வெள்ளி, நவம்பர் 09, 2018

வாசிக்கத்தொடங்கிய கதை (2)




7) நான் ஆறாவது வகுப்புப் படிக்கும்போது வரலாறு + புவியியல் பாடம் நடத்திய திரு.வடிவேல் வாத்தியார்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் பொது அறிவு வினாக்களை எழுப்பி மாணவர்களை நாளிதழ்களை வாசிக்கத் தூண்டியவர். அந்த வகையில் பள்ளிப்பாடங்களுக்கு வெளியே உள்ள உலகத்தை எனை கவனிக்க தூண்டியதில் அவரே முதற்காரணமாக இருந்தார்.

கார்ட்டுன் கதைகளான இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட் (அந்த ஸ்டெல்லா இப்போதும் குதிரைவால் கொண்டையுடன், குட்டைப்பாவாடையுடன்தான் வலம்வருகின்றாளா?), மந்திரவாதி மாண்ட்ரேக், வேதாளன் (Phantom)... வேதாளன் தனது மனைவியுடனும் பிள்ளையுடனும் அடர்ந்த காட்டில் வாழ்கின்றான்; வேதாளன் தனது முகத்தை வாசிப்போருக்கு காட்டுவதில்லை, முகமூடி கொண்டு மூடியபடியேதான் இருக்கின்றான்; எப்போதாவது நதியில் குளிக்கும்போதும் கூட வாசிப்போருக்கு தனது முதுகைத்தான் காட்டுகின்றான், முகத்தை திருப்பிக்கொள்கின்றான். அதிவீரதீரசாகசக்காரனான வேதாளனின் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என்ற குழந்தைப்பருவத்து ஏக்கம் இப்போதும் தீராமல் என்னிடம் மிச்சமாகவே நிற்கின்றது. வாசிப்பவரை கதாபாத்திரத்துடன்  நெருங்கிவரச் செய்யும் வேதாளன் பாத்திரத்தைப் படைத்த ஆசிரியனின் இந்தத் தந்திரம் இத்தனை வயசுக்குப் பிறகு இப்போது பிடிபடுகின்றது.  குரங்குகளும் யானைகளும் சிங்கம் புலி இன்னபிற விலங்குகளும் வேதாளனுடன் மட்டுமின்றி சோறுதண்ணி மறந்து கதியே எனக்கிடந்து வாசித்த அன்றைய என்போன்ற குழந்தைகளுடனும் நெருங்கிய உறவுகொண்டுவிடுகின்றன. வாண்டுமாமா, அணில், முயல், தவறாமல் இந்த வரிசையில் நிலைத்து நிற்பது அம்புலிமாமா. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கைமரத்தின் மீதேறி அங்கு தொங்கும் வேதாளத்தின் உடலை வெட்டி வீழ்த்தினான், அப்போது அதன் உள்ளிருந்த வேதாளம் இப்போதும் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கின்றது. பி.சி.சர்க்காரின் தந்திரக்கதைகள் ஆர்வத்தை தூண்டுவன. பாதாள உலகின் பறக்கும் பாப்பா... 

8) நான் பள்ளிவாழ்க்கையை வாழ்ந்த மதுரை செல்லூரில் கைத்தறி முதலாளிமார்கள் நடத்திய கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகம் அன்றைய என் வயசுக்கு போதிய தீனிபோட்டது என்றே சொல்வேன். கலைவாணரின் கண்களும் சிரிக்கின்ற புகைப்படம் மட்டுமின்றி தனது தோளில் கிடக்கும் கனத்த துண்டின் இரண்டுமுனைகளையும் பிடித்தபடியே புன்னகை புரியும் சிவாஜிகணேசன், மேல்நோக்கி சிரித்தவாறே இருக்கும் ஜெய்சங்கர், கறுப்புவெள்ளையில் ஆன இவர்களின் புகைப்படங்கள் மாட்டப்படிருந்த கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகத்தின் சுவர்கள் இப்போதும் நினைவில் நிற்கின்றன. தினத்தந்தி, தினமணி, தினமணிகதிர், தினமலர், முரசொலி, உண்மை, விடுதலை, சோவியத்நாடு, குமுதம், ஆனந்தவிகடன், கல்கண்டு, ராணி, சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம் என 70களில் வெளிவந்த அனைத்து நாளிதழ்கள், வார மாத ஏடுகள் அனைத்தையும் வாசிக்கின்ற களமாக அது இருந்தது. தினமணிகதிரில்தான் குஷ்வந்த்சிங்கின் ட்ரெய்ன் டு பாகிஸ்தான் மொழிபெயர்ப்பை வாசித்தேன், அப்போது வயது பதின்மூன்று. இங்கேதான் மு.கருணாநிதியின் நெஞ்சுக்குநீதி, குறளோவியம், பொன்னர் சங்கர் ஆகிய கதைகளை வாசித்தேன்.  மராமத்து என்ற சொல்லை மரமத்து என்று அரசுஊழியர் டைப் செய்துவிட,  மிகப்பெரிய மரத்தால் ஆன மத்தை எவ்வாறு செய்வது என்று அரசு நிர்வாகம் மண்டையைப் பிய்த்துக்கொள்கின்றது; அரசு நிர்வாக எந்திரம் உண்மையில் அச்சடிக்கப்பட்ட  சொற்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கின்ற உணர்ச்சிகள் ஏதுமற்ற எந்திரமே என்பதை மரமத்து என்ற கதையில் நகைச்சுவையுடன் சொல்வார் சாவி.  

9) செல்லூரின் அரசு நூலகம் அடுத்தது. திரு.சுந்தரராஜன் என்ற தமிழ்ப்புலவர் எங்கள் வீட்டின் அருகில் இருந்தார்; அவர் கிளைநூலக உறுப்பினர்.  தனது உறுப்பினர் அட்டையை ஆறாவது ஏழாவது படித்த என்னிடம் கொடுத்து புத்தகங்களை எடுத்து வாசிக்கச்சொன்னாலும் சொன்னார், புத்தகங்களே கதியென்று கிடந்தேன். ஒரே நாளில் மூன்று புத்தகங்களை மாற்றி மாற்றிப் படித்து முடித்து நூலகரின் செல்லமான கோபத்துக்கு ஆளானதும் உண்டு. அவரது வீட்டில்தான் ராணிமுத்து அறிமுகமானது. அதில் வரும் கேள்வி-பதிலை (யாரிடம் பொய் சொல்லக்கூடாது? வக்கீல்/டாக்டர்...) நிரப்பி வெட்டியெடுத்து ஒவ்வொருமாதமும் அவர் அனுப்புவார்; எப்போதாவது பரிசு கிடைத்ததா என்பது எனக்கு நினைவில் இல்லை. கண்ணதாசன், குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன், கோவி.மணிசேகரன், சாண்டில்யன், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, தமிழ்வாணன், ஙே என்று விழிக்கும் ராஜேந்திரகுமார், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன்  (பாக்கியம் ராமசாமி), மகரிஷி, பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, லட்சுமி என்ற டாக்டர் திரிபுரசுந்தரி... ஓவியர்கள் கோபுலு, ஜெயராஜ், மணியம் செல்வன் போன்ற பெயர்கள் எல்லா, தினத்தந்தி, ராணிமுத்து, மாலைமதி ஆகியவற்றின் மூலமே எனக்கு அறிமுகம். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒருநாள் இரவு காரில் பயணம் செய்தபோது காரின் முகப்பு விளக்கு ஒளியில் வெள்ளை நிறத்தில் ‘பேய்ஒன்று வானத்தில் பறப்பதைக்கண்ட காரோட்டி பயந்து நடுங்கி அலறியதை லட்சுமி எழுதியிருந்தார், இப்போதும் நினைவில் உள்ளது.  குப்பைகளை பாலித்தீன் பையில் போட்டு குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விடுவது அங்குள்ள மக்களின் வழக்கம், அப்படியான ஒரு குப்பை நிரம்பிய பை ஒன்றுதான் உள்ளிருந்த காற்றின் காரணமாக உயரே எழும்ப் பறந்துகொண்டிருந்தது என்பதை அவனுக்கு விளக்கிச்சொல்ல வேண்டியிருந்ததை லட்சுமி எழுதியிருப்பார். ஆப்பிரிக்காவில் அப்படியாக பாலித்தீன் பை கலாச்சாரம் இருந்தது என்பதை வாசிக்கும்போது வியப்பாக இருந்தது, இப்போது இந்தியாவே  பாலீத்தீன் பைக்குள்தான் இருக்கின்றது.  பாலித்தீன் மலைகளைப் பார்க்கும்போதெல்லாம் ‘இப்படியும் ஒரு காலம் இந்தியாவுக்கு வரும் என்று லட்சுமி அன்றைக்கு நினைத்தும் பார்த்திருப்பாரோ?என்று அவரது ஞாபகம் துரத்தியவண்ணம் உள்ளது.  

10) சுஜாதாவின் நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். சுஜாதாவின் கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகள் விருவிருப்பாகப்போயின என்பதைத்தாண்டி மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட அவரது புதிய தமிழ்நடையும் எழுத்துநடையும் என்னை மயக்கின. என் வீட்டில் பழைய ஒரு அட்டைப்பெட்டியில் (நெசவாளியின் குடும்பம் எங்களுடையது; அலமாரி, பீரோ, மின்விசிறி போன்ற ‘ஆடம்பரப்பொருட்களெல்லாம் கிடையாது) குமுதத்தில் தொடர்ந்து வெளியான சுஜாதாவின் ‘அனிதா இளம்மனைவிநாவலின் கட்டிங்கின் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் ஒன்றை என் மூத்த அண்ணன் வைத்திருந்தார். என்னவென்றே தெரியாமல் அதை எடுத்து நான் வாசிக்கத்தொடங்கினேன், விறுவிறுப்பாக இருந்தது, சுஜாதா இப்படித்தான் அறிமுகம் ஆனார்.  அவரது எழுத்தில் இருந்த க்ரைம் நாவல்களுக்கேயான உத்தியும் நியாயமும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரது எழுத்துக்களில் இல்லை என்பதை உணர்ந்தேன் (வெறும் கொலையும் கொள்ளையும் மட்டுமே க்ரைம் நாவலாக ஆகிவிடாது).   

11) பெண்களின் அங்கங்களை அங்குலம் அங்குலமாக வர்ணிக்கும் புஷ்பாதங்கதுரையின் எழுத்துக்கள் வேறுவிதத்தில் அந்த வயதில் ஆளை மயக்கின. அவரே ஸ்ரீவேணுகோபாலனாக திருவரங்கன்உலா எழுதியதை வாசிக்கும்போது அவரது எழுத்துலகின் இன்னொரு முகத்தைக் காட்டியது என்பது உண்மை. அதேபோல் கடலுக்குள் ஜூலி.  பாலகுமாரனின் இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள் ஆகியன வேறு தளத்தில் இயங்கின.  அன்றைய வயதில் கவர்ச்சிகரமாக இருந்த அவரது எழுத்துக்களை இப்போது நினைவுபடுத்திப்பார்க்கும்போது ஆண் பெண் உறவு குறித்த, தொழிற்சங்க அரசியல் குறித்த அவரது பார்வை இப்போது புரிகின்றது. இதன் பிறகு நூலகத்தில் இவர்கள் எழுதிய நூல்களைத்தேடி வாசிக்கத் தொடங்கினேன். கண்ணதாசன், ஜெயகாந்தன், பாக்கியம் ராமசாமி + ஓவியர் ஜெ...யின் அப்புசாமி சீதாப்பாட்டி... சாண்டில்யனின் மிகக்கனத்த புத்தகங்களின் பாகங்களை காற்றிலும் கடிய அவரது குதிரைகளின் வேகத்தைவிடவும் அதிக வேகத்தில் வாசித்து முடிக்கப்பழகினேன். ராஜாஜியின் வியாசர்விருந்தை இரண்டு முறை வாசித்தேன்.

12) இப்படியே போய்க்கொண்டிருந்த வாசிப்புப்பயணத்தில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்தவர் எனது மூத்த அண்ணன். கம்யூனிஸ்ட்டான அவர் ஒருநாள் ‘நாளைக்கு ஒரு க்ளாஸ் இருக்குது, வாஎன்றார்.  சிஐடியூ சங்கமான செல்லூர் ஐக்கிய கைத்தறி நெசவாளர் சங்கக்கட்டிடத்தில் அந்த க்ளாஸ் நடந்தது. இரண்டு அடி அகலம் மூன்றடி உயரத்தில் இருந்த ஆயில் வண்ணப்படங்களில் இருந்தவர்கள் லெனின், ஸ்டாலின் என்று தெரிந்துகொண்டேன். இவர்கள் இருவரும் நன்றாக சவரம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்க வேறு இரண்டு படங்களில் இருந்தவர்கள் கோட் அணிந்து வாய் தெரியாத அளவுக்கு மீசையுடனும் நீண்ட தாடியுடனும் காணப்பட்டனர், வெளிநாட்டுக்காரர்கள் என்று தெரிந்தது. மேலும் பல வண்ண, கறுப்புவெள்ளைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. வகுப்பில் என்னைப்போல் 13, 14, 15 வயசுப்பையன்கள் சிலரும் இருந்தார்கள். சூரியன், பூமி, குரங்கில் இருந்து மனிதன் தோன்றியது, பரிணாம வளர்ச்சி... என்று வகுப்பெடுத்தார் ஒருவர். வித்தியாசமாக இருந்தது. சிலந்தியும் ஈயும், குரங்கில் இருந்து மனிதனாக மாறிய... என்பது போன்ற சிகப்பு அட்டை போட்ட புத்தகங்களை காசு வாங்காமல் படிக்கக் கொடுத்தார்கள். சிலந்தியும் ஈயும் அதுவரையிலும் நான் வாசிக்காத வேறு ஒரு உலகத்தை திறந்துவிட்டது.  வால்காவில் இருந்து கங்கை வரை என்று ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொன்னார்கள், ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதிய அந்த நூலை செல்லூர் நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். தொடர்ந்து நெசவாளர் சங்கத்திற்கு செல்லத்தொடங்கினேன். கே பி ஜானகி அம்மாள், .மாயாண்டிபாரதி, பாப்பா உமாநாத் போன்ற பெரும் தியாகிகளை அவர்களின் வரலாறு எதுவும் தெரியாத போதே அந்த சங்கத்தில் பலமுறை பார்த்துள்ளேன். அதன் பின் சிந்து முதல் கங்கை வரை.  அவரே பல்வேறு சமயங்களின் தத்துவங்களை தனித்தனிப்புத்தகமாக எழுதியிருக்கின்றார் என்பதை வயது கூடும்போது தெரிந்து கொண்டேன். தீக்கதிர் என்றொரு வாரப்பத்திரிக்கை வெளிவருவது தெரிந்தது. செம்மலர், சிகரம், கார்க்கி, மனிதன், நயனதாரா என்ற பெயரிலும் சில பருவ ஏடுகள் வெளிவருகின்றன என்பதையும் தெரிந்துகொண்டேன். தவிர சோவியத்நாடு தமிழ்ப்பதிப்பை எனது அண்ணன் வீட்டுக்கே வரவழைத்திருந்தார். அதன் வழவழப்பான தாளும் குறிப்பாக சோவியத்தின் விண்வெளி அறிவியல்துறையில் அவர்கள் செய்த சாகசங்களும் சோவியத் தொடர்பான நூல்களை வாசிக்கத்தூண்டின. சோவியத் ரஷ்யாவில் இருந்து வெளிவரும் தரம்வாய்ந்த தாளில் அச்சடிக்கபட்ட நூல்கள் 15 பைசா, இருபது பைசா, ஒரு ரூபாய் என நம்பமுடியாத விலையில் இருந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டேன். மதுரை மேலக்கோபுரத்தெருவில் இருந்த நியு செஞ்சுரி புக் ஹவுஸில் சோவியத் நூல்கள் கிடைப்பதை எனது அண்ணனின் நண்பர்கள் சொல்ல, அவர்களுடன் சென்று சில நூல்களை வாங்கினேன். ஜான் ரீட் எழுதிய உலகைக்குலுக்கிய பத்து நாட்கள் அதில் ஒன்று. இப்போதும் என்னிடம் உள்ளது, அதன் அன்றைய விலை ரூ.3.50.

13) ஈ.எம்.எஸ்.நம்பூரிப்பாட், ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமண்யம், வி.பி.சிந்தன், ஈ.கே. நாயனார், கே.ஆர்.கௌரி, உமாநாத், கே.பி.ஜானகி அம்மாள், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், லியோனித் ப்ரஷ்னேவ், வியட்நாம், ஹோ சி மின், சீனா, மா சே துங், க்யூபா, ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, கிழக்கு ஜெர்மனி, ருமேனியா, பல்கேரியா, போலந்து, செக்கோஸ்லோவாகியா, யுகோஸ்லோவாக்கியா, அமெரிக்க சி.ஐ.ஏ போன்ற சொற்கள் அறிமுகமாயின. அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியன் பங்கு பெறாமல் புறக்கணித்த்தும் சோவியத்தில் நடந்த ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்ததும் நினைவில் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலின் முதல் இடங்களை சோவியத் யூனியனும் ஐரோப்பியக்கண்டம் முழுவதும் பரவிக்கிடந்த பிற சோசலிஸ்ட் நாடுகளும் 1990 வரையிலும் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததை இப்போது நினைத்துப்பார்க்கின்றேன்.  பின்னாட்களில் ரீகல் தியேட்டரில் தி க்ரேட் ரஷ்யன் சர்க்கஸ் என்ற படத்தை பார்த்து அதிசயித்தேன்.

14) இதன் பின்னர் வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தபின் நண்பன் சுந்தரவேல் ‘சென்னையில் புத்தகக்கண்காட்சி ஒன்று ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடக்குது, வா போகலாம்என ஒரு ஜனவரி மாதம் (1983 என்று நினைவு)  என்னை அழைத்துச்சென்றான். காய்தேமில்லத் பெண்கள் கல்லூரியில் நடந்துகொண்டிருந்த கண்காட்சிக்கு சென்றோம். பபாசி என்ற சொல் அறிமுகம் ஆனது. அநேகமாக 50 பதிப்பாளர்கள் ஸ்டால் போட்டிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு வருடமும் செல்லத்தொடங்கினேன். அன்றைய நாணய மதிப்பில் 300, 400 ரூபாய்க்கு நிறையவே புத்தகங்களை வாங்கலாம். என்னிடம் உள்ள மிகப்பல நூல்கள் சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வாங்கியவையே.  இப்போது ஒரு புத்தகத்தின் விலையே 300, 400 ரூபாய்க்கும் மேல்.  குறிப்பாக அன்னம், அகரம், நர்மதா, தமிழ்ப்புத்தகாலயம், காவ்யா, கலைஞன், என் சி பி ஹெச் ஆகிய பதிப்பகங்களை நாடிச்சென்றேன்.  
(தொடரும்)

திங்கள், ஏப்ரல் 09, 2018

"நல்ல"பாம்புடன் ஒரு இரவு


பாம்புகள் மீதான பயம் இயற்கையாகவே மனித மனதுக்குள் உறைந்துள்ளது. அனைத்துப்பாம்புகளும் விசம் உள்ளவை அல்ல என்று அறிவியல் சொல்கின்றது; காட்டுயிர் ஆர்வலர்களும் மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். கண்ணில் கண்ட பாம்புகளை எல்லாம் அடித்துக்கொன்றுவிடாதீர்கள் என்ற வேண்டுகோளின் பின்னால் இந்த உண்மைதான் பலமாக இருக்கின்றது. டிஸ்கவரி, நேஷனல் ஜ்யோக்ரஃபி, அனிமல் ப்ளானெட் சானல்கள் நமக்குப் பழக்கமாகும் முன் கிண்டி பூங்காவில் காப்பாளர்கள் பாம்புகளை தலையில் அழுத்திப்பிடித்து கண்ணாடி டம்ளரில் விசத்தை எடுக்கும் காட்சிதான் நமக்கெல்லாம் பாம்புகள் குறித்த பிம்பத்தை மனதுக்குள் சித்திரமாக இருந்தது.  சானல்கள் வந்தபின்னர் ரொமுலஸ் விட்டேகர், ஸ்டீவ் இர்வின் போன்றோரும் ஆப்பிரிக்காவின் கொடிய விசப்பாம்பான மாம்பா வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட பின்னர் அதனைப் பிடிப்பதற்காகவே இன்பச்சுற்றுலா செல்வதுபோல காரில் ஜாலியாக பயணிக்கும் வனவுயிர் ஆர்வலர்களும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை கட்டுக்குள் அடக்கி ஒரு அடி தூரத்தில் காமிரா கொண்டு படம் எடுத்தது மட்டுமின்றி படமெடுத்து நிற்கும் அதன் தலையில் ஒரு முத்தமும் இடும் பெயர் தெரியாத அந்த மாவீரனும் இன்ன பிறரும் பாம்புகள் உள்ளிட்ட விசப்பிராணிகள் குறித்த புரிதலை நமக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மிகையில்லை. 

நகரங்கள் விரிவாக்கம் என்ற பெயரில் கிராமங்களும் காடுகளும் தொடர்ந்து அதிவேகமாக மனிதனால் அழிக்கப்படும்போது அங்கே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கின்ற அப்பிரதேசத்துக்குச் சொந்தமான பாம்புகள் போன்ற பிராணிகள் தமது வாழிடம் அழிக்கப்படும்போது குழப்பம் அடைகின்றன; இருப்பிடமும் உணவும் தேடி தடுமாறித்திரிகின்றன; உண்மை இவ்வாறிருக்க யானைகளின் பாதையில் புகுந்து அட்டகாசம் செய்து அவற்றின் வலசைப்பாதையை ஆக்கிரமித்து மனிதன் கட்டியுள்ள கட்டுமானங்களை யானைகள் அப்புறப்படுத்துவதை ‘யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்’ என்று மனிதர்கள் செய்தி வாசிக்கின்றார்கள்; இருப்பிடம் தேடியும் உணவு தேடியும் அலையும் பாம்புகளை ‘குடியிருப்புப் பகுதிக்குள் பாம்புகள்’ புகுந்துவிட்டதாக மனிதர்கள் புகார் செய்கின்றார்கள்.

12 வீடுகளே உள்ள எனது தெருவில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்; விடுமுறை நாட்களில் அவர்களின் ராஜ்ஜியம் தெருவில் களைகட்டும். ஒவ்வொரு தெருவிலும் கட்டப்படாத காலிமனைகள் இப்போதும் இருக்கின்றன. புதர் மண்டிக்கிடக்கும் இம்மனைகளில் பாம்புகள் குடியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இரவு நேரங்களில் அவை நடமாடியதை விடிகாலையில் எங்களால் கண்டுகொள்ள முடியும்; குறிப்பாக கோடைகாலத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத உச்சிவெயில் நேரத்தில் அவை மரம் செடிகொடிகளின் குளிர்ச்சியை நாடி ’எனது’ வீட்டுக்குள்ளேயே ’அரவ’மின்றி  நடமாடும்போது எனது குடும்பத்தினர் பலமுறை பார்த்துள்ளோம். அவற்றில் நாகம், சாரை ஆகியனவும் பெயர் அறியாத பாம்புகளும் அடக்கம். அவற்றைப்பார்த்து பதட்டமின்றி நிதானப்பட மேற்படி சானல்கள் கற்றுக்கொடுத்துள்ளன என்பது உண்மைதான் எனினும் பாம்புகளை நெருங்கி ‘நீ  நல்லபாம்பா, இல்லை ரொம்ப நல்லபாம்பா?’ என்று கேட்டுவிடும் துணிச்சல் இதுவரை வரவில்லை என்பதும் உண்மைதான்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இரவு பதினொரு மணிக்கு தெரு முனையில் மலைப்பாம்புதான் இது என்று ஒரு சத்தம் கேட்க, நான் பார்க்கும்போது இரண்டு குடும்பங்கள் தெருவின் ஒரு ஓரமாய் பார்த்தபடி இருந்தார்கள். சினிமாதொழினுட்பம் பயின்ற சரவணன் என்ற நண்பர் கையில் ஆறடி நீளமுள்ள கம்பு ஒன்றைப் பிடித்தபடி நின்றிருந்தார். உடனடியாக நான் அங்கே சென்றேன். என் மனைவியும் என்னுடன் வந்தார். வீட்டுச்சுவர் ஓரமாக நான் பார்த்தேன், முழங்கையின் அளவு பருமனும் சுமார் நாலடி நீளமும் கருப்பு ப்ரௌன் வண்ணத்தில்  உடலும் அதே வண்ணத்தில் டைமன் வடிவங்களும் கொண்ட பாம்பு அது. ஸ் ஸ் என்று சீறிக்கொண்டிருந்தது. ஆங்கில எஸ் எழுத்து தொடர்ச்சியாக சுருண்டு கிடந்தால் எப்படி இருக்குமோ அந்த வடிவில் உடலை   சுருட்டிக்கொண்டு கிடந்தது.  சிலர் அதனை கொன்றுவிடலாம் என்றனர். சரவணனும் நானும் ‘மலைப்பாம்புக்கு விசம் இல்லை, கொல்ல வேண்டாம், பிடித்துவிடலாம்’ என்று வக்கீலாக வாதாடினோம். அந்த இடத்தை விட்டு தப்பியோடவே முயற்சி செய்தது. சரவணனின் யோசனைப்படியே ஒரு ஈயச்சட்டியைக்கொண்டுவந்து பாம்பு நகரும் திசையில் தரையோடு வைத்து பாம்பை அதனுள் நுழையச்செய்தோம். பாம்பு நுழைந்து சமர்த்தாக உட்கார்ந்தபின்னர் சட்டியை நிமிர்த்தினோம்; காற்றுப்புகக்கூடிய பெரிய பை ஒன்றைக்கொண்டு  சட்டியின் வாய் பையின் அடியைத்தொடும்வரை இழுத்து அதன் பின் பக்குவமாக சட்டியைக்கவிழ்த்தோம். இப்போது சட்டி கவிழ்ந்துவிட்டது, உள்ளே பாம்பு இருக்கின்றது, பையின் வாய் மேலே வந்துவிட்டது, தயாராக இருந்த கயிற்றால் ஓரளவு இடைவெளியில் பையை இறுகக்கட்டினோம். இப்போது மலைப்பாம்பைப் பிடித்தாகிவிட்டது. அடுத்த பிரச்னை ஆரம்பம்: நாய்களும் கீரிகளும் நடமாடும் இடத்தில் பாம்புடன் ஆன பையை விடியவிடிய தெருவில் போட்டுவைப்பதா? கூடாதெனில் பையை எங்கே வைப்பது? யார் வீட்டில் பத்திரப்படுத்துவது? எல்லோரும் மவுனம் ஆனார்கள். சரி நானே எடுத்துச்செல்கின்றேன் என்று முன்வந்தேன், மலைப்பாம்பு, விசம் இல்லை என்பதால் என் மனைவியும் ஒப்புக்கொண்டார். கையில் பாம்புள்ள பையை தூக்கிக்கொண்டு எனது வீட்டின் மாடி ஏறும் படியின் பக்கவாட்டு கிரில் கம்பியில் உயரே அதனைக் கட்டித்தொங்கவிட்டேன். தீயணைப்புதுறையை தொலைபேசியில் அழைத்தேன்.  பேசியவர் ப்ளூகிராஸ் எண்ணைக் கொடுத்துவிட்டு கொட்டாவி விட்டார். ப்ளூக்ராசில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. தூங்கச்சென்றோம்.

அது ஞாயிறு காலை. ஆயினும் ஆறு மணிக்கு எழுந்தோம். உள்ளே இருந்த மலைப்பாம்பு சட்டியில் இருந்து வெளியே நகர்ந்து பைக்குள்ளேயே சுற்றத்தொடங்கியது. நண்பர் சத்யநாராயணனை தொடர்பு கொண்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை நான் தொந்தரவு செய்துவிட்டேன் என்பது புரிந்தது. மன்னிப்புக்கோரினேன். வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள மிகப்பரந்த எனது அலுவலகத்தில் வார்தா புயலின் தாக்கத்தால் மிகப்பல மிகப்பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்தன; அவர் தனிப்பட்ட முயற்சி எடுத்துக்கொண்டு தமிழக அரசின் தலைமைச்செயலகம் வரை தொடர்பு கொண்டதன் பயனால் தமிழக வனத்துறையினர் பல நூறு மரக்கன்றுகளை அலுவலகத்தில் நட்டுள்ளனர். எனவே வனத்துறையினரின் உதவி வேண்டி நண்பரைத்தொடர்பு கொண்டேன். ஒரு எண்ணைக்கொடுத்தார். முயன்றபோது தொலைபேசியை ஒருவரும் எடுக்கவில்லை.  அவரே மீண்டும் வண்டலூர் மிருகக்காட்சிசாலையின் தொலைபேசி எண்ணைக்கொடுத்தார். (வீட்டில் இணைய வசதியை நான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளேன்; நான் பயன்படுத்துவதும் சாதாரணமான அடிப்படை செல்பேசிதான், காமிரா கூட இல்லாத செல்பேசி, எனவே அவரைத்தொந்தரவு செய்ய வேண்டி இருந்தது). இப்போது மிருகக்காட்சிசாலையில் ஒருவர் தொலைபேசியை எடுத்தார். ‘சார், மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துள்ளேன், வந்து எடுத்துச்செல்ல முடியுமா?’ என்று கேட்டேன். பாம்பின் அடையாளங்களையும் அதன் நடத்தையையும் ஒவ்வொன்றாக கேட்டார், சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவர் சொன்னார், ‘சார், என்ன சொல்றீங்க! நீங்க புடிச்சு வச்சிருக்கறது மலைப்பாம்பு இல்லை, கொடிய விசம்கொண்ட கண்ணாடிவிரியன், ரசல்ஸ் வைப்பர்!’. ஒரு விநாடி உடம்பு ஜில்லிட்டு சிலிர்த்தது. ‘கடிச்சா இருபது நிமிசத்துல இறந்து விடுவோம், ரத்தம் உறைந்து விடும். தள்ளி நில்லுங்க’ என்றார். ‘நீங்க வந்து எடுத்துச்செல்ல மாட்டீர்களா?’ என்றேன். வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்புகளை மட்டுமே வந்து எடுப்பது வழக்கம், தெருவில் திரிகின்ற பாம்புகளை நாங்கள் பிடிப்பதில்லை, நீங்கள் அதை பத்திரமாக எடுத்துச்சென்று ஏதாவது காட்டுக்குள் விட்டு விடுங்கள், விடுவிக்கும்போது மிகக்கவனமாக இருங்கள். அல்லது வேளச்சேரியில் வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சேர்த்துவிடுங்கள்’ என்றார். வேளச்சேரிக்கு பாம்பை பேருந்தில் எடுத்துச்செல்வதா, பையில் என்ன? என்று நடத்துனர் கேட்டால் என்ன சொல்வது, பாம்பு என்று சொன்னால் நடத்துநர் நம்புவாரா, நம்பினாலும் அனுமதிப்பாரா, நம்பவில்லை என்றால் ‘நீங்களே பைக்குள் கையை விட்டு செக் பண்ணுங்க சார்’ என்று நடத்துனரிடம் சொல்லிவிடலாமா என்றெல்லாம் சிந்தனை தறிகெட்டு ஓடியது.

சரி ஆனது ஆகட்டும், கொல்லக்கூடாது என்ற முடிவுடன் பிடிக்கப்பட்ட பாம்பை உயிருடன் விட்டுவிடுவதே சரி, அது கொடிய கண்ணாடிவிரியனாக இருந்தாலும் சரி என்ற முடிவுடன் பக்கத்து வீட்டு நண்பரை அழைத்தேன். மேலும் ஒரு பெரிய பையை போர்த்தி ஒரு கட்டுக்கட்டி ஸ்கூட்டரின் பின்னால் அவரை பையுடன் உட்காரவைத்து காட்டை நோக்கிப்பயணமானோம். சரியான முட்காடு ஒன்றை அடைந்தோம். கவனமுடன் பைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்தோம். ஈயச்சட்டியில் இருந்து வெளியே வந்த விரியன் மீண்டும் பைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டான். அவன் படமெடுக்கும் ரகம் இல்லை என்பதால் கையோடு கொண்டுசென்ற காமிராவில் நான் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டேன். காட்டில் கிடந்த கம்புகளை எடுத்து என்னதான் தள்ளினாலும் அவன் வெளியே வருவதாய் இல்லை. புதிதாக இருந்த பையை பாம்புடன் அப்படியே போட்டுவிட்டு வந்தால் சிறுவர்கள் பையை எடுத்துவிடக்கூடும், எனவே பையோடு விட்டுவிடுவது பெரும் தவறாகி விடும். வேறு வழியின்றி மூடப்பட்ட பையின் பக்கமாக சென்று பையைப்பிடித்து இழுத்து ஓரளவு தொலைவில் வீசினேன். வெளியே வந்த விரியன் சல்லென்று முட்புதருக்குள் சென்றான்.

பாம்புகளைப்பற்றி ஓரளவு படித்திருந்தும் தொடர்ந்து சானல்களில் பார்த்திருந்தும் ஒரு விசயத்தை மறந்து போனேன்: பொதுவாக தலை சிறியதாக முக்கோண வடிவில் உள்ளவை விசப்பாம்புகள். இதனை மறந்திருந்ததால் கொடியவிசமுடைய அந்த விரியனுடன் சுமார் ஐந்து ஆறடி தூரத்தில் அந்த இரவில் நாங்கள் ‘விளையாடிக்’ கொண்டிருந்தோம் என்ற உண்மை சிலீர் என்று உரைத்தது. தவிர உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதால் அதனை பெரிய அளவுக்கு தொந்தரவும் செய்யவில்லை, தொந்தரவு செய்திருந்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் அந்த விரியன் அந்த இரவில் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்!  தவிரவும் மனிதர்கள் உருவில் நம்முடன் பழகித்திரியும் மிகக்கொடிய விசஜந்துக்களிடம் சதாசர்வகாலமும் கடிவாங்கிக்கொண்டே திரிவதாலும் கூட கொடியவிசமுள்ள கண்ணாடிவிரியன் அன்றைய இரவில் எங்களிடம் இரக்கப்பட்டு கடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.

இறுதியாக: ஸ்கூட்டரின்  பின்னிருக்கையில் பாம்புடன் உட்கார்ந்துவந்த பக்கத்துவீட்டு நண்பரிடம் அது மலைப்பாம்பு இல்லை, கண்ணாடிவிரியன் என்று சொன்னேனா இல்லையா என்பது இப்போதும் நினைவில் இல்லை.  


திங்கள், மார்ச் 19, 2018

விவசாயிகளின் நெடும்பயணமும் பெருமுதலாளிகளின் ஊடக அதர்மமும்



ஏறத்தாழ 180 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்தார்கள்; அவர்களில் 80 வயதைத்தொடுகின்ற முதியவர்கள், வயது முதிர்ந்த பெண்கள், வாலிபர்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்தார்கள். அனைவரும் விவசாயிகள், விவசாயக்குடும்பங்களை சேர்ந்தவர்கள். பாரதீய ஜனதாக் கட்சி + சிவசேனா ஆளும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் நகரில் மார்ச் 7 அன்று சுமார் 10,000 விவசாயிகளுடன் தொடங்கியது இந்த நடைப்பயணம். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அரங்கமான அகில இந்திய விவசாயிகள் சபையால் (AIKS) நடத்தப்பட்டதே இந்த நெடும்பயணம். தலைநகர் மும்பையில் உள்ள சட்டசபையை முற்றுகையிடும் நோக்கில் நாசிக் நகரில் இப்போராட்டப்பயணம் தொடங்கப்பட்டபோது 10,000 விவசாயிகள் செம்பதாகைகளுடன் அணிதிரண்டார்கள் எனவும், பயணத்தின் வழியில் மேலும் 30,000 விவசாயிகள் இணைந்து கொண்டார்கள் எனவும் இணையத்திலும் வெகுசில ஆங்கில நாளிதழ்களிலும் தகவல்கள் சொல்கின்றன.

இவர்களில் பெரும்பாலோர் தமது கால்களில் செருப்புக்கூட அணியாமல் நடந்தார்கள்; வெயில் சில நாட்களில் 38 டிகிரி செல்சியஸை தொட்டது. வழியில் தமக்கான எளிய உணவை தாமே சமைத்துக்கொண்டார்கள். இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாழும் பொருட்டு தம்மைத்தாமே வருத்திக்கொண்டு தமது நியாயமான கோரிக்கைகளை முழக்கமாக எழுப்பிக்கொண்டு தங்களைத்தாங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு நடந்தார்கள்.  இரவு நேரத்தில் பயணம் எங்கே முடிகின்றதோ அங்கேயே படுத்து உறங்கினார்கள். உழைப்பவன் தனது களைப்பை மறப்பதற்காக காலங்காலமாக பயின்று வரும் தமக்கான பாடல்களைப் பாடியும் நடனம் ஆடியும் தமது அன்றையை களைப்பைப் போக்கிக்கொண்டார்கள்.  பொழுது புலரும்போது உறக்கம் கலைந்து மீண்டும் நடந்தார்கள். 

இதுபோன்ற போராட்டங்களை பொதுவாக வெறுப்புடன் நோக்குகின்ற நகரவாசிகள் இம்முறை தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள்.  தானே மாவட்டத்தின் ஷாகாபூரில் பேரணி நுழைந்தபோது அந்த ஊர் மக்கள் விவசாயிகளை வரவேற்று சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கினார்கள். மார்ச் 10 அன்று மும்பையின் எல்லையைத்தொட்டபோது ஊர் மக்கள் வழிநெடுகிலும்   திரண்டு நின்று வரவேற்று சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கியதோடு வேறு பல உதவிகளையும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 11 அன்று விக்ரோலியை அடைந்தபோது ஊர் மக்கள் விவசாயிகளின் பாதையில் மலர்தூவி வரவேற்று நீர் வழங்கி தமது ஆதரவைத்தெரிவித்தார்கள். அருகில் உள்ள சீக்கிய குருத்வாராவில் உள்ள சகோதரர்கள் தம்மால் இயன்ற உணவுவகைகளை சமைத்து வழங்கினார்கள். ஊர்வலம் மார்ச் 12 அன்று மேக்சிமம் சிட்டியை வந்தடைந்தபின்னும் மக்களின் ஆதரவு தொடர்ந்தது. குறிப்பாக மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலாக்கள் அணிதிரண்டு திட்டமிட்டு மும்பை மக்களிடம் இருந்து ரொட்டிகளைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்கி அவர்களின் பசியாற்றினார்கள். 

எதன் பொருட்டு இந்த 180 கி.மீ. பயணம்? விவசாயிகளின் தேசம் என்று சொல்லப்படும் இத்தேசத்தில்தான் விவசாயிகள் விசம் அருந்தி காலங்காலமாகப் பாடுபட்ட தமது நிலத்திலேயே மாய்ந்து உயிரை விடுகின்றார்கள். விவசாயம் செய்யும் பொருட்டு அரசிடம் கடன் பெறுவது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. அவ்வாறே கடன் பெற்றாலும் மழைபொய்த்துப்போன பின்னால், கிணறுகள் வறண்டபின்னால் அக்கடனைக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத நிலையில், வங்கி அதிகாரிகளின் ஏஜெண்டுகள் வீட்டுவாசலில் வந்து கேவலமாகப் பேசி கடனை திரும்பக்கேட்டு மிரட்டும்போது அக்கடனையும் திருப்பிச்செலுத்தமுடியாத நிலையில் தற்கொலை செய்துகொள்வது தேசமெங்கும் மிகச்சாதாரணமான அன்றாட நிகழ்வாகி உள்ளது.  இந்த மாநிலத்தில் உள்ள விதர்ப்பா மாவட்டமே விவசாயிகளின் தற்கொலைக்கு தலைநகரமாக ‘ஒளிர்கின்றது’.  இதன்றி கார்ப்பொரேட்டுக்களின் நலன்பொருட்டு விவசாய நிலங்கள் அதிரடியாக கைப்பற்றப்பட்டு தங்கநாற்கரச்சாலை, ஆறுவழிச்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை என்ற பெயர்களில் விவசாயமும் விவசாயியும் அழிக்கப்படுகின்றனர். சென்ற ஆண்டில் மட்டும் பிஜேபி சிவசேனா கூட்டணி ஆளும் இம்மாநிலத்தில் 2,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  கடும் வறட்சி அல்லது கடும்மழை, விளைபொருட்களுக்கான விலையை ஏஜெண்டுகளும் பெருமுதலாளிகளும் நிர்ணயம் செய்யும் வித்தையால் இட்ட முதலையும் எடுக்க இயலாத கெடுநிலை, அரசால் கைவிடப்பட்ட கையறுநிலை, வங்கிகளில் கடன்பெறுவதற்கு ஆயிரம் நிபந்தனைகள், கடன் பெற்றாலும் மேலே சொல்லப்பட்ட பல காரணங்களால் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத அவலம் என விவசாயிகள் இந்திய தேசமெங்கும் சந்திக்கின்ற பிரச்னைகள் தீரும் நாள் அண்மையில் இல்லை. 

சாமானிய மக்களை ஒருசில லட்சங்கள் பெறுமானமான கல்விக்கடனுக்கும் விவசாயக்கடனுக்கும் மிகக்கேவலமாக நடத்தும் அதிகார வர்க்கம், கேவலம் ஒரு ஆதார் கார்டு இல்லையேல் மலத்தில் உழலும் புழுவுக்கும் கீழாக சாமானிய மக்களை கேவலமாக விரட்டியடிக்கும் அதிகாரவர்க்கம், பல்லாயிரம்கோடிகளை அதாவது மக்கள்பணத்தை விஜய்மல்லையா, நீரவ்மோடி போன்ற பெருமுதலாளிகளுக்கு கடன் என்ற பெயரில் வாரிக்கொடுக்கின்றது; பின்னர் ஒருநாள் இவர்கள் அரசாங்கத்தின் துணையுடன் வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகின்றார்கள் (ஊடகங்களில் இதை ’தப்பிச்செல்கின்றார்கள்’ என செய்திவாசித்து நம்மை நம்பச்சொல்கின்றார்கள்). 

தாங்கள் வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளைகளில் முக்கியமானதாக கருதப்படும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price) (அதாவது உற்பத்திக்கான செலவு + அதில் 50%) நிர்ணயிக்க வேண்டும், மழையாலும் பூச்சிகளாலும் விவசாயம் பாதிக்கப்படும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 நட்டஈடு தர வேண்டும், விவசாய நிலங்களையும், மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திவரும் காடுகளையும் பறித்து விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்காக கார்பொரேட்டுக்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும், காடுகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அனுமதிக்க வேண்டும் ஆகிய பரிந்துரைகளை அரசு உடனடியாக  நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவை விவசாயிகள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளில் தலையாயன.  இவற்றில் எதுவும் புதிதான கோரிக்கை அல்ல என்பதை சொல்லவேண்டியதில்லை.

சியோனில் இருந்து ஊர்வலமாகச்சென்று மாநிலசட்டமன்றத்தை மார்ச் 12 அன்று முற்றுகையிடுவதுதான் திட்டம். ஆனால் பள்ளித்தேர்வுகள் நடப்பதை கணக்கில்கொண்டு பகலில் தங்கள் போராட்டத்தை தள்ளிவைத்தார்கள், ஆனால் இரவில் ஊர்வலமாக சென்று ஆசாத் மைதானத்தில் அமர்ந்தார்கள். விவசாயிகளின் இந்த அணுகுமுறையை மும்பை நகரமக்கள் பாராட்டினார்கள்.

விவசாயிகளின் வாழ்க்கையையும் அவர்களது பிரச்னைகளையும் தொடர்ந்து கவனித்து எழுதிவரும் பீ.சாய்நாத் கூறுவது: ‘தங்களது தொழிலை ஒருநாள் தியாகம் செய்தாலும் அதனால் விளையும் நட்டம் மிகப்பெரியது என்பதை விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் நன்கு அறிவார்கள். அவ்வாறிருக்க ஏழு நாட்கள் இவர்கள் தமது தொழிலை தியாகம் செய்துள்ளார்கள்; இவர்களையே நம்பியிருக்கின்ற நிலத்தை மட்டுமின்றி  கால்நடைகளையும் ஒரு வாரம் கவனிக்காமல் விட்டு நெடும்பயணத்தில் பங்குபெற்றுள்ளார்கள். இவர்கள் தத்தமது ஊர்களுக்கு திரும்பிச்சென்றபின்னாலும் எதிர்வருகின்ற பல நாட்களுக்கு பட்டினிகிடக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் இந்த நடைப்பயணத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள்.  தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக மும்பை நகருக்குள் தங்களது பயணத்தை பகலில் நடத்தாமல் இரவுவேளையில் நடத்தியுள்ளார்கள். தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 41 நாட்கள் நடத்திய போராட்டத்தை அரசு எப்படி அணுகியது, ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது வருத்தத்திற்குரியது.”
இறுதியாக தாங்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த விவசாயிகள், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தபோது எழுத்துவடிவில் அதனை ஒப்பந்தமாக்கியுள்ளார்கள்.
இதேபோன்றதொரு நெடும்பயணத்தை மீண்டும் இந்த மாதம் 19 அன்று தொடங்க உள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சபை சொல்கின்றது. அதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 30 அன்று ’சிறையை நிரப்பும்’ போராட்டத்தையும் நடத்த உள்ளார்கள். 

மூணாறில் பெண்கள் திரண்டு தலைமையேற்று நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க  தேயிலைத்தோட்டத்தொழிலாளர் போராட்டம், தொழிலாளர் வருங்காலவைப்பு நிதியை தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில்தான் மீட்டு எடுத்துக் கொள்ளமுடியும் என்ற மோடி அரசின் உத்தரவுக்கு எதிராக பெங்களூருவில் அன்றாடக் கூலித்தொழிலாளர்கள்  தெருக்களில் திரண்டு நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாட்கள் போராட்டம் ஆகிய செய்திகள் தாங்கள் நடத்தும் டிவி சானல்களிலும்  செய்தித்தாட்களிலும் இடம்பெற்று விடாமல் பெருமுதலாளிகள் எப்படி திட்டமிட்டு மறைத்தார்களோ அதேபோல் விவசாயிகள் நடத்திய வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த நெடும்பயணத்தையும் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிரான சாமானிய மக்களின் எதிர்ப்புக்குரலும் போராட்டங்களும் பல நூற்றாண்டுகள் வயதானவை, தொடர்ந்து உரமேறி கூர்மையடைந்து கொண்டே வருபவை என்பதை வரலாறு உரத்த குரலில் எப்போதும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றது.  சாமானிய மக்களின் போராட்டங்கள் டிவி சானல்களையும் பத்திரிக்கைகளையும் நம்பி நடப்பதும் இல்லை, சாமானிய மக்களின் போராட்டங்கள் ஏழு மணி சீரியல் நாடகங்களும் இல்லை.



சனி, ஜனவரி 20, 2018

வாசிக்கத் தொடங்கிய கதை (1)

1) எழுத்துடனும் புத்தகங்களுடன் ஆன உறவுக்காக எந்த ஒரு குழந்தையும் காத்திருப்பதில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் அந்த நாளுக்காகவோ ஆசிரியரால் அ...அம்மா... என்று வாய்விட்டுச்சொல்லிப் பழக்கப்படுத்தப்படும், வானத்தில் மின்னல் வெட்டி இடிஇடிக்கும் தெய்வாம்சம் பொருந்திய சுபகணத்திற்காகவோ காத்திருப்பதில்லை. கையில் அகப்படும் எந்த ஒரு தாளையும் புத்தகத்தையும் தாறுமாறாகக் கிழிக்கும்போது எழும் சத்தத்தில் சந்தோசம் காணும் நொடியிலேயே எழுத்துடனும் புத்தகங்களுடனும் ஆன உறவு ஒவ்வொரு குழந்தைக்கும் தொடங்கி விடுகின்றது எனலாம். வளர்ந்தவர்கள் படிச்சுக்கிழிக்கிறார்கள் எனில் குழந்தைகள் பல்வேறுதரப்பட்ட புத்தகங்களையும் படிக்காமலேயே கிழித்துவிடுகின்றார்கள்; ஆக இருவருமே இறுதியில் கிழிக்கத்தான் போகின்றார்கள் எனும்போது வளர்ந்தவர்கள் படிக்கிறேன் பேர்வழி என்று தேவையில்லாமல் நேரத்தை செலவு செய்து படித்ததெல்லாம் வீணோ என்று தோன்றுகின்றது. வாசிக்கிறவர்கள் புத்தகத்தை கிழிக்கிறார்கள் எனில் எழுதியவர்கள் விமர்சகர்களிடம் கிழிபட்டு நார்நாராக தொங்குகின்றார்கள் என்பது தனிக்கதை. நிற்க.

2) நமது சமூக அமைப்பில் பொதுவாக ‘படிப்பது
என்பது ஃபர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து பொருளாதார ரீதியாக பாதுகாப்புத்தரும் ஒரு உத்தியோகத்தை அடையும் அல்லது அமெரிக்க விசா பெற்று ஸ்டேட்ஸில் செட்டில் ஆகும் ஒற்றை இலக்குக்கான ஒருவழிப்பாதையாக, வணிகம் சார்ந்த ஒரு சொல்லாடலாய் இருக்கின்றது. அவ்வாறெனில் அப்படியான ஒரு பாதுகாப்பான உத்தியோகத்தில் அமர்ந்த பின்னர், அதாவது இலக்கை எட்டிய பின்னர் ‘படிப்பதுஎன்பது அவசியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. கடந்த 70 வருடங்களில் இதுகாறும் நம்மை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகள் நேரடியாக இல்லாவிடினும் ‘ஒரு பத்துப்பேராவது புரிஞ்சிக்கிடுவான்என்ற நப்பாசையில் பூடகமாவது பள்ளி+கல்லூரிப்பாடத்திட்டங்களில் சம்பாதிப்பதற்கான வழியைக்காட்டுவதற்கும் அப்பால் என்னத்தையாவது செருகி வைத்துள்ளனவா என்று தேடிப்பார்ப்பது மூடநம்பிக்கையில் சேரும். செருகி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற வரலாற்றையாவது, அதாவது மிக எளிய முறையில் சொன்னால் குற்றம் நடந்தது என்ன?பாணியில் நடந்த கதையையாவது அப்படியே அச்சடிச்சு  போடுகிறார்களா என்றால் அப்படியும் இல்லை. 

3) தென்னாப்பிரிக்காவுக்கு 1893இல் வக்கீல் தொழில் செய்ய சென்ற காந்தியை ரயில்பெட்டியில் வெள்ளை அதிகாரி கன்னத்தில் அடித்து பெட்டியை தூக்கி பிளாட்பாரத்தில் எறிந்ததையும் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல் அவருக்கு புதிய சிந்தனைகளைத் தூண்டியதையும்  மீண்டும் அவர் 1914இல் இந்தியாவுக்கு வந்து காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நாட்டுவிடுதலையில் தலையாயப் பங்காற்றியதையும் தேதி மாறாமல் அச்சிட்டு விநியோகிக்கும் நமது சர்க்கார், 1948 ஜனவரி 30 அன்று கொடியவன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று படம் முடியும் முன்பே ரீல் அறுந்து வணக்கம்போட்ட திரைப்படம் மாதிரி திடீரென நம்மை சப்ஜெக்ட்டில் இருந்து வெளியேற்றுகின்றது. இப்போதெல்லாம் 1948 ஜனவரி 30 அன்று இறந்துபோனதாக சொல்கின்றார்கள்; செரிமானக்கோளாறு காரணமாகவோ காலில் தூதுவளைமுள் குத்தியதாலோ காந்தி  இறந்திருப்பார் என்று இப்போதே நம் பிள்ளைகள் பேசிக்கொள்ளும் அளவிற்கு நமது ஆட்சியாளர்கள் பாடத்திட்டங்களை திட்டமிட்டு துல்லியமாக தயாரிக்கின்றார்கள். உண்மையில் விடுதலைபெற்ற இந்தியாவின் எதிர்கால சமூக அமைதியின் சீரழிவிற்கான அஸ்திவாரத்தையே நாதுராம் கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்களின் மூலம் அன்றைய தினம் வலதுசாரி இந்துதுவா தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கம் பலமாக போட்டதில் அவர்களுக்கேயான எதிர்கால இந்தியாவுக்கான அஜெண்டா இருந்தது; இதனையும்,  நவீனகால இந்தியாவின் சமூக-பொருளாதார வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தின் முதற்பக்கம் அன்றையதினம்தான் எழுதப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்தி அன்றைய-இன்றைய-எதிர்கால இந்திய சமூகத்தின் மனத்தில் அழுத்தமாகப் பதிய வைத்திருக்க வேண்டிய, காந்தியை தன் கட்சிக்காரராக மட்டுமே இந்தியமக்கள் சுருக்கிப்பார்க்க வேண்டும் என்பதற்காகவே காலம் பூராவும் பெரும் பிரயாசையுடன் பாடுபட்ட,  1947க்குப்பின் பெரும்பான்மையான காலத்தில் மையத்தில் ஆட்சியதிகாரம் செலுத்திய காங்கிரஸ் கட்சியும் அதனைச் செய்யாமல் திட்டமிட்டு நழுவியதற்கும் தவறியதற்கும் காரணம் அவர்களுக்கான அஜெண்டா என்று ஒன்று இருந்தது.   

4) எதிரெதிர்முனைகளில் இருப்பதாகச் தோன்றும் இந்த  இரண்டு தரப்புக்களுக்கும் பொதுவான ஒரு அஜெண்டா இருந்தது: விடுதலை பெற்ற இந்தியாவின் இயற்கை வளங்களையும், சாமானிய உழைக்கும் மக்களின் கடந்த பல நூற்றாண்டுகால - எதிர்கால உழைப்பின் பயனாய் உயர்ந்து நிற்கப்போகும் இத்தேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை அதே சாமானிய உழைக்கும் மக்கள் அனுபவித்துவிடக்கூடாது, அந்த பலன்கள் யாவும் சில பத்திருபது பெருமுதலாளிகளின் கல்லாக்களில் மட்டுமே நிரம்பி வழிய வேண்டும், இதன் பொருட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான எல்லாவிதமான தகிடுதத்த மோசடிவேலைகளையும் தயக்கமின்றி செய்துகொண்டே இருக்க வேண்டும். இதன்பொருட்டு 1947 ஆகஸ்ட்டுக்கு முன்பான இத்தேசத்தின் பல நூறு வருடகால  சாமானிய உழைக்கும் மக்களின் குருதிதோய்ந்த போராட்ட வரலாற்றையும், அவர்தம் போராட்டங்களுக்கு தலைமையேற்றும் அம்மக்களோடு பிணைந்து நின்றும் வழிநடத்திய தியாகச்செம்மல்களின் போராட்ட வரலாற்றையும் மறைப்பது, திரிப்பது, பின்னர் பொய்களையே வரலாறென எழுதி எதிர்காலச்சந்ததிகளை ஏமாற்றுவது. இந்த இலக்குகளை எட்டுவதற்கான பாதையில் குறுக்கே வரும் எந்த ஒரு தடையையும் அதாவது உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் ஏவி தயவுதாட்சண்யம் இன்றி ஒடுக்கி நசுக்கிவிடுவது மிக முக்கியம், ஏனெனில் வரலாறு மிக மிக முக்கியம். சம்பாதிப்பதற்கான வழியைக்காட்டுவதற்கும் அப்பால் கடந்த 70 வருடங்களில் நமது பள்ளி+கல்லூரிப் பாடத்திட்டங்களில் ஒரு மண்ணும் இல்லாமல் இருப்பது என்பது தற்செயலான ஒன்று அல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஆகப்பெரும் பிரயத்தனம் எதுவும் தேவையில்லை. 
5) அவ்வாறெனில் இத்தேசத்தின் வரலாற்றை மட்டுமின்றி பெருமுதலாளிகளின் நலன் பொருட்டு மட்டுமே ஆட்சியதிகாரம் செலுத்தப்படும் எந்த ஒரு தேசத்தின் வரலாற்றையும் (தேசவரலாறு என்பது உண்மையில் எந்த ஒரு தேசத்தினதும் உழைக்கும் மக்களின் போராட்ட வரலாறு அன்றி வேறில்லை; சற்றே விரித்தால் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான, தமது நியாயமான உரிமைகளுக்கான போராட்ட வரலாறு என்பதே) பள்ளி+கல்லூரிப் பாடத்திட்டங்களில் கண்டறிய முடியாது என்பதும் இவற்றுக்கு அப்பால் அதாவது பள்ளி+கல்லூரிகளின் காம்பவுண்டு சுவர்களுக்கு வெளியே மட்டுமேதான் கண்டறிய முடியும் என்பதும் தெளிவு. அப்படியெனில் ‘படிப்பது’ ‘வாசிப்பதுஎன்பதுதான் என்ன? எதைப் படிப்பது? எவ்வாறு படிப்பது? காலத்தை செலவு செய்து எதற்காகப் படிப்பது? படிப்பதற்கான சாத்தியங்கள் அனைவருக்கும் வாய்த்து விடுகின்றதா? வாய்க்கின்றதெனில் ஒரே சம கன பரிமாணத்திலான வாய்ப்பே அனைவருக்கும் கிட்டுகின்றதா?

6) தொடக்கத்தில் சொன்னபடி எழுத்துடனும் புத்தகங்களுடன் ஆன உறவுக்காக எந்த ஒரு குழந்தையும் காத்திருப்பதில்லை. அதே போல் எழுத்தும் புத்தகங்களும் எல்லாக் குழந்தைகளுக்காகவும் காத்திருப்பதில்லை.  தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கதைகேட்பதில் இருந்து குழந்தைகளின் கற்பனாசக்தி தொடங்குவதாகவும்  விரிவடைவதாகவும் பொதுவாக சொல்லப்படுகின்றது. எல்லாத் தாய்மார்களுக்கும் தமது குழந்தைகளுக்கு சொல்வதற்கான கதைகளை வேறெங்கோ கேட்டு பொத்திப் பாதுகாக்கவும் அல்லது தனது சொந்தக் கற்பனையில் அத்தகு கதைகளை ‘எழுதிப்பார்த்திடவும், அப்படியான கதைகளை தத்தம் குழந்தைகளுக்கு சொல்வதற்கும் ஆன சாத்தியமும் நேரமும் வாய்க்கின்றதா? ஊர் எழும்பும் முன் தான் எழுந்து தோள்களில் தன் உயரத்தையும் விட அதிக உயரமான சாக்குப்பைகளை சுமந்தவாறே நேற்றைய இரவில் மதுஅருந்தியவர்கள் வீசிச்சென்ற காலி புட்டிகளையும் ப்ளாஸ்டிக் தண்ணீர் கேன்களையும் சேகரிக்கும் பொருட்டு வழக்கமான காலி மைதானங்களை தேடிச் செல்கின்ற குழந்தைகளுக்கும் தத்தமது தாயின் மடியில் புதைந்து ஒற்றைக்கண் மந்திரவாதி தொடங்கி ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒரு குகையில் தவமிருக்கின்ற,  தனது உயிரை ரகசியமாய் தொடையில் மறைத்து வைத்திருக்கின்ற அரக்கன் வரையிலான கதைகளைக் கேட்பதற்கான சாத்தியமும் நேரமும் வாய்த்திருக்கின்றதா? மேரியின் லிட்டில் லாம்ப் இவர்களைப் பொருத்தவரை சேகரித்த சில்லரைகளை வீசியெறிந்தால் சாயங்காலவேளை சால்னா கடைகளில் ஒருவேளை சாத்தியப்படலாம். பிணவறையில் உடல்களைக்கூறு போடுகின்ற ஒரு தொழிலாளியின் குழந்தை, தனது விளையாட்டுக் கருவிகளாக களிமண்ணால் ஆன  பிணங்களின் பொம்மைகளையும் கூறு போடுவதற்கான ஆயுதங்களையும் செய்து விளையாடுவதாக ஆதவன் தீட்சண்யா எழுதியிருப்பார். நகரங்களின் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை தள்ளுகின்ற, அன்றாட வயிற்றுப்பாட்டுக்கான பொழைப்பே பெரும்பாடாக இருக்கின்ற சாமானியர்களின் குழந்தைகளின் கனவில் என்ன அல்லது யார் வரு(ம்)வார்? கொடூரமான மீசையுடன் பெருத்த தொந்தியுடன் கையில் இருக்கின்ற லத்தியைக்கொண்டு ப்ளாட்பாரங்களில் தூங்குகின்ற பெண்களை நடுஜாமத்தில் வந்து தட்டும் போலீஸ்காரன் இவர்களின் கனவில் வரலாம்; ஒரு கதை சொல்லு என்றால் ‘ஒரு ஊர்ல ஒரு போலீஸ்காரன் இருந்தான்...என்று இக்குழந்தைகள் ஆரம்பிக்கலாம். அல்லது ‘ஒருத்தன் ரோட்டை க்ராஸ் பண்ணானா, வேகமா ஒரு பஸ் வந்துச்சா...என்று ஆரம்பிக்கலாம்.  உங்களுக்கெல்லாம் அந்தவேலைக்குன்னே பீச்சாங்கை இருக்கு; சோத்தாங்கையில அந்த வேலையை செய்ய மாட்டீங்க; எங்களுக்கெல்லாம் ரெண்டு கையுமே பீ அள்ற கைதான், சோத்த நாங்க எந்தக் கையில் சாப்பிடறது? என்ற துப்புரவுத்தொழிலாளியின் கேள்விக்கு இந்த சமூகத்தில் இதுவரையிலும் பதில் இல்லாதது போலவே இது போன்ற குழந்தைகளுக்கான கதைகளுக்கும் பதில் இல்லை. புத்தகக்கண்காட்சிகளில் பலவண்ணங்களுடன் வளவளப்பான தாள்களில் அச்சிடப்பட்ட 100 ரூபாய்க்கும் அதிகமான குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு என்றும் அதிக அளவில் விற்பனையாகும் நூல்களில் இவையும் அடங்கும் என்றும் சொல்கின்றார்கள். ப்ளாட்பாரவாசிகளின் குழந்தைகளுக்கும் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் குழந்தைகளுக்கும் கல்வி என்பது எத்தனை தூரமோ அதே தூரம்தான் இக்குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் இடையே.
(தொடரும்)