செவ்வாய், ஆகஸ்ட் 31, 2021

வயது 74, ஆனால் பள்ளிக்கல்வியே இன்னும் முழுமையடையவில்லை

வயது 74, ஆனால் பள்ளிக்கல்வியே இன்னும் முழுமையடையவில்லை

(Still short of schooling at 74)

ஆசிரியர்: ழான் டெரெஸ் (Jean Derez) 

இந்திய வளர்ச்சிப்பொருளாதார வல்லுநர்களிடம் இரண்டு விதமான சிந்தனைப்போக்குகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது - ஒன்று, வளர்ச்சியை மையமாகக் கொண்டது, மற்றது வளங்களை பங்கீடு  செய்வதை மையமாக கொண்டது. இந்த பார்வை தவறானது.  வளர்ச்சியும் வளங்களை பங்கீடு செய்வதும் மட்டுமே வளமான உலகுக்கு வழி செய்யாது. 

உதாரணமாக குடிமை சமூக உரிமைகள் மனித வாழ்வுக்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும் என்பது உண்மைதான். எனினும் வளர்ச்சிக்கும் வளமைப்பங்கீடுக்கும் இந்த உரிமைகளால் பெரிய அளவுக்கு உதவி செய்ய முடியாது. மறுபுறம், வளர்ச்சியா வளமைப்பங்கீடா என்ற கேள்விக்கு மேல் மற்றொரு உண்மையும் உள்ளது - சில பொருளாதார கொள்கைகள் இரண்டையுமே முதன்மைப் படுத்துகின்றன. சிறந்த உதாரணம், அனைவருக்கும் தொடக்கக்கல்வி. பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுவது போலவே சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கும் தொடக்கபள்ளிக்கல்வி உதவுகின்றது. தரமான கல்வி என்பது மனித வாழ்க்கை மேம்படவும் பல்வேறு வழிகளில் அவசியமாகின்றது. உதாரணமாக, நம் உடலநலனைப் பேணிக்கொண்டு சமூகத்தின் சகமனிதர்களின் உடல்நலத்தையும் பேணுகின்றோம். இது, 'மூன்று தரப்புக்கும் வெற்றி' என்ற கொள்கை போன்றது. உண்மை என்னவெனில் வளரச்சிப்பாதையின் தொடக்க கட்டத்திலேயே அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி முன்னேறிய நாடுகள் மிகப்பெரிய பலன்களை அடைந்துள்ளன. இந்தியாவில் இதற்கு உதாரணமாக கேரள மாநிலம் உள்ளது.

கடந்த காலத்தில் கல்விக்கொள்கை:

தொடக்ககால ஐந்தாண்டு திட்டங்களில் தொடக்கக்கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. பவுதீக அளவிலான முதலீடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. "புதியதாக தொடக்கப்பள்ளிகளை திறப்பது என்ற முனைப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றுதான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் கூறியது. மாறாக "ஏற்கனவே இருக்கின்ற தொடக்கப்பள்ளிகளை அடிப்படையான கொள்கைகள் மீது புதுப்பித்துக் கட்டமைக்க வேண்டும்" என்றுதான் திட்டமிட்டு இருக்க வேண்டும் (மகாத்மா காந்தி கனவுகண்ட கல்விக்கொள்கைகளின் அடிப்படையில் "தொடக்கக்கல்வித்திட்டம்" என்பதை நினைவில் கொண்டு சொல்கின்றேன்).

வேறு ஒரு காரணமும் உள்ளது. சமூகத்தின் கீழ்சாதியினருக்கு கல்வி என்பது அவசியம் அற்றதும் முக்கியத்துவம் அற்றதும் ஆகும் என்ற பாரம்பரியம் ஆன மேல்சாதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் அக்காலத்தில் கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது மட்டும் என்ன? மேல்சாதியினரும் கிராமப்புறப்பள்ளி ஆசிரியர்களும் "உழைக்கும் வர்க்கங்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது அவசியம் அற்றது, நன்றிக்கு உரியதும் அல்ல" என்று சொல்வதை இப்போதும் நாம் கேட்கின்றோம். "ஏழைகள் கல்வி கற்றால் எங்கள் வயல்களிலும் வீடுகளிலும் யார் வேலை செய்வது?" என்று வெளிப்படையாகவும் வெறுப்புடனும் புலம்புவார்கள்.

விடுதலைக்குப்பின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். 1951இல் பெண்கல்வி 9% தான், 2011இல் அது 65% (1951இல் ஏழு வயதுக்கு மேலும், 201இல் 5 வயதுக்கு மேலும் என்று கொள்க). வரலாற்றுப்பார்வையில் இது மிகப்பெரிய பாய்ச்சல்தான். ஆனால் ஒப்பீட்டளவில் குறைந்த பட்சம் தெற்காசிய நாடுகளின் தர அடிப்படையில் இது திருப்தி அளிக்கும் வளர்ச்சி அல்ல. பல்வேறு சமூகக்கூறுகள், சுகாதார கணக்கீட்டு புள்ளி விவரங்கள் அடிப்படையில், 15-24 வயது வரம்புக்குள் ஆன பெண் கல்வி என்பது இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் ஏறத்தாழ சமமாகத்தான் உள்ளது - 2016இல் 85%. உண்மையில் பங்களாதேஷ், நேபாளம் இரண்டும் இந்தியாவுக்கு வெகு பின்னால்தான் இருந்தன, ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆன  ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி GDP, அதிவிரைவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, இந்த இரண்டு நாடுகளின் பெண்கல்வி நிலை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவை கிழக்கு ஆசிய நாடுகளின் பெண்கல்வித் தரத்துடன் ஒப்பிட்டால் அது துயரில் முடியும்.

பள்ளிக்கல்விக்கான வாய்ப்புக்கள் எனில் சிலருக்கு அது உலகத்தரத்திலும் பலருக்கு அது மிக மோசமான நிலையிலும்தான் உள்ளது. மிகச்சிறிய கிராமங்களில் கூட இந்தப் பாகுபாடு நிலவுவது வியப்புக்குரியது. முப்பது வருடங்களுக்கு முன்பு, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பாலன்பூர் என்ற சிறிய கிராமத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, தலித் சமூக பெண்களிடம் பூஜ்யம் விழுக்காடாக இருக்க, காயஸ்தா சமூகத்தின் ஆண் குழந்தைகள் 100% கல்வியறிவு பெற்றவர்கள் ஆக இருந்தார்கள். வகுப்பறைகளிலும் கற்றல் திறனில் மிகப்பெரிய பாகுபாட்டைப் பார்க்கின்றோம், சில குழந்தைகளின் வாசிப்புத்திறன் மேம்பட்ட நிலையில் இருக்க, மற்றவர்களோ அடிப்படை எழுத்துக்களைக் கூட வாசிக்கத் தடுமாறுகின்றார்கள். யுனெஸ்கோ அறிக்கை ஒன்றின்படி, 2012ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் தனியார் நடத்தும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12% ( இந்தியா தவிர), அதுவே "வளர்ச்சியடைந்த நாடுகளில்" 10%க்கும் கீழே. ஆனால் இந்தியாவில் அதுவே 40% ஆக இருந்தது, அதற்கு மேலும் உயர்ந்துகொண்டே இருந்தது.

தவிர, அரசுப்பள்ளிகளின் பாடங்களுக்கும், தனியார் பள்ளிகளின் பாடங்களுக்குமே கூட மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அறிவுக்குப்பொருத்தமான சமதகுதி உள்ள கல்வியே குழந்தைகளுக்குச்சிறந்தது என்பதுதான் உலகளாவிய நியதி. இந்தியாவிலோ கல்வியின் தரம் என்பது, வர்க்கம், சாதி, பாலினம், பள்ளிகட்டணத்தை கட்டக்கூடிய தகுதி ஆகிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. சமூக அசமத்துவங்களில் இருந்து விடுபட பள்ளிக்கல்வி ஒரு வழியாக இருக்கும் என்ற நோக்கத்தையே இந்தப் பாகுபாடுகள் அடித்து நொறுக்குகின்றன.

முரண்பட்ட அடுக்குகளைக் கொண்ட இந்தியாவின் பள்ளிக்கல்வித்திட்டத்தின் முகம் கடந்த சில மாதங்களாக அம்பலப்பட்டுள்ளது. கோவிட்19 தொற்றுக் காலத்தின் பின் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. இன்னும் மூடிக்கிடக்கின்றன. பொருளாதார வசதி படைத்த குடும்பத்து பிள்ளைகள் வசதிகள் பொருந்திய தம் வீடுகளில் உட்கார்ந்து இணையவழியாக பாடங்களை கற்றுக்கொண்டு இருக்க, வசதி இல்லாத குழந்தைகள் "இணையவழிப்பள்ளி"யில் இருந்த வெளியேற்றப்பட்டுள்ளாகள். இணையவழிகல்வி என்னும் அத்தி இலை, பள்ளிக்கல்வி மறுப்பு என்னும் யானையை மறைந்துவிட்டது, 16 மாதங்களாக. 

ஜார்கண்டில் Latehar கிராமத்தில் நாங்கள் இந்த மாத தொடக்கத்தில் வீடுதோறும் சென்று நடத்திய கணக்கெடுப்பில் தெரிந்தது இதுவே. தலித் - ஆதிவாசி சமூக மக்களின் நான்கு குடியிருப்பு பகுதிகளில் நாங்கள் கண்டது என்னவெனில், பெரும்பாலான குழந்தைகளுக்கு ஒரே ஒரு சொல்லைக் கூட வாசிக்க தெரியவில்லை, இணையவழிக்கல்வி என்பதன் அடையாளமே தெரியவில்லை. 

.... .... .....

The Hindu, 15.8.2021

தமிழில் மு இக்பால் அகமது

மாப்பிளா கிளர்ச்சி - 2


1921 கிளர்ச்சி திருரங்காடியில்தான் பிறந்தது. ஆகஸ்ட் 1921இல் மலப்புரம் மாவட்டம் திரூர்தான் கிளர்ச்சியின் கனல் பிரதேசமாக விளங்கியது. பிரிட்டிஷ் மலபாரின் நான்கு தாலுகாக்களில் ராணுவ சட்டம் பிறப்பிக்கப்பட்டது - கோழிக்கோடு, எரநாடு, வள்ளுவநாடு, பொன்னாணி. பின்னர் குரும்பரநாடு, வயநாடு தாலுகாக்களிலும் பிறப்பிக்கப்பட்டது. கிளர்ச்சியை வழி நடத்திய அலி முசலியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆகஸ்ட் இறுதியில் சரணடைந்தார்கள் எனினும் பிரிட்டிஷ் ராணுவம் தன் அடக்குமுறை, கைதுகளை தொடர்ந்து செய்தது. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பிரிவான Dorset Regiment என்னும் படைப்பிரிவு, எரநாடு, வள்ளுவநாடு, மஞ்சேரி ஆகிய தாலுக்காக்களில் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக நடத்திய தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் எதிர்வினை ஆற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1921 அக்ட்டோபர் 25 அன்று, மலப்புரத்தில் மேல்முறி என்ற ஊரில் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். டிசம்பர் இறுதியில் சுமார் 27000 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.

வரலாற்றறிஞர் எம் கங்காதரன், கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த கடைசி ஆறு மாதங்களில் முஸ்லிம்கள், இந்துக்கள் இரண்டு தரப்பினருமே பெரும் நெருக்கடியில் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் 10000 மாப்பிளாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அதே அளவு மாப்பிளாக்கள் கைது செய்யப்பட்டு மலபாரில்  இருந்து வெளியேற்றப்பட்டார்கள், அந்தமானின் கொடிய தனிமைச்சிறைக்கும் பல நூறு பேர் கடத்தப்பட்டனர்.

கங்காதரனின் கூற்றுப்படி, அன்று அங்கே போலீஸ் படைக்கு தலைமை ஏற்றிருந்த போலீஸ் சூப்பிரண்டு  Richard Harvard Hitchcock க்கின் அதீத நடவடிக்கைகள்தான் கிளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. ஹிட்ச்காக்கின் பதிவுகளே இதற்கு ஆதாரம். மலபாரில் அப்போது கிலாபத் இயக்கம் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் அடர்த்தியாக இருந்த பகுதிகளில் கிலாபத் இயக்கம் தீவிரமாக இயங்கியது. கிலாபத் செயற்பாடுகளை, அவற்றின் செயற்பாட்டு எல்லைகளையும்  தாண்டி அதிகமான கற்பனைகளுடன் பார்த்த பிரிட்டிஷ் போலீஸ், எல்லை மீறிய அடக்குமுறைகளில் இறங்கி இயக்கத்தை நசுக்க முனைந்தது. இதனால் கோபமுற்ற மாப்பிளா முஸ்லிம்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். கோழிகோட்டில் காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள். காந்தியும் மவுலானா சவுக்கத் அலியும் கலந்துகொண்ட மாநாடு அது. இக்கூட்டம் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அறைகூவல் விடுப்பதாக அதீத கற்பனையில் இறங்கியது பிரிட்டிஷ் காலனிய அரசு. 

.... ..... ......

சமீல் இல்லிகல் (Sameel Illikal) கேரள இதழியலாளர். வரலாற்று ஆய்வாளர், திரைப்பட விமர்சகர், திரைப்பட இயக்குநர். மத்யமம் என்ற வார இதழின் துணை ஆசிரியர். மாப்பிளா மக்களின் வரலாறு, பண்பாடு குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்பவர். Graves of 1921 Martyrs என்ற ஆய்வுத்திட்டத்தை செய்து வந்தார். நாடக நடிகர், வில்லடிச்சாம்பாட்டு என்ற கேரள கிராமியக்கலையில் தேர்ந்தவர்.

2018 அக்ட்டோபர் மாத மத்யமம் இதழில் வெளியான கட்டுரை இது. சமீல் மலையாளத்தில் எழுதியதை O Najiya ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Two circles. Net இணைய இதழில் வெளியிட்டார். இரண்டு பாகங்களாக வெளியான கட்டுரையின் சில பகுதிகளை நான் தமிழில் இங்கு தருகின்றேன்.

..... ...... ....

இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 19.4.1919 (379 பேர் மரணம்), சவ்ரி சவ்ராவில் 5.2.1922 அன்று , கொதிப்புற்ற விவசாயிகள்  23 போலீசாரை உயிருடன் கொளுத்திய நிகழ்வு ஆகியவை என்றென்றும் பேசப்படுவை. அரசு பதிவேடுகளின் படிமாப்பிளா கிளர்ச்சி அல்லது மலபார் கிளர்ச்சியில் 2337 பேர் கொல்லப்பட்டார்கள், 1652 பேர் காயமுற்றனர், 45404 பேர் சிறையில் அடைப்பு. 10000 பேர் வரை மரணம், 50000 பேர் சிறையிலடைப்பு,, 20000 பேர் நாடுகடத்தல், 10000 பேரைக்காணவில்லை - இது பொதுமக்கள் கணக்கு.

மலபார் புரட்சியுடன் ஒப்பிடும்போது பிற நிகழ்ச்சிகள் அவற்றின் பரப்பளவிலும் வீச்சிலும் சிறியவை. மலபார் கிளர்ச்சியை தேசிய வரலாறு புறக்கணிக்கின்றது, மலபார் கிளர்ச்சியின் போக்கில்

 
நிகழ்ந்தவற்றையும் வரலாறு கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றது. உதாரணமாக மலப்புரத்தில் மேல்முறி-அதிகாரித்தோடியில் நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைகள். மலபாரில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கூட்டுப்படுகொலை நிகழ்வுகளில் பூக்கோட்டூர் கலவரத்துக்கு அடுத்ததாக சொல்லப்படுவது மேல்முறி படுகொலைகள்.

பூக்கோட்டூர் படுகொலையில் 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். 1921 அக்டொபர் 29 அன்று, பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் உட்பட அனைவரும் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டு வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டார்கள். Dorset Regiment என்னும் பிரிட்டிஷ் துப்பாக்கி படையினர்தான் இப்படுகொலையை நிகழ்த்தினர்.

..... ... .....

The Mappila Rebellion 1921, GRF Tottenham, Madras Govt Press, 1922: : வடமேற்கே 4 மைல் தொலைவில் பெரும்கும்பல் கூடியது. டோர்செட் ரெஜிமெண்ட், துப்பாக்கி படை, கவச வாகனங்கள் அக்கும்பலை எதிர்கொண்டன. மேல்முறிக்கு மேற்கே உள்ள காட்டிலும் வீடுகளிலும் இருந்த எதிரிகள் வெளியே வந்து சரணடைய மறுத்ததுடன் நமது படைகளுக்கு எதிராக தொடர்ந்தும் உறுதியுடனும் சண்டையிட்டனர். இறுதியில் 246 கிளர்ச்சியாளர்கள் இறந்தனர் என்று படைப்பிரிவின் தலைமை கமாண்டர் மெட்ராஸ் அரசுக்கு 25.10.1921 அன்று அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்.

ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கோணோம்பாற, அதிகாரிகொடி, மேல்முறி முட்டிப்படி, வலியாட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் டோர்செட் ரெஜிமெண்ட் நடத்திய படுகொலை இது. மலப்புரம் நகரில் இருந்து 3 கிமீ தொலைவில் கோழிக்கோடு பாலக்காடு தேசிய  நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள ஊர்கள் இவை.

டோர்செட் ரெஜிமெண்ட்டின் இரண்டாவது பட்டாளத்தில் A, D கம்பெனிகள், கோணோம்பாறயை நோக்கி பீரங்கி குண்டுகள் தாங்கிய கவச வாகனங்களில் வந்து சேர்ந்தனர். Lt.Hevic, Lt.Goff  ஆகியோர் தலைமையில்தான் 246 மாப்பிளா மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த நிகழ்வுக்கு 10 வருடங்கள் பின் பிறந்த நம்பன் குண்ணனின் (மேல்முறி வலியட்டப்படி) வாக்குமூலம் இது: பீரங்கிக்குண்டுகள் பெருத்த சத்தத்துடன் பொழிந்தன. அதன் பின் ராணுவம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. வெளியே வர மறுத்தவர்களை துப்பாக்கியின் கத்தி முனையாலும் பின் கட்டையாலும் குத்தினார்கள், அடித்தார்கள். மஞ்சா, பத்தாயம் போன்ற மரப்பெட்டிகளை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தார்கள். குர் ஆன், சபீனாப்பாட்டு (முகமதுநபியை புகழ்ந்து அரபு மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்), அரபு மொழிப்பாடல்கள், படைப்பாட்டு (போர்ப்பரணிகள்) போன்றவற்றை முற்றத்தில் குவித்து தீயிட்டனர். ஓலைகள், புற்களால் வேயப்பட்ட வீடுகளுக்கு தீயிட்டனர். அதன் பின் ஆண்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றனர். கட்டுப்பட மறுத்தவர்கள், காப்பாற்ற முனைந்தவர்கள், அவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆயினும் சுட்டுக்கொல்லப்பட்டனர். காலையில் தொடங்கிய படுகொலை நண்பகலில் படைத்தளபதி எழுப்பிய நீண்ட விசில் ஒலிக்கும் வரை நீண்டது. அவ்வாறு விசில் ஒலித்தபோது துப்பாக்கியின் முனை சாலத்தில் கல்லடித்தோடி மொய்தீன் குட்டி ஹாஜியை குறிவைத்து இருந்தது. துப்பாக்கியின் விசை இழுபடும் முன் அவர் தப்பித்தார். இந்த நிகழ்வை குறிப்பிட்டவர் P T முகம்மது மாஸ்டர், அப்போது அவர் வயது 4 (Nisar Kaderi - Pookottur Yuddhavum Melmuri Operationum, 1921 Churul Nivaranam - Pookkottur Yudha Smaraka Samithi Souvenir, 2007).

246 பேர் சுடப்பட்டனர், சுமார் நூறு வீடுகளுக்கு தீயிட்டனர். சுடப்பட்ட சிலரோ மிக மோசமான காயம்பட்டு இருந்தனர், உயிர் மட்டுமே இருந்தது. இன்னும் பலரோ கவனிக்க ஆளின்றி நான்கு நாட்கள் அங்கேயே கிடந்து செத்து மடிந்தனர். இறந்தவர்கள் எங்கே விழுந்து கிடந்தார்களோ அங்கேயே புதைக்கப்பட்டனர்.

விடுதலைப்போராட்டம் ஆகட்டும், மலபார் கிளர்ச்சி ஆகட்டும், வரலாறுகள் இந்தப் படுகொலைகள் பற்றிப் பேசியதில்லை. ஆனால் கல்லறைகள் இருக்கின்றனவே, அவை நடந்த படுகொலைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளன -  இப்பகுதி மக்களின், பின் வந்த தலைமுறைகளின் நினைவில். வீட்டின் முன்பக்க திடலில் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர். மலப்புரம் கிலாபத் தலைவர் குஞ்சி தங்கள் (மலப்புரத்தின் வலியங்காடியை சேர்ந்தவர்), கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அருகில் உள்ள ஊர்களில், கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இறந்தவர்களை அடக்கம் செய்தார்கள்.

ஒரே குழியில் பலரையும் அடக்கம் செய்ததும் நடந்தது. ராணுவத்துக்கு பயந்து இரவு நேரங்களில் அடக்கம் செய்தார்கள். ஆண்கள் இல்லாத நிலையில் பெண்களே குழிகள் வெட்டினார்கள். ஒரு புதைகுழி இரண்டு அடி ஆழம் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது. 246 பேர் கொல்லப்பட்டதில் ஒன்பது குழிகளில் அடக்கம் செய்யப்பட்ட 40 பேர்களின் விவரங்கள் நம்மிடம் உள்ளன.

(தொடரும்)

படத்தில்: 246 பேர்களில் 11 பேர் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டனர், இடம் அதிகாரத்தோடி, மேல்முறி. டெக்கான் ஹெரால்ட் 25.10.2018.

மாப்பிளா கிளர்ச்சி - 1


1836 தொடங்கி 1921 வரை 85 வருடங்களாக நீடித்த கிளர்ச்சி அது. 

இறுதியாக 1921 ஆகஸ்ட்டில் 22 வட்டாரங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கிளர்ச்சியில், சுமார் 10000 பேர் மரணமுற்றனர். கொடிய அந்தமான் சிறையில் மட்டும் 3000 பேர் கொல்லப்பட்டனர். 42 பேருக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஆயுள்தண்டன விதித்தது. 

Conrod Wood என்னும் ஆங்கிலேயர் தன் ஆய்வுக்காக எழுதிய தொகுப்பை, பின்னர் the moplah rebellion and it's Genesis என்று நூலாக வெளியிட்டார். மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று தமிழில் நான் மொழிபெயர்த்தேன், அலைகள் வெளியீட்டக பதிப்பு, 2007.

100 ஆண்டுகள் ஆன நிலையில், கிளர்ச்சியை மையமாகக் கொண்டு கேரளாவில் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். பிரிட்டிஷார் +  ஜென்மிகள் எனப்படும் இந்து மத உயர்சாதி நிலப்பிரபுக்கள் என்ற அதிகார வர்க்க கெடுபிடிக் கூட்டணிக்கு எதிராக மாப்பிளை முஸ்லிம்கள் நடத்திய நீண்ட போராட்டம் அது. 1919க்குப் பின் கிலாபத் இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவற்றின் தலையீடு, இப்போராட்டத்தில் என்ன செய்தது என்பதும் கூடவே வாசிக்கப்பட வேண்டியது. ஒருபுறம் இக்கிளர்ச்சியை தேசபக்தப்போராடம் என்று ஒருசாராரும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆன மதப்பிரச்னையே இதன் மையம் என்று மறுசாராரும் வெவ்வேறு நிலைகளில் நின்று வாதிடுகின்றனர். 1980களில் வெளியான 1921 என்ற மலையாள திரைப்படம், மாப்பிளா கிளர்ச்சியை மையமாக கொண்டதுதான்.

கான்ராட் உட் தன் நூலின் முடிவுரையில் இப்படித்தான் சொல்கின்றார்:

1921-22 மாப்பிளா கிளர்ச்சி, தெற்கு மலபார் மாப்பிளா சமூக மக்களின் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனை எனலாம். 1792இல் கிழக்கிந்திய கம்பெனி வடிவில் முதல் முறையாக பிரிட்டிஷ் நிர்வாகம் நிறுவப்பட்ட நாள் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும், அதன் ஆதரவோடு வளர்ந்த ஜென்மி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் மாப்பிளா சமூக மக்கள் தொடர்ந்து நீண்ட பல ஆண்டுகளாகத் தமது எதிர்ப்பை கலகங்கள் மூலம் அறிவித்தபடியே இருந்துள்ளார்கள். தொடந்த போராட்டங்களின் இறுதி வடிவமாகவே, தீவிர மண்டலத்தை தம் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியாகவே 1921-22 மாப்ளா ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. ... ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் எனில், தெற்கு உட்புற மலபாரின் பாதிக்கப்பட்ட இசுலாமிய சமூகத்தின் எழுச்சியாகத்தான் 1921-22ஆம் ஆண்டில் நடந்த மாப்ளா கிளர்ச்சியை வரையறுக்க முடியும்.

... .... ....

ரயில் எண் 77, சரக்குப்பெட்டி எண் 1711

கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட ரயில் அது. கிளர்ச்சியின் மையமாக இருந்த திரூருக்கு 1921 நவம்பர் 19 அன்று மாலை 6.45 மணிக்கு ரயில் வந்து சேர்கின்றது. மூடப்பட்ட சரக்கு ரயில் பெட்டி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாப்பிளா முஸ்லிம்களும் 3 இந்துக்களும் அடைக்கப்பட்டார்கள், வெளிப்புறம் தாழிடப்பட்டது. அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. ஆடு மாடுகளை கொண்டு செல்வதற்கான பெட்டி அது. தவிர புதிதாக பெயிண்ட் பூசப்பட்டு இருந்ததால் சிறு துவாரங்களும் அடைக்கப்பட்டு காற்றுப் புகாத பெட்டி ஆனது. இவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள். ஹெட் கான்ஸ்டபிள் ஓ கோபாலன் நாயரும் 5 கான்ஸ்டபிள்களும் அடுத்த பெட்டியில் பயணிக்க, சார்ஜெண்ட் A H ஆண்ட்ரூஸ் என்பவர் என்ஜினுக்கு அடுத்து இருந்த இரண்டாவது வகுப்பு பெட்டியில் பயணிக்கின்றார். 

வழி நெடுகிலும் உள்ளே இருந்தவர்கள் காற்றுக்கும் குடிநீருக்கும் கதறி கூச்சல் இட்டுள்ளார்கள். பெட்டியின் கதவை தட்டி திறக்க போராடியுள்ளார்கள். சோரனூரில் அரை மணி நேரமும் ஒலவகோட்டில் 15 நிமிடங்களும் ரயில் நின்றபோது அவர்களின் கதறல் இந்த போலீஸ்காரர்களுக்கு கேட்கவே செய்தது. தவிர பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின்போது சாட்சியம் அளித்த பொதுமக்கள் பலர், ரயில் சென்ற வழிநெடுக உள்ளே அடைக்கப்பட்டவர்களின் கூச்சலையும் கதறலையும் கேட்டதாக சொன்னார்கள். 

முக்கியமாக, இரவு 12.30 மணிக்கு போதனூருக்கு ரயில் வந்து சேர்ந்தபோது அதே ரயிலில் பயணித்த மஞ்சேரி ராம ஐயர் என்பவர், இறங்கி வந்து சத்தம்போட்டு பெட்டியின் கதவை திறக்கச் செய்தார். கதவு திறக்கப்பட்டது. உள்ளே அடைக்கப்பட்ட அனைவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். 56 பேர் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்.  உடனடியாக இறந்தவர்கள் 6 பேர். 13 பேரை கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். 25 பேரை மத்திய சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். 13 பேரில் 8 பேர் பின்னர் இறந்தார்கள். ஆக மொத்தம் 70 பேர் இறந்தார்கள். கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் T ராமன். 

மெட்றாஸ் அரசு இதற்காக ஒரு விசாரணைகமிசனை அமைத்தது. விசாரணையின் முடிவில், 30.8.1922 அன்று அரசு பின்வரும் ஆணையை வெளியிட்டது:

"......கைதிகளைக் கொண்டு செல்லும் அவசரத்தேவைக்காக ஒரு சரக்குப்பெட்டியை பயன்படுத்தியதை தவறு என்று சொல்ல முடியாது, மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் சொல்ல முடியாது. ... சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், 5 போலீஸ் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அரசு, மெட்றாஸ் அரசுக்கு உத்தரவு இட்டது.  இறுதியில் அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டார்கள்.

உயிரிழந்த 70 பேர்களின் குடும்பத்துக்கு, தலா 300 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டது. (ஆணை எண் 290, 1.4.1922)

…... .....

ரயில்பெட்டி கொடூரமரண நிகழ்வின் 93ஆவது நினைவு தினம் மலப்புரத்தில் திரூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 2014 நவம்பர் 20 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. குறுவம்பலம் என்பது அக்கிராமம். ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டு இறந்தவர்களில் 41 பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாத இளைஞர்கள். "கிளர்ச்சியின்போது இக்கிராமத்தின் இளைஞர்கள் மிகப்பெரும் பங்காற்றியதாக முதியவர்கள் கூறுகின்றனர். மிக சமீப காலம் வரையிலும் கூட கிளர்ச்சியில் குறுவம்பலம் கிராமத்தின் பங்கு பற்றி கிராம மக்களுக்கும் வரலாற்று அறிஞர்களுக்கும் கூட தெரியாமலேதான் இருந்தது. இது குறித்து மேலும் பல ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியம்" என்று சலீம் குறுவம்பலம் கூறுகிறார். இவர் 2014இல் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர். குறுவம்பலம் கிராமத்தில் ரயில்பெட்டி தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதில் முன்னின்றவர். 

வரலாற்றறிஞர் KKN குருப், "ரயில்பெட்டி கொடூர நிகழ்வு குறித்தும் மலபாரில் கிளர்ச்சியின்போது நிகழ்ந்த அனைத்தையும் அரசு முற்றாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். வரலாற்றறிஞர் எம் கங்காதரன், "ரயில்பெட்டி கொடூர நிகழ்வுதான் மலபாரில் பிரிட்டிஷ் ஆட்சி நடத்திய மிகப்பெரிய கொடுமை என்று சொல்லிவிட முடியாது, சுமார் 200 மாப்பிளா இளைஞர்களை அவர்களின் வீடுகளுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து அவர்களின் குடும்பத்தார் கண்ணெதிரிலேயே பிரிட்டிஷார் சுட்டுக்கொன்ற சம்பவம் 1921 அக்டொபர் மாதத்தில் நடந்தது" என்று சொல்கின்றார். 

... .... ....

1971இல் சி அச்சுதமேனன் முதல்வராக இருந்த இடதுசாரிகள் அரசு, மாப்பிளா கிளர்ச்சியை இந்திய விடுதலைப்போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அங்கீகாரம் செய்தது, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியது. மாப்பிளா கிளர்ச்சி, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்று பத்து வருடங்களுக்குப் பிறகு ஒன்றிய அரசும் அங்கீகாரம் அளித்து, கிளர்ச்சியில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தவர்களுக்கும் கிளர்ச்சியில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கும் பல உதவிகளை அறிவித்தது.

திரூர் ரயில் நிலையத்தில் ரயில்பெட்டி மரணங்களை சித்தரிக்கும் சித்திரம் அழிக்கப்பட்ட வரலாறு:

திரூர் ரயில்நிலையத்தின் சுவரில் ரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்ற தியாகிகளை நினைவூட்டும் சித்திரம் ரயில்வே நிர்வாகத்தால் வரையப்பட்டது. குட்டிபுரம் என்ற ஊரை சேர்ந்த ஓவியர் பிரேமன் சித்திரத்தை வரைந்தார். 2018 நவம்பர் மாதத்தில் உள்ளூர் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பல் இச்சித்திரத்தை அழிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வற்புறுத்தியதால் அச்சித்திரம் அழிக்கப்பட்டது. 

வரலாற்றில் இருந்து மாப்பிளா கிளர்ச்சி தியாகிகள் நீக்கப்படும் வரலாறு:

கேரள அரசு 1960களில், மாப்பிளா கிளர்ச்சியாளர்களை விடுதலைப்போராட்ட தியாகிகள் என அங்கீகரித்து தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. அப்போராடம் விவசாயிகள் புரட்சி என்றும் அடையாளப்படுத்தப்பட்டது. 

இப்போது இந்திய வரலாற்று ஆய்வுக்குழுமத்தின் மூன்று பேர் குழு ஒன்று, ரயில்பெட்டி கொடூரத்தில் மரணமுற்றோர், பிற கிளர்ச்சி தலைவர்கள் ஆகியோரை விடுதலைப்போராட்ட தியாகிகள் என அங்கீகரிக்க அவசியம் இல்லை என்று முடிவு செய்துள்ளது. Dictionary of Martyrs: India's freedom struggle 1857-1947 என்ற நூலின் ஐந்தாவது பாகத்தில் இருந்து 387 மாப்பிளா தியாகிகளின் பெயரை நீக்குவது என்று முடிவு செய்துள்ளது. அலி முசலியார், வரியம்குன்னத் அஹமது ஹாஜி, அவரது இரண்டு சகோதரர்கள் ஆகியோர் பெயரும் அடக்கம். 

குழுமத்தின் ஒரு உறுப்பினர் ஆன C I ஐசக் என்பவர், ".... மாப்பிள்ளாகளின் நடவடிக்கைகள் ஏறத்தாழ அனைத்துமே மத அடிப்படையில் ஆனவை. அவர்கள் இந்து மதத்தினர்க்கு எதிரானவர்கள், அவர்களின் செயற்பாடுகள் மத சகிப்பின்மையின் அடிப்படையில் ஆனவை. .... ரயில்பெட்டி நிகழ்வில் இறந்தவர்களில் பலர், கிலாபத் கொடியேற்றியவர்கள், கிலாபத் நீதிமன்றம் அமைத்தவர்கள், கிலாபத் அரசை நிறுவியவர்கள். உயிரிழந்த பல மாப்பிளாக்கள், விசாரணை கைதிகளாக இருந்தபோது காலரா போன்ற நோய்களாலும் இயற்கையாகவும் இறந்தவர்கள் என்பதால் அவர்களை தியாகிகள் என்று அங்கீகரிக்க முடியாது"  என்று சொல்கின்றார். 

2021 ஆகஸ்ட் 19 அன்று ஆர் எஸ் எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் "தாலிபான் சிந்தனை" என்று பேசினார். கேரளாவின் இடதுசாரி அரசு, இதை மறைத்து அக்கிளர்ச்சியை கம்யூனிஸ்ட் புரட்சியாக சித்தரிக்க முயல்கின்றது என்றும் பேசினார்.

இதன் பின்னர்தான் ICHR அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.

.... .... .... .....

(தொடரும்)