ஊழலின் ஊற்றுக்கண் முதலாளித்துவ சமூகமே. கார்பொரேடுகளின் நலன் பொருட்டும் சொத்து சேர்ப்பதன் பொருட்டும் ஊழலைக் கட்டிக்காப்பது ஆட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகள்+துணை போகும் அதிகார வர்க்க கூட்டணிதான். சகாயம் போன்றவர்கள் தம் பதவிக்காலத்தில் லஞ்ச லாவண்யங்களுக்கு அடிபணியாமல் நேர்மையாக இருந்திருக்கலாம்.
அப்துல்கலாம் என்ற தனி மனிதர் கூட அப்படித்தான் இருந்தார், மக்கள் பணத்தில் ஊதியம் பெற்ற, நேர்மையான ஒரு அரசு அதிகாரியாக இருந்த வரை எல்லாம் சரிதான். அவருடைய அந்த க்ளீன் அடையாளத்தை மக்கள் மத்தியில் தனக்கான முதலீடாக்கி ஆர் எஸ் எஸ் கும்பல் (ஜனாதிபதி தேர்தலில்) அரசியல் சித்து விளையாட்டை நடத்த முற்பட்டதை புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதராக அவர் இருந்தது எதை காட்டியது?
கனவு காண சொன்னார். 2020இல் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார். தம் சொந்தப்பணத்தை எடுக்கஏ டி எம் முன்னால் மணிக்கணக்கில் நின்ற மக்களை போலீஸ் அடித்து விரட்டியதையும் கொரோனா காலத்தில் 1000, 2000 கி மீ தொலைவில் உள்ள தம் கிராமங்களுக்கு செருப்பு இல்லாமல் பட்டினி வயிற்றுடன் மக்கள் நடந்து செத்ததையும்தான் இந்த தேசம் கண்டது. பெற்ற தாய் ரயில் பிளாட்பாரத்தில் செத்துகிடப்பது அறியாமல், பால் குடிக்க வேண்டி தன் தாயின் சேலையை பற்றி இழுத்துக்கொண்டு இருந்த குழந்தைக்கு தெரியாது, இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தது என்று. கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டு சொந்த ஊர் திரும்ப எண்ணியும் போக்குவரத்தும் உணவும் இன்றி நடுத்தெருவில் நின்ற தகப்பனை, தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 1000 கிலோமீட்டருக்கும் மேல் பயணித்து ஊர் திரும்பிய அந்த இளம்பெண்ணுக்கும், பசியால் வாடியும் செருப்பு அறுந்து ரத்தம் வடியும் கால்களுடன் நடந்தும் வழியில் செத்த உறவினர்களை அப்படியே விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பிய பல லட்சம் தொழிலாளர்களுக்கும் அணுகுண்டால், சந்திராயனால், மங்கள்யானால் மயிரளவும் பயனில்லை.
2
வெறும் தொழிநுட்ப அறிவும் புத்தக அறிவும் மட்டுமே அறிந்த ஒருவர், மாத ஊதியம் பெறும் ஒரு அரசு ஊழியராக மட்டுமே இருக்க தகுதி படைத்தவர், அவ்வளவே. ஒரு விஞ்ஞானி என்பவனுக்கு சமூகம் குறித்த அறிவும் சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும், இல்லையேல் அவன் வெறும் தொழிநுட்பாளன், பொறியாளன், அவ்வளவே. சகாயத்துக்கும் இது பொருந்தும். கலாம், சகாயம் போன்றவர்கள், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் வரலாற்றை ஊன்றிப்படிக்க வேண்டும். வாய்ப்பந்தல் வேலைக்கு உதவாது. பேரழிவை உண்டாக்க வல்ல ஒரு புதிய ஆயுதத்தை அமெரிக்கா கண்டுபிடித்து இருப்பதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகின்றார். அது என்ன ஆயுதம் என்று வெட்ட வெளிச்சம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி ஐன்ஸ்டீன், ருதர் போர்ட், டால்டன், ஃபெர்மி, வானவர் புஷ் ஆகிய மகத்தான விஞ்ஞானிகள் ட்ருமனுக்கு கடிதம் எழுதுகின்றனர். அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.
மாத ஊதியம் பெற்று வந்த அப்துல்கலாம், அணு ஆயுதங்களின் காதலராக மட்டுமே இருக்கும் அளவுக்குத்தான் அவர் சிந்தனை மட்டம் இருந்தது. அதற்கு மேல் சிந்திக்க வல்லமை இல்லாமல் இருந்ததால்தான், எரிந்து புகைந்து கொண்டு இருந்த, சாமானிய மக்களின் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த குஜராத்துக்கு சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விருது வாங்கிக்கொண்டு திரும்ப முடிந்தது. தேச விடுதலைக்குப் பின் மிக மோசமான மதக்கலவரங்களை குஜராத்தில் நடத்திக்கொண்டு இருந்த ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பி ஜே பி கும்பல், ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயரை முன் வைத்தபோது, அவர் நிராகரித்து இருக்க வேண்டும், ஆனால் வெட்கம் இன்றி "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று பகவத் கீதை வசனம் பேச வைத்தது. வரலாறு குறித்த அறிவும் சமூக விஞ்ஞானம் பற்றிய அறிவும் இல்லாமல் போனதால்தான் காந்தியின் உருவப்படத்துக்கு நேர் எதிராக சவர்க்காரின் படத்தை திறந்து வைக்கும்போது மனதில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல் இருக்க முடிந்தது. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழ்வது தவிர வேறு ஒன்றும் அறியாத மேல்சாதி பிராமணர்களுக்கும் ஆர் எஸ் எஸ் பிஜேபி வகையறாக்களுக்கும் அப்துல்கலாம் மட்டும் பிரியமான காதலராக இருப்பதை புரிந்துகொள்ள பெரிய கணக்குகளை போட்டுப்பார்க்க அவசியம் இல்லை.
வரலாறும் சமூக விஞ்ஞானமும் அறிந்து இருந்ததால்தான், சவர்க்காருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற வாஜ்பேயியின் பரிந்துரையை ஜனாதிபதியாக இருந்த கே ஆர் நாராயணன் அவர்களால் குப்பையில் எறிய முடிந்தது.
3
அணுகுண்டு இருந்தாப்போதும், நாடு வல்லரசு ஆயிடும்ன்னு கலாம் சொன்னது எவ்வளவு கேலிக்கு உரியதோ அதே போல்தான் 'ஊழலுக்கு எதிராக' என்று கிளம்புவதும். இந்தியன் படத்தில் ரேஷன் கடை ஊழியர்களையும் ஆர் டி ஓ ஆபீஸ் ஏஜெண்டுகளையும் வர்மத்தில் முறுக்கி வாயை கோணலாக்கி ஸ்பெஷல் கத்தியால் குத்தி சங்கரின் சேனாபதி ஊழலை ஒழித்த கதைக்கும் அம்புலிமாமாவில் சர்க்கார் மேஜிக் கதைக்கும் கலாம், சகாயம், அன்னா ஹசாரே போன்றோர் வெறும் வாயில் சுடும் வெத்து வேட்டு வல்லரசு வடைக்கும் பெரிய வேறுபாடு ஒண்ணும் இல்லை.
அன்னா ஹசாரேயின் 'ஊழலுக்கு எதிரான' போரில் அவர் மேடையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி வீசிக்கொண்டு இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடிக்கு கவர்னர் பதவி கொடுத்தது யார் என்பதையும், பதவிக்கு வந்த பின் மேற்படி ஜனநாயகம் அவர் கையில் சிக்கி என்ன பாடுபட்டது என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அன்னா ஹசாரேயை மக்கள் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.