிஷாரின் கண்ணில் படாத இடத்தில் தன்னை மறைத்து வைக்குமாறு சொன்னார். நோயாளியான அவருக்கு பிரிட்டிஷார் துன்பம் தர மாட்டார்கள் என்றுதான் குடும்பத்தின் பிறர் எண்ணியதாக  ஆயாமுவின் பேத்தி பாத்திமா சொல்கின்றார். ஆயாமுவின் மகன் வாப்பு ஹாஜி (அப்போது இவருக்கு வயது 14)யும் நண்பன் நானத் குஞ்ஞாலாவியும் பெண் உடையணிந்து பிற பெண்களோடு கலந்து வைக்கப்பட்டதால் தப்பினர். 

வல்லிக்கடன் குடும்பத்தில் ஒருவர் மிக மோசமாக காயம் அடைந்துள்ளார். நான்கு நாட்களாக காயத்துடன் போராடியுள்ளார். பாப்பு ஹாஜி என்னும் சிறுவன், அவருக்கு குடிக்க நீர் கொடுத்துள்ளான். ஆனால் அருந்தி ய நீர் முழுமையாக வெளியேறிவிட, கவனிக்க யாருமற்ற நிலையில் நான்காம் நாள் உயிரிழந்தார், அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். காலம் ஓடிவிட்டது, அவரது கல்லறையும் மறந்துவிட்டது.

6. கோணோம்பாறவில் சந்தைக்கு பின்புறம் உள்ள அடக்க ஸ்தலத்தில் நரிப்பட்ட கபூர் குடும்பத்தை சேர்ந்த இருவர் அடக்கம் செய்யப்பட்டனர். நரிப்பட்ட கபூர் அகமது, அவர் மகன் போக்கர் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டபின் இருவரும் தப்பியோடி காய்ந்த சருகுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர். அகமதுவின் மற்றுமொரு மகன் குஞ்ஞாலாவி பிடிபட்டு அந்தமான் தீவுக்கு கொண்டுக்குச்செல்லப் பட்டார். அகமதுவின் பேரன் அலாவி (மொய்தீன் குட்டியின் மகன்) தன் குடும்பத்துடன் இங்கே வசிக்கின்றார்.

7. மேல்முறி வலியட்டபாடி நம்பன்குண்ணன் முகம்மது அலி வீட்டின் கொல்லையில் அவர் தாத்தாவின் தந்தை அலாவி அடக்கம் செய்யப்பட்டார். மிக வயதான அவரை வேறு யாரும் சுமந்து செல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால், சிறிய ஜன்னல் வழியே வெளியே வந்துள்ளார். பிரிட்டிஷாரின் கையில் பிடிபட்ட பின்னர் தன்னை சுட்டுக்கொல்வது உறுதி என்று தெரிந்த பின் தொழுகை நடத்த ஆயத்தம் ஆனார். தன்னை நீரால் சுத்தப்படுத்திக்கொண்டு மேற்குத்திசை நோக்கி நின்றார் என்று உறவினர் மொய்தீன் (87 வயது) கூறுகின்றார். பிரிட்டிஷாரின் பீரங்கிகள் தாக்கியதில் அங்கே இருந்த தென்னை மரங்கள் மொட்டையாக இருந்தன என்று அவர் சொல்கின்றார்.  சுட்டுக்கொல்லப்பட்ட  அலாவியின் உடலை, பெண்கள்தான் இரவில் குழி தோண்டி அடக்கம் செய்ததாகவும் இரண்டு அடி ஆழம் மட்டுமே அவர்களால் தோண்ட முடிந்தது என்றும் சொல்கின்றார்.

8. கபூர் உஸ்மானின் வீட்டு கொல்லையில் கபூர் குடும்பத்தின் இருவர், கபூர் இத்தீரும்மாவின் தந்தையின் சகோதரர், தாத்தா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டனர். இத்தீரும்மாவுக்கு குழந்தைகள் இல்லை, சமீபத்தில்தான் அவர் காலமானார். இருவரும் முறையே கபூர் உஸ்மானின் தாத்தா ஆன இஸ்மாயில் என்ற இதேலுவின் சகோதரரும் மகனும் ஆவர். இத்தேலு பிடிபட்டார், ஆந்திராவில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கேயே இறந்தார். அவர்களின் பரம்பரை வீட்டுக்கு பிரிட்டிஷார் தீ வைத்து அழித்தனர். வீட்டின் இடிபாடுகளை  இடித்தபோது பிரிட்டிஷாரின் துப்பாக்கி தோட்டாக்கள் சுவரில் புதைந்து இருந்ததை கண்டுபிடித்ததாக உஸ்மானின் தந்தை முகம்மது ஹாஜி நினைவுகூர்ந்துள்ளார்.

9. மேல்முறி முட்டிப்பாடி மத்திய தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள மடாம்பி உபையத்தின் வீட்டின் அருகே நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். மடாம்பி குஞ்ஞாரமு, மடாம்பி மாமுண்ணி, காடேறி மூஸா ஹாஜி, சேர்க்காடன் மொய்தீன் ஆகிய நால்வர். மடாம்பி குடும்பத்தின் பரம்பரை வீட்டின் முற்றத்தில் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் இந்த வீட்டை செப்பனிட்ட போது சுவர்களில் தோட்டாக்கள் புதைந்து இருந்ததை கண்டுபிடித்தார்கள். மூஸா ஹாஜியின் மகன் ஆன மம்முது ஹாஜிதான் இந்த நிலத்தை விலைக்கு வாங்கி, நிலம் பறிபோகா வண்ணம் அதை தன் தாயார் இயாத்துக்குட்டி ஹஜும்மாவின் பெயரில் ஆலத்தூர்பாடியில் உள்ள மசூதிக்கு வக்பு கொடையாக அளித்துள்ளார். இக்குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் உமர் மேல்முறி இத்தகவலை தருகின்றார்.

பெரும்கொல்லன் சாதியை சேர்ந்த சிலர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். தட்டாந்தோடி அருகே உள்ள வைஷ்யர்தோடியில் வசித்து வந்தார்கள். இவர்களின் தலைமுறையை சேர்ந்த மூவரை பிரிட்டிஷ் ராணுவம் சுட்டுக்கொன்றது. அவர்களின் வீட்டுக்கு தீ வைத்தது. வீட்டின் கிணற்றருகே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கல்லறைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று ஆலத்தூர்ப்பாடியை சேர்ந்த பி டி முகம்மது மாஸ்டர் கூறுகின்றார்.

.... ..... ...... .....

பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?

மலபார் கிளர்ச்சியின் தலைவர் அலி முஸ்லியாரின் செல்வாக்கு மேல்முறியிலும் அதிகாரித்தோடியிலும் பலமாக இருந்ததுதான் அப்பகுதிகளை பிரிட்டிஷார் தம் இலக்காக ஆக்கியமைக்கு காரணமாகும்.  தார் (Dar) எனப்படும் இஸ்லாமியக்கல்வி மையங்களை மேல்முறி பொடியாட் பரம்மலிலும் பின்னர் மேல்முறி ஆலத்தூர்ப்பாடியிலும் முஸ்லியார் நடத்திவந்தார். மூன்று வருடங்கள் இப்பகுதியில் அவர் இருந்தார் என்பதால் இயற்கையாகவே அப்பகுதி மக்களிடம் செல்வாக்கை வளர்த்து இருந்தார். காங்கிரஸ் கிலாபத் இயக்கத்தின் கோழிக்கோடு தாலுக்கா தலைவர் பழக்கம்தோடி அபூபக்கர் முஸ்லியார் மலபார் கிளர்ச்சி இயக்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், அவர் பொடியாட்டின் தாரில் இருந்த அலி முஸ்லியாரின் மாணவர் (A K Kodoor,  page 98). மலபார் கிளர்ச்சியின் பல தலைவர்கள் இளவயது அறிவாளிகள், அலி முஸ்லியாரின் மாணவர்கள்.

அலி முஸ்லியார் தவிர மற்றுமொரு குறிப்பிடத்தக்ககிளர்ச்சி த் தலைவர் வரியன்குன்னத் குஞ்ஞாகமது ஹாஜி, இவர் தலைமறைவாக இருந்தபோது மேல்முறிக்கு பலமுறை ரகசியமாக வந்து சென்றுள்ளார். தத்தையில் குடும்பத்தின் மாடம்பி முஹம்மது, தன் தந்தை தன்னிடம் கூறியதாக சொல்கின்றார்: குஞ்ஞாகமது ஹாஜி ஒருநாள் இரவில் வந்து அரிசிக்கஞ்சி கேட்டார்,கஞ்சி இல்லாமல் போகவே தேங்காய் சில்லுகளை வைத்துக்கொண்டு  பழைய சோறு மட்டுமே உண்டார். (Nisar Kaderi,  page 23). 

பிரிட்டிஷார் இப்பகுதியை குறிவைத்து தாக்கியமைக்கு பூக்கோட்டூர் போர்க்களம் மற்றொரு காரணம். 1921 ஆகஸ்ட் 21 அன்று நடந்த சண்டையில், மாப்பிளாகள் ஒருபுறமும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆயுதப்படையான Leinster ரெஜிமெண்ட், சிறப்பு போலீஸ் படை ஆகியன மறுபுறமும் மோதியதில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாப்பிளாக்கள் முறியடிக்கப்பட்டார்கள். பூக்கோட்டூர் போர்க்கள வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த மலபார் கிளர்ச்சியின் வீழ்ச்சியில் முக்கியமான பங்கை வகித்தது. இக்களத்தில் மாப்பிளாக்கள் பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்தார்கள் என்பது உண்மைதான் எனினும் பிரிட்டிஷ் அரசு இக்களத்தை மிகக் கவலையுடன்தான் பார்த்தது. காரணம், வேறொரு ராணுவம் அல்லது அரசின் உதவி ஏதும் இல்லாத நிலையில் மாப்பிளாகளால் இவ்வுலகத்தின் மிக வலிமையான ராணுவத்தை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதே. பூக்கோட்டூர் கும்பல் எனப்பட்ட மாப்பிளா ராணுவ அமைப்பில் இருந்தவர்கள் முற்காலத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்களுடைய திட்டங்களும் கிளர்ச்சியை ஒருங்கமைத்த விதமும் பூக்கோட்டூர் களத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு மிகப்பெரும் சேதங்களை விளைவித்தது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக இருந்த FB Evans மெட்ராஸ் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். Tottenham , page 48. 1921 அக்ட்டோபர் 20- நவம்பர் 10 இடைக்காலத்தில் கொண்டோட்டி, மஞ்சேரி, அரீகோட், மலப்புரம் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பகுதியாகவே மேல்முறி-அதிகாரித்தோடி படுகொலைகள் இருந்தன, அதன் உடனடி நோக்கம் பூக்கோட்டூர் கும்பலையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் பிடிப்பதுதான். Tottenham, page 40.

அவ்வாறெனில் உண்மையான நோக்கம் என்ன? பூக்கோட்டூர் கும்பலை ஒழித்துக்கட்டவே இந்த படுகொலைகள் என்று சொல்லிக்கொண்டாலும், கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மாப்பிளா மக்களை அச்சுறுத்துவதே இப்படுகொலையின் உண்மையான நோக்கம்.  கிளர்ச்சியில் தாங்கள் பங்கு பெறாததால் பிரிட்டிஷ் ராணுவம் தங்களுக்கு தீங்கு செய்யாது என்று நம்பியவர்களையும் ராணுவம் தீர்த்துக்கட்டியது. நானத் குருவயில் மொய்து அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர். இவ்வாறு ஒரு பயங்கரத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு செய்தியை எச்சரிக்கையாக அனுப்பியது - பிரிட்டிஷ் ஆதரவாளராக இருங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்.

பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள் கூட படுகொலைக்கு ஆளானவர்கள் அப்பாவிகள் என்றுதான் சொல்கின்றன. அன்றைய அரசின் கீழமை செயலாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "....அக்ட்டோபர் 25 அன்று மேல்முறியில் 246 மாப்பிள்ளாகளை Dorset படையினர் படுகொலை செய்தார்கள். இவர்கள் அனைவருமே கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் இப்படுகொலைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உருவாக்கிவிட்டதை பார்க்க முடிந்தது. படுகொலைகள் நிகழ்ந்த பின்னர் உடனடியாக, மலப்புரத்தின் சுற்று வட்டார அம்சங்களில் (கிராம நிர்வாக அமைப்பு) இருந்து அரசுக்கு வந்த மனுக்களை பார்த்தால், அவை அரசுடன் ஒத்துழைப்பதாக எழுதப்பட்டு இருந்தன". ஹிட்ச்காக்கின் பதிவு, டார்செட் படையினர் அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து மாப்பிளாகளை பிடித்ததாக சொல்கின்றது. தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பு அளிக்கும் எனில் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் ஆயிரம் பேர் சரணடைய ஆயத்தமாக இருப்பதாக மலப்புரம் காஜி மனு எழுதியாக நவம்பர் 2 அன்று Evans மெட்ராஸ் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். Tottenham page 257.

...... ....... ......

மவுனத்தின் வரலாறும் வரலாற்றின் மவுனமும்

ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் Saidiya Hartman தனது முதல் நூலான Scenes of subjection னில் இப்படி குறிப்பிடுகிறார்: ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து கடத்தி செல்லப்பட்ட அடிமைகளின் அவல ஓலத்தை விடவும் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி சமாதி ஆன பல்லாயிரம் அடிமைகளின் மவுனம் மிக உரத்தது. இப்போது வரலாற்றில் இடம்பெற்றுள்ள வாக்குமூலங்களின், வரலாற்றின் அடிப்படையில் ஆன ஆவணங்களை விடவும் பதிவு செய்யப்பட வேண்டியவை எவை எனில் பெருங்கடலில் மூழ்கி உயிரை இழந்த பல்லாயிரம் அடிமைகளின் குரல்கள்தான்.

ஹார்ட்மானின் கூற்று சரி எனில், மேல்முறி அதிகாரத்தோடியில் உயிரை இழந்த 200 பேர்களின் வரலாற்றை எதன் ஆதாரத்தின் பேரில் எழுதுவது? 40 பேர்களின் சமாதி ஒன்றைத்தவிர?  சான்றுகள் எதையும் விட்டு வைக்காமல் மூழ்கி சமாதி அடைந்தவர்கள் ஒரே ஒரு செய்தியை விட்டு செல்கின்றார்கள்: வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது.  மலபார் கிளர்ச்சி என்பது  நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம். எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சான்றுகளையும் தாண்டி சான்றுகளும் எச்சங்களும் இன்றி மறைந்து போனவர்களின் வரலாற்றை தோண்டி ஆய்வதன் முக்கியத்துவத்தையே மலபார் கிளர்ச்சியின் இந்த மையமான பகுதி நமக்கு உணர்த்துகின்றது.

(முற்றும்)

- மு இக்பால் அகமது

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

மாப்பிளா கிளர்ச்சி (3)

மாப்பிளா கிளர்ச்சி (3)

மலபார் புரட்சியின் போக்கில் பெண்கள், குழந்தைகள், முதியோர்க்கு பிரிட்டிஷ் ராணுவம் இழைத்த கொடுமைகளில் பலவும் பொதுவெளியில் ஆவணப்படுத்தப்படாமலேயே போயின. மேல்முறி - அதிகாரத்தோடி நிகழ்வில்  பெண்கள், குழந்தைகள், முதியோர் சந்தித்த கொடுமைகள், போர்க்காலங்களின்போது பின்பற்ற வேண்டிய பொதுவான கட்டுப்பாடுகளை மீறியவை ஆகும். தங்கள் தந்தையரை பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்சென்றபோது தடுக்க முனைந்த இரண்டு மகள்களின் கல்லறைகளும் அங்கே உள்ளன.

அதிகாரத்தோடியில் இருந்த கீடக்கடன் குடும்பத்தை சேர்ந்த 11 வயதுக்குழந்தை அவள். வீட்டுக்குள் புகுந்து தன் தந்தையை பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது இவள் அவரை கட்டிப்பிடித்து இழுத்திருக்கின்றாள், அப்போது இரக்கமின்றி துப்பாக்கியின் பின் கட்டையால் அவளை அடித்திருக்கின்றார்கள். அதையும் மீறி அவள் தன் தந்தையை இறுக தழுவி இருந்ததால் இருவரையும் பிரிக்க முடியாத நிலையில் இருவரையும் ராணுவம் சுட்டுக்கொன்றது. தன் அம்மாவழிப் பாட்டியின் வீட்டுக்கு வந்தபோதுதான் இருவருக்கும் இந்த கொடுநிலை ஏற்பட்டுள்ளது.

கோணோம்பாற சீரங்கந்தோடியை சேர்ந்த அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜியின் மகள் கடியாமு. திருமணம் ஆன அவள், நோய்வாய்ப்பட்டு இருந்த வயதான தன் தந்தையை கவனித்துக்கொள்ள வந்திருந்தாள் கடியாமு. பத்தாயம் எனப்படும் பெரிய  மரப்பெட்டியின் மீது படுத்துக்கொண்டு இருந்த தந்தையை, பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது தடுக்க முனைந்த அவளை துப்பாக்கியின் பின்கட்டையால் தாக்கியுள்ளனர்.  வலுக்கட்டாயமாக அவரை இழுத்து சென்று வீட்டின் கிழக்கு முற்றத்தில் தரையைப் பார்த்ததுபோல படுக்கச்சொல்லி ஆனையிட்டுள்ளனர். தன் தந்தையை சுட்டுவிடுவார்கள் என்று அறிந்த கடியாமு, அவர் மீது கட்டிப்பிடித்து படுத்துள்ளாள். ராணுவம் இருவரையுமே சுட்டுக்கொன்றது. இந்த இரு வீராங்கனைகள் பற்றி நம் வரலாற்றுப்பக்கங்களில் எதுவும் சொல்லபடவில்லை. மாப்பிளா வரலாறு குறித்த, மாப்பிளா சமூக பெண்கள் குறித்த வரலாறு திட்டமிடப்பட்டவகையில் மறைக்கப்படுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வுகள்  உதாரணம். 

மேல்முறி-அதிகாரத்தோடி படுகொலைகள் குறித்து பொதுவான வரலாறு மவுனமாக இருக்கின்றது, ஆனால் மலபார் முஸ்லிம் சமூகத்தின் கிசாப்பாட்டுகளில் இந்த நிகழ்வை அந்த மக்கள் பாட்டாக பாடி பதிவு செய்துள்ளார்கள். யோக்யன் ஹம்ஸா மாஸ்டர் என்ற கிசாப்பாட்டு நிபுணர், விடுதலைப்போராட்ட வீரர் முகம்மத் அப்துர் ரஹ்மானைப் போற்றி எழுதிய அப்துர் ரஹ்மான் கிசாப்பாட்டு என்ற பாடலில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார். 

இப்பாடலின் பொருள் இது: மேல்முறியில் கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக்கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள், ஒரு விசாரணையும் இன்றி.

.... .... .... .......

ஒன்பது சவக்குழிகள்:

1. அதிகாரித்தோடி வட்டப்பரம்பில் இருக்கும் அரீப்புரம் பாரக்கல் கோயாகுட்டி ஹாஜியின் வீட்டு முற்றத்தில் தோண்டப்பட்ட குழியில் 11 பேர் புதைக்கப்பட்டனர். அவர்களின் விவரம்: அவரது தாத்தா அரீப்புரம் பாரக்கல் அகமது குட்டி ஹாஜி, அவர் சகோதரர் மொய்தீன் குட்டி ஹாஜி, குட்டிரயீன், மரைக்காயர், கொங்காயன் அலாவி, கீடக்காடன் குடும்பத்தின் ஒரு ஆணும் அவர் மகளும். அவள் 11 வயதே ஆனவள், சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

அகமது குட்டி ஹாஜியின் மகள் ஆயிஷா அப்போது 4 வயது சிறுமி. பிற்காலத்தில் அவர் தன் மகன் யோக்யன் ஹம்ஸா மாஸ்டருக்கு இந்த சம்பவங்களை பற்றி சொல்லியிருக்கிறார், மாஸ்டர் கிசாப்பாட்டு எழுதுபவர், பாடுபவர். மாஸ்டர் 2017இல் தன் 102ஆவது வயதில் காலமானார். வீட்டில் இருந்த அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின் வீட்டுக்கு தீ வைத்தார்கள். பெண்களும் குழந்தைகளும் 

அருகில் இருந்த வாழைத்தோப்புக்குள் சென்றுவிட, ஆண்கள் அனைவரையும் ஓசையடைக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.

அகமது குட்டி ஹாஜியின் நண்பரும் அருகில் வசித்துவரும் ஆன கொங்கையன் அலாவியும்  கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என்று அலாவியின் பேரன் சொல்கின்றார். இவர் தந்தையின் பெயரும் அலாவிதான். நான்கு தலைமுறைகளிலும் ஒருவருக்கு அலாவி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஏமன் நாட்டில் இருந்து மாம்புரத்தில் தங்கி அங்கேயே வசித்துவந்த மாம்புரம் சையத் அலாவி தங்ஞள் என்ற இஸ்லாமிய அறிஞரின் நினைவாகவே இப்படி பெயர் சூட்டப்படுகின்றது. ஆன்மிகம், மதம், சமூகம் தொடர்பான விசயங்களைப் பற்றி அவருடன் உரையாடுவதற்காக மக்கள் அவரை சந்திப்பது வழக்கம். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியததுக்கு எதிரான நிலை எடுத்திருந்தார் என்பதால் அவர் புகழ் பெற்றிருந்தார். மாம்புரத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூண், கேரளாவின் புகழ்பெற்ற புண்ணிய யாத்திரைதலங்களில் ஒன்று.

வீட்டின் முற்றத்தில் அமைந்துள்ள செவ்வோடு குவாரியில் பாய்கள் விரிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அவற்றில் கிடத்தப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டனர்.

2. கபூர் குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரித்தோடியில் அமைந்துள்ள அரசு மாப்பிளா உயர் தொடக்கப்பள்ளியின் பின்னால் இருந்த நிலத்தில் குழி தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட்டனர். கபூர் முண்டசேரி யூசுப், அவர் மகன் போக்கர், கபூர் மூசம், ஆயமுட்டி, மம்முது ஆகிய அந்த ஐவரின் வாரிசுகள் ஒருவர் கூட இப்போது அந்த ஊரில் இல்லை.

3. நானத் குருவயில் ஹம்சாவின் வீட்டுக்கு அருகில் குழிதோண்டப்பட்டு அறுவர் புதைக்கப்பட்டனர். ஹம்சாவின் அப்பாவழி தாத்தாவான நானத் குருவயில் மொய்து, அவர் சகோதரர் குஞ்ஞி மரைக்காயர், மாடம்பி குஞ்ஞி முகம்மது ஆகியோர் உட்பட அறுவர்.

நானத் குருவயில் மொய்து தன் வீட்டுக்குள் உட்கார்ந்து குர் ஆன் வாசித்துக்கொண்டு இருந்தார். தாங்கள் ஒரு சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை என்பதால் கவலைப்பட அவசியமில்லை என்று நம்பிக்கொண்டு இருந்தார். அவரை ராணுவத்தினர் வந்து பிடித்தபோது 14 வயது மகன் முகம்மது தன் தந்தையின் கையை இறுகப்பிடித்து இழுத்துள்ளான், ஆனால் ராணுவத்தினர் அவனை கீழே தள்ளியுள்ளனர். இத்தகவலை முகம்மதுவின் மூத்த மகன் ஆன மொய்து (82) இப்போது கூறுகின்றார். அங்கிருந்து செல்லும்முன் வீட்டின் கூரையில் ராணுவத்தினர் தீ வைத்துள்ளார்கள். ஹம்சாவின் இப்போதுள்ள வீடு அந்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.

அருகில் கரட்டுபரம்பனில் அப்போது குடியிருந்த தீயர் சமூக மக்கள்தான் அப்போது உதவிக்கு ஓடி வந்தவர்களில் முதன்மை ஆனவர்கள் என்று மொய்து கூறுகின்றார். தீயர் சமூக மக்கள் அப்போது அங்கே நடந்த அனைத்துக் கொடுமைகளையும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. ராணுவம் அங்கிருந்து நகன்ற பின் உடனடியாக ஓடி வந்து வீட்டின் தீயை அணைத்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆன ஈழவர், தீயர் ஆகியோரும் முஸ்லிம் மக்களும் அப்போது யாருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். (தீயர், ஈழவ மக்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களாக அறியப்படுகின்றனர்.)

4. அதிகாரித்தோடி ஆக்கப்பரம்பில் கண்ணன்தோடு என்ற ஊரில் முள்ளப்பள்ளி உம்மர் என்பவர் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்ட குழியில் 5 பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அதிமண்ணில் மம்மூட்டி, வல்லிக்கடன் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் உட்பட ஐவர். மம்மூட்டியின் மகன் குஞ்ஞி முகம்மது பெண் உடை தரித்து தப்பியதாக அவர் மகன் மொய்தீன் (72) கூறுகின்றார். வீட்டில் இருந்த அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செவ்வோடு குவாரிகளில் புதைக்கப்பட்டன.

தொடரும்.