சனி, பிப்ரவரி 27, 2021

சங்கரின் 'இந்தியன்', அப்துல்கலாம், அன்னா ஹசாரே, சகாயம்....

1

ஊழலின் ஊற்றுக்கண் முதலாளித்துவ சமூகமே. கார்பொரேடுகளின் நலன் பொருட்டும் சொத்து சேர்ப்பதன் பொருட்டும் ஊழலைக் கட்டிக்காப்பது ஆட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகள்+துணை போகும் அதிகார வர்க்க கூட்டணிதான். சகாயம் போன்றவர்கள் தம் பதவிக்காலத்தில் லஞ்ச லாவண்யங்களுக்கு அடிபணியாமல் நேர்மையாக இருந்திருக்கலாம். 

அப்துல்கலாம் என்ற தனி மனிதர் கூட அப்படித்தான் இருந்தார், மக்கள் பணத்தில் ஊதியம் பெற்ற, நேர்மையான ஒரு அரசு அதிகாரியாக இருந்த வரை எல்லாம் சரிதான். அவருடைய அந்த க்ளீன் அடையாளத்தை மக்கள் மத்தியில் தனக்கான முதலீடாக்கி ஆர் எஸ் எஸ் கும்பல் (ஜனாதிபதி தேர்தலில்) அரசியல் சித்து விளையாட்டை நடத்த முற்பட்டதை புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதராக அவர் இருந்தது எதை காட்டியது?

கனவு காண சொன்னார். 2020இல் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார். தம் சொந்தப்பணத்தை எடுக்கஏ டி எம் முன்னால் மணிக்கணக்கில் நின்ற மக்களை போலீஸ் அடித்து விரட்டியதையும் கொரோனா காலத்தில் 1000, 2000 கி மீ தொலைவில் உள்ள தம் கிராமங்களுக்கு செருப்பு இல்லாமல் பட்டினி வயிற்றுடன் மக்கள் நடந்து செத்ததையும்தான் இந்த தேசம் கண்டது. பெற்ற தாய் ரயில் பிளாட்பாரத்தில் செத்துகிடப்பது அறியாமல், பால் குடிக்க வேண்டி தன் தாயின் சேலையை பற்றி இழுத்துக்கொண்டு இருந்த குழந்தைக்கு தெரியாது, இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தது என்று. கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டு சொந்த ஊர் திரும்ப எண்ணியும் போக்குவரத்தும் உணவும் இன்றி நடுத்தெருவில் நின்ற தகப்பனை, தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 1000 கிலோமீட்டருக்கும் மேல் பயணித்து ஊர் திரும்பிய அந்த இளம்பெண்ணுக்கும், பசியால் வாடியும் செருப்பு அறுந்து ரத்தம் வடியும் கால்களுடன் நடந்தும் வழியில் செத்த உறவினர்களை அப்படியே விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பிய பல லட்சம் தொழிலாளர்களுக்கும் அணுகுண்டால், சந்திராயனால், மங்கள்யானால் மயிரளவும் பயனில்லை.

2

வெறும் தொழிநுட்ப அறிவும் புத்தக அறிவும் மட்டுமே அறிந்த ஒருவர், மாத ஊதியம் பெறும் ஒரு அரசு ஊழியராக மட்டுமே இருக்க தகுதி படைத்தவர், அவ்வளவே. ஒரு விஞ்ஞானி என்பவனுக்கு சமூகம் குறித்த அறிவும் சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும், இல்லையேல் அவன் வெறும் தொழிநுட்பாளன், பொறியாளன், அவ்வளவே. சகாயத்துக்கும் இது பொருந்தும். கலாம், சகாயம் போன்றவர்கள், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் வரலாற்றை ஊன்றிப்படிக்க வேண்டும். வாய்ப்பந்தல் வேலைக்கு உதவாது. பேரழிவை உண்டாக்க வல்ல ஒரு புதிய ஆயுதத்தை அமெரிக்கா கண்டுபிடித்து இருப்பதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகின்றார். அது என்ன ஆயுதம் என்று வெட்ட வெளிச்சம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி ஐன்ஸ்டீன், ருதர் போர்ட், டால்டன், ஃபெர்மி, வானவர் புஷ் ஆகிய மகத்தான விஞ்ஞானிகள் ட்ருமனுக்கு கடிதம் எழுதுகின்றனர். அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். 

மாத ஊதியம் பெற்று வந்த அப்துல்கலாம், அணு ஆயுதங்களின் காதலராக மட்டுமே இருக்கும் அளவுக்குத்தான் அவர் சிந்தனை மட்டம் இருந்தது. அதற்கு மேல் சிந்திக்க வல்லமை இல்லாமல் இருந்ததால்தான், எரிந்து புகைந்து கொண்டு இருந்த, சாமானிய மக்களின் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த குஜராத்துக்கு சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விருது வாங்கிக்கொண்டு திரும்ப முடிந்தது. தேச விடுதலைக்குப் பின் மிக மோசமான மதக்கலவரங்களை குஜராத்தில் நடத்திக்கொண்டு இருந்த ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பி ஜே பி கும்பல், ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயரை முன் வைத்தபோது, அவர் நிராகரித்து இருக்க வேண்டும், ஆனால் வெட்கம் இன்றி "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று பகவத் கீதை வசனம் பேச வைத்தது.  வரலாறு குறித்த அறிவும் சமூக விஞ்ஞானம் பற்றிய அறிவும் இல்லாமல் போனதால்தான் காந்தியின் உருவப்படத்துக்கு நேர் எதிராக சவர்க்காரின் படத்தை திறந்து வைக்கும்போது மனதில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல் இருக்க முடிந்தது. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழ்வது தவிர வேறு ஒன்றும் அறியாத மேல்சாதி பிராமணர்களுக்கும் ஆர் எஸ் எஸ் பிஜேபி வகையறாக்களுக்கும் அப்துல்கலாம் மட்டும் பிரியமான காதலராக இருப்பதை புரிந்துகொள்ள பெரிய கணக்குகளை போட்டுப்பார்க்க அவசியம் இல்லை.

வரலாறும் சமூக விஞ்ஞானமும் அறிந்து இருந்ததால்தான், சவர்க்காருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற வாஜ்பேயியின்   பரிந்துரையை ஜனாதிபதியாக இருந்த கே  ஆர் நாராயணன் அவர்களால் குப்பையில் எறிய முடிந்தது.

3

அணுகுண்டு இருந்தாப்போதும், நாடு வல்லரசு ஆயிடும்ன்னு கலாம் சொன்னது எவ்வளவு கேலிக்கு உரியதோ அதே போல்தான் 'ஊழலுக்கு எதிராக' என்று கிளம்புவதும். இந்தியன் படத்தில் ரேஷன் கடை ஊழியர்களையும் ஆர் டி ஓ ஆபீஸ் ஏஜெண்டுகளையும் வர்மத்தில் முறுக்கி வாயை கோணலாக்கி ஸ்பெஷல் கத்தியால் குத்தி சங்கரின் சேனாபதி ஊழலை ஒழித்த கதைக்கும் அம்புலிமாமாவில் சர்க்கார் மேஜிக் கதைக்கும் கலாம், சகாயம், அன்னா ஹசாரே போன்றோர் வெறும் வாயில் சுடும் வெத்து வேட்டு வல்லரசு வடைக்கும் பெரிய வேறுபாடு ஒண்ணும் இல்லை.

அன்னா ஹசாரேயின் 'ஊழலுக்கு எதிரான' போரில் அவர் மேடையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி வீசிக்கொண்டு இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடிக்கு கவர்னர் பதவி கொடுத்தது யார் என்பதையும், பதவிக்கு வந்த பின் மேற்படி ஜனநாயகம் அவர் கையில் சிக்கி என்ன பாடுபட்டது என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அன்னா ஹசாரேயை மக்கள் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

கப்பற்படை புரட்சியும் பின்னணியும்

Untold story of 1946 Naval Mutiny என்ற நூல் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி Lt Cdr G D ஷர்மாஎன்பவர் எழுதியது. 1946 மாபெரும் கடற்படை புரட்சி குறித்து அடிப்படையான பல தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவற்றில் இருந்து சில இங்கே.

1

1942-45க்கு இடையில், பிரிட்டிஷ் இந்திய கடற்படையில் ஒன்பது கிளர்ச்சிகள் நிகழ்ந்ததாக பதிவுகள் உள்ளன. காரணங்கள் பல. மோசமான உணவு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் கொடூரமான நடத்தை, கேவலமான வசவுகள், மத உணர்வுகளை பாதிக்கும் இழிவான வசவுகள், சிறிய தவறுகளுக்கும் கொடுமையான தண்டனைகள் என பல காரணங்கள். 9 கிளர்ச்சிகள் எவை? 

3 மார்ச் 1942, Mechanical Training Establishment, Bombay

22  ஜூன் 1942, HMIS Konkan, Tobermory, UK

செப் 1942, HMIS Orissa, New London, South Africa

செப் 1942, HMIS Khyber, UK

27,28 ஜூன் 1944, HMIS Akbar, Bombay

30 ஜூலை 1944, HMIS Hamlawar

29-31 ஜூலை 1944, HMIS Shivaji

16 மார்ச் 1945, HMIS Himalaya, Karachi

17 ஏப்ரல் 1945, HMIS Shivaji.

1939இல், அதாவது இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் கடற்படையின் அதிகாரிகள் எண்ணிக்கை 212, 20% இந்தியர்கள், 80% பிரிட்டிஷ் வெள்ளையர்கள். 1945இல் அதிகாரிகள் எண்ணிக்கை 2852 ஆக உயர்ந்தது. 1377 பேர் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், 949 இந்தியர்கள், 249 ஆங்கிலோ இந்தியர்கள், 70 பேர் பிற நாட்டவர்கள். 

அதிகாரிகள் அல்லாத வீரர்கள் 1939இல் 1475, அதுவே 1945இல் 21193. போர் நெடுகிலும் பிரிட்டிஷ் வெள்ளையர் மட்டுமே அதிகாரிகளாக இருந்தனர். 

2

கப்பலில் வாழ்க்கை எப்படி இருந்தது? இட நெருக்கடி, மோசமான உணவு, குடிநீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வேலைப்பளுவால் நோய்கள், கடல் பயணத்தால் ஆன நோய்கள், மருத்துவம் இன்மை, சிறு முணுமுணுப்புக்கும் கடுமையான தண்டனைகள், குறைபாடுகளை விதிகளுக்கு உட்பட்டு தெரிவித்தாலும் கண்டுகொள்ளாமல் விடுவது மட்டும் அன்றி மனு அளித்தவருக்கு கொடுமையான தண்டனை, விடுமுறை மறுப்பு என தொடர்கின்றன.

சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஆன INA ஜப்பானுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்த்துப் போராடியது. போர் முடிவில் ஐ என் ஏ வீரர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. டெல்லி செங்கோட்டையில் விசாரணை நடந்தது. ஜவஹர்லால் நேரு ஐ என் ஏ வீரர்களுக்கு ஆதரவாக வாதிட்டார். பிரிட்டிஷ் அரசின் போக்கை எதிர்த்து நாடெங்கும் மக்கள் கண்டனம் முழங்கினர். இந்த எதிர்ப்புணர்வு படை வீரர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் குமுறலையும் உருவாக்கியது. 

மேற்கண்ட காரணங்கள் ஒருபுறம் எனில்,இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில், தங்களை படையில் இருந்து விடுவித்து ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற மனக்கொந்தளிப்பும் வீரர்கள் இடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கியது.

3

HMIS தல்வாரில் கிளர்ச்சியின் தொடக்கம்

வீரர்களுக்கு மாமிச உணவு, காய்கறி உணவு என இரண்டு வகை வழங்கப்பட்டது. பொதுவாக காலையில் எப்போதும் தரப்படும் உணவு ரொட்டி, பருப்புக்குழம்பு. மதியம் இதே குழம்பில் தண்ணீரை ஊற்றி சோறுடன் கொடுப்பார்கள். 1946 பிப்ரவரி 17 அன்று 29 வீரர்கள் காலை உணவை உண்ண மறுத்தார்கள். மிக மோசமான, நாற்றம் அடிக்கும் உணவை தங்களால் உண்ண முடியாது என மேல் அதிகாரியிடம் புகார் அளித்தார்கள். உணவு பற்றி இப்படியான புகார்கள் மிக மிக சாதாரணம் என்பதால் உயர்மட்ட அதிகாரிக்கு இந்த நிகழ்வு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டது.  

கமாண்டர் கிங் என்பவர் அப்போது உயர் அதிகாரி. மிக மோசமான சொற்களால் வீரர்களை வசைப்பாடும் அதிகாரி. இவரது இந்த நடத்தை குறித்து புகார் செய்த 14 வீரர்களை, மறுநாள் பிப்ரவரி 18 அன்று கிங் விசாரணைக்கு சம்மன் செய்தார். தற்செயலாக அன்று காலை உணவை மறுத்து மிகபல வீரர்கள் உணவு அறையில் இருந்து வெளியேறி முழக்கங்களை எழுப்பினர். காலை 8.45 மணிக்கு அணிவகுப்புக்கு வருமாறு அழைக்கப்பட்ட போது ஒரு வீரர் கூட வரவில்லை என்பது நிலைமை மோசம் என்பதை உணர்த்தியது. 9.15 மணிக்கு அங்கு வந்த கிங், நிலைமையை தெரிந்துகொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் காலை உணவுக்கு வீட்டுக்கு சென்றார். திரும்பி வரும்போது வீரர்கள் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். 

பேச வந்த அதிகாரிகளை சத்தம்போட்டு திருப்பி அனுப்பினார்கள். சமிக்ஞை பிரிவில் signal centre இருந்த வீரர்களும் சேர்ந்துகொண்டபோது கிளர்ச்சியின் மையப்பொறி பற்ற வைக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே பிப்ரவரி 1 அன்று இரவில், முகாமின் சுவரில் ஜெய் ஹிந்த், வெள்ளையனே வெளியேறு ஆகிய முழக்கங்கள் பெயின்டில் எழுதப்பட்டன. கடற்படை கொண்டாட்ட தினம் ஆன பிப்ரவரி 1 அன்று அவ்வாறு முகத்தில் அறைந்தது போல் எழுதப்பட்டு இருந்தது என்பது பெருத்த அவமானத்துக்கு உரியது. 2ஆம் நாள் நள்ளிரவில் தந்தி அனுப்பும் வீரர் Balai Chandra Dutt கைகளில் பெயிண்ட் கறைகளுடன் நடமாடியதை கண்ட உயர் அதிகாரி, தத்தை கைது செய்தான். தத்தின் லாக்கர் திறக்கப்பட்டது. பல கடிதங்களும் Speeches of Pandit Jawaharlal Nehru, The Communist answer to the Congress charges ஆகிய இரு நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.  கூடவே கண்டுபிடிக்கபட்ட ஒரு துண்டறிக்கை, இந்தியாவின் முழுமையான விடுதலையை வலியுறுத்தியது மட்டும் இன்றி வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற ஒரே வழி மீண்டும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்துவது மட்டுமே என்றும் இதற்காக ஆசாத் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சொன்னது.

கிளர்ச்சியின் மூலகர்த்தாவை பிடித்துவிட்டோம் என உயர் அதிகாரிகள் கும்மாளம் போட்டனர். ஆனால் தல்வாரின் தலைமை அதிகாரி கிங்கின் காரில், பிப்ரவரி 6 நள்ளிரவில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதப்பட்டது மட்டும் இன்றி டயர்களில் காற்றும் வெளியேற்றப்பட்டு இருந்தது. கூடவே கிங்குக்கு மிரட்டல் கடிதங்களும் வந்தன. 8ஆம் நாள் காலையில் தல்வாரில் முன்னறிவிப்பு இன்றி பார்வையிட வந்த கிங் பெண் வீரர்கள் பகுதியில் நுழைந்தபோது, சிலர் பூனை போல ஒலியெழுப்பி அவமானப் படுத்தினர். கிங் மிக மோசமான சொற்களால் வசை பாடினான். வேசை மகன்கள், காட்டுமிராண்டிகள், கூலிகாரப்பயல்கள் போன்ற சொற்கள். 

கிங்கின் வசைபாடுதல் குறித்து புகார் செய்த 14 வீரர்களை விசாரிக்க 18 பிப்ரவரி அன்று நீதிமன்றம் கூடியது. "நான் முகாமுக்கு சென்றபோது வீரர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை, எழுந்து நில்லுங்கள் என்று நான் உத்தரவு இட்டேன், அப்போதும் அவர்கள் நிற்கவில்லை" என்று விசாரணையின்போது கிங் வாக்குமூலம் அளித்துள்ளார். 

4

தல்வாரில் கிளர்ச்சியின் சங்கொலி

18 பிப்ரவரி காலை 0730: காலை உணவை வீரர்கள் புறக்கணித்தனர்.

0905: கமாண்டர் கிங் வருகை, ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பி சென்றார்

0945: அணிவகுப்புக்கு உத்தரவு இடப்பட்டது, ஆனால் ஜூனியர் வீரர்கள் வர மறுப்பு

1045: நிலைமையை பாம்பேயில் இருந்த Flag Officer க்கு கிங் தெரிவிக்கின்றார். பெண் வீரர்கள் வெளியேற்றப் பட்டனர்.

1130: வெடிபொருட்கள், ஆயுதங்களை Castle Barracks க்கு வீரர்கள் எடுத்துக்கொண்டு சென்றார்கள், கிளர்ச்சி அங்கும் பரவும் என்பதை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.

1200: Flag Officer பேச்சுவார்த்தை நடத்த வருகின்றார். அதற்கு முன் வீரர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கட்டளை இடுகின்றார். 1220க்கு அங்கிருந்து திரும்புகின்றார்.

1700: கிங் நீக்கப்பட்டு Inigo James என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று Flag Officer அறிவித்ததுடன், 19ஆம் தேதி காலை 0930 மணிக்கு வீரர்கள் தம் புகார் மனுவை அளிக்கலாம், ஆனால் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வீரர்களின் பிரதிநிதிகள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.

இதன் பின் Leading Signalman கான் என்பவர் தலைமையில் 14 பேர் கொண்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டது. Free Press Journal  அலுவலகத்துக்கு சென்ற ஒரு வீரர், வேலை நிறுத்தம் செய்யும் செய்தியை கொடுக்கின்றார்.

... .... ...


நூலில் கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்தில் எந்த வகையிலும் உதவவில்லை என்று நூலாசிரியர் ஒரு வரியில் சொல்லிவிட்டு போகின்றார். 1948இல் இந்திய கடற்படையில் சேர்ந்த அவருக்கு, கம்யூனிஸ்ட்டுக்களின் மகத்தான பங்களிப்பை பதிவிடுவதிலும், காங்கிரசின், காந்தியின் துரோக நிலையை வெளிச்சம் ஆக்குவதிலும் ஒரு ராணுவ அதிகாரி என்ற முறையில் சங்கடங்கள் இருந்து இருக்கலாம். 

நூல் வெளியீடு:Vij Books India Pvt Ltd, New Delhi

1946 பிப்ரவரி கப்பற்படை புரட்சி


1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பிறகு, விடுதலைபோராட்ட இயக்கம் சொல்லத்தக்க பெரிய அளவிலான மக்கள் இயக்கங்களை திட்டமிடவில்லை. அநேகமாக காங்கிரஸ் இயக்கம் முடங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும்.  ஆனால் 1947இல் தேச விடுதலை, இது எப்படி சாத்தியம் ஆனது?

1939இல் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. ஹிட்லர் தொடங்கி வைத்த இந்தப் பேரழிவு, 1945இல் முடிவுக்கு வந்தது. 20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இந்த உலகப்போரில் தம் உயிரை  ஈந்தனர். போரின் தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு கனவு இருந்தது, அதாவது ஜெர்மானிய ஹிட்லர், இத்தாலிய முசோலினி, கிழக்கே ஜப்பான் ஆகியோர் இணைந்து ஒரு வேளை சோவியத் யூனியனை அழித்தால் மவுனமாக நாம் அதை அனுமதிப்போம் என்பதே அக்கனவு. 1941 ஜூன் 22 அன்று ஹிட்லர் சோவியத்தின் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால் வரலாறு அமெரிக்காவின் கனவை மண்ணாக்கியது. சோவியத் படைகள் ஒருவேளை ஹிட்லரை அழித்திடாமல் இருந்திருந்தால், ஹிட்லர் அமெரிக்காவையும் அழித்திருப்பான் என்பதே உண்மை.

இங்கே இந்தியாவில் உலகப்போரின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என தோழர் பசவ புன்னையா பிற்காலத்தில் எழுதினார். கட்சி பாசிச யுத்த எதிர்ப்பு நிலை எடுத்தது. இந்த நிலைப்பாடு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, இன்னும் கூட சற்று நீக்குப்போகுடன், தந்திரோபாயமாக நிலைமையை கையாண்டு இருந்திருக்கலாம் என பின்னாட்களில் கட்சி தன் விமர்சனம் செய்துகொள்ள வேண்டி இருந்தது. கட்சியின் இந்த நிலைப்பாட்டை, காங்கிரஸின் பெரும் செல்வந்தர்களும் தலைவர்களும் தம் மோசமான கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அதே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், பாசிசம் தோல்வி அடைய வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். காரணம், போரின் போக்கும் போரின் முடிவும் இந்தியாவின் விடுதலையை பாதிக்கும் என்பதை அவர்களும் உணர்ந்து இருந்தார்கள். குறிப்பாக சோவியத் வெற்றி பெறுவதும் சரி, வீழ்வதும் சரி, அது சோவியத்துடன் நின்று விடப்போவதில்லை, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நலனையும், உலகெங்கும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப்போராடி வரும் மக்கள் இயக்கங்களையும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கும் என்ற கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை அத்தகைய முற்போக்காளர்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் மக்களும் மட்டுமே அன்று புரிந்துகொண்டு இருந்தனர்.

இப்பின்னணியில்தான் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் Quit India தொடங்கியது. ஆகஸ்ட் 9 அன்று காந்தியும் பிற தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியால் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி சி ஜோஷி, பிரிட்டிஷ் அரசின் இந்த அடக்குமுறையை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். கூடவே, கம்யூனிஸ்ட்டுக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு ஆகியன குறித்தும் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜோஷி குறிப்பிட்டு, கம்யூனிஸ்டுகள் மீதான அவதூறு தவறு என்று சுட்டிகாட்ட வேண்டியிருந்தது. "...இந்த இரண்டு வருடங்களில் எங்கள் தோழர்கள் நான்கு பேர் (கேரளாவில் கையூர் தியாகிகள்) பிரிட்டிஷ் ஆட்சியால் தூக்கில் இடப்பட்டார்கள். 400 பேர் வரை இன்னும் சிறையில் உள்ளனர். 100 தோழர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிரிட்டிஷ் சர்க்கார் எங்களுக்கு செய்யும் உதவியை பார்த்தீர்களா?" என்று எழுதினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கிரீடத்தின் மிக உயர்ந்த ஜொலிக்கின்ற வைரம் இந்தியாவே என்று சொன்ன பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை, இனிமேலும் நாம் இந்தியாவில் காலம் தள்ள முடியாது என்று புலம்ப வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு இறுதி நெருக்கடியை கொடுத்தது 1946 கப்பற்படை புரட்சிதான். 

1942 ஆகஸ்ட் 13 அன்று உத்தர பிரதேசம் மதுபங்கா காவல் நிலையம் முற்றுகை, பிஹார், வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் ,  பல நூறு மக்களை போலீசும் ராணுவமும் சுட்டுக் கொன்றது, பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது. இடையில் வந்ததுதான் வங்கப்பஞ்சம், அது அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சரச்சில் திட்டமிட்டு உருவாக்கிய செயற்கையான பஞ்சம். இந்தியாவில் இருந்த, இந்தியாவுக்கு பிற நாடுகளில் இருந்து வந்து கொண்டு இருந்த அனைத்து உணவுப்பொருட்களையும் பிரிட்டனுக்கு கொண்டு சென்று, இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் செத்து மடியக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்.

... ....

1946 பிப்ரவரி 18 அன்று, பம்பாயில் பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த இந்திய மாலுமிகள், HMIS தல்வார் என்னும் போர்க்கப்பலில் இருந்து பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஏற்றிப் பறக்கவிட்டனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் மோசமான, கொடூரமான நடத்தையை கண்டித்தும்    தங்களது பிற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் தொடங்கப் பட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான உணர்வே மேலோங்கி இருந்தது. தொடர்ந்து மேலும் பல கப்பல்களுக்கும் போராட்டம் பரவியது. போராட்டம் கராச்சி, சென்னை தூத்துக்குடி என இந்தியா எங்கும் பரவியது. போராடும் மாலுமிகளுக்கு ஆதரவாக, லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்களை நடத்தினார்கள். மக்கள் தம் வீடுகளில் சப்பாத்தி, ரொட்டிகளை சுட்டு பழங்களுடன் சுமந்து சென்று போராடும் கப்பற்படை வீரர்களுக்கு அள்ளிக்கொடுத்தார்கள். ராணுவ வீரர்களை ஏவி மாலுமிகளை சுடுமாறு அதிகாரிகள் உத்தரவு இட்டார்கள், ஆனால் சகா வீரர்களை சுட மறுத்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமானது. அதிகாரிகளின் உத்தரவை படை வீரர்கள் மீறியதை நவீன காலத்தில் அநேகமாக முதல் முறையாக அங்கேதான் பார்க்க முடிந்தது.

போராடும் வீரர்கள், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டியபோது, காங்கிரசும் லீக்கும் ஆதரவு தர மறுத்தனர். கட்டுக்கோப்பான ராணுவ வீரர்கள் தம் உறுதிமொழிக்கு மாறாக போராட்டத்தில் இறங்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நாளை விடுதலை பெற்ற இந்தியாவிலும் அவர்கள் இப்படித்தான் அரசை எதிர்த்துப் போராடக்கூடும் என்றும், இதைக் காண 125 வயது வரை வாழ வேண்டுமா என்றும் வெளிப்படையாகவே பேசினார் காந்தி. கம்யூனிஸ்டுகளும் மக்களும் ஆதரிக்க, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் கைவிட, மகத்தான ஒரு புரட்சி சில நாட்களில் கைவிடப்பட்டது.

... ... ....

1905இல் சோவியத் புரட்சியை தொடங்கி வைத்த பொட்டெம்கின்னும், 1917இல் ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீது குண்டு வீசி புரட்சி தொடங்கியதை அறிவித்த அரோரா என்ற கப்பலும், பிற்காலத்தில் சோவியத் அரசால் பாதுகாக்கப் பட்டன. தல்வார் கப்பல் எங்கே?