ஞாயிறு, ஜனவரி 15, 2012

சொல்லப்படாத ஒரு பொங்கல் வாழ்த்தும் வழி பிறக்காத ஒரு தையும்



தை பிறந்தால் வழி பிறக்குமாமே?

வழக்கம்போல இன்றும் பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். பொங்கல் வாழ்த்துக்கள், ஹாப்பி பொங்கல்....இப்படி. சரிதான். இன்று காலை பொங்கலில் முந்திரி உங்கள் வாயில் தட்டுப்பட்டதா? உடனடியாக கடலூரில் நிர்க்கதியாக நிற்கும் முந்திரிவிவசாயி உங்கள் நினைவுக்கு வந்தானா? ‘இல்லை’ என்று நீங்கள் சொன்னால்....சங்கடம்தான் நண்பரே! தானே புயல் கடலூர்,பண்ருட்டி மக்களை ஒரு 25 வருடம் பின்னால் தள்ளியுள்ளது. நேற்று சன் டிவியில் நேரடி ஒளிப்பதிவில் ஒரு விவசாயி சொன்னார்: ‘இது எங்களுக்கு மரணப்பொங்கல்’. உண்மைதான்.  இப்போது கடலூரில் எந்த ஒரு விவசாயியிடமும் விதை முந்திரி இல்லை, எடுத்து வைக்கவில்லை என்று சொன்னார் அவர். தானே புயலில் ஒரு முந்திரி மரம் கூடத்தப்பாது என்று எந்த விவசாயிதான் நினைத்திருப்பான்! பலா மரங்களின் கதியும் அதேதான். ஒரு பலாமரம் கூட இப்போது அங்கே உயிரோடு இல்லை. இன்று விதைத்தாலும் மீண்டும் ஒரு முந்திரியை ஒரு பலாச்சுளையைப் பார்க்க குறைந்தது 20 வருடங்கள் ஆகுமாம். ஆக முந்திரி, பலா விவசாயம் மட்டுமே தெரிந்த,இப்போது ஒண்ணும் செய்யத்தெரியாத கடலூர் பண்ருட்டி மக்கள், நாகப்பட்டினம் புதுச்சேரி மக்கள் அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல் இதே தமிழகத்தில் இன்று காலை என்ன பொங்கல் வைத்திருப்பார்கள்? எந்த சூரியனை கும்பிட்டிருப்பார்கள்? இன்று நாம் பரிமாறிக்கொண்ட ’ஹாப்பி பொங்கல்’ யாருக்கு? விதைத்து அறுத்தவன் விதை நெல்லும் விதை முந்திரியும் கூட இல்லாமல் வீதியில்  நிற்க உண்டு கொழுத்த நமக்குத்தானே ‘ஹாப்பி பொங்கல்’? குறைந்த பட்சம் இன்று பெரியவர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நான்கு, ஐந்து மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் பொங்கல் கொண்டாட வக்கற்று இருப்பதையாவது சொன்னோமா?

ஏற்கனவே 3 லட்சம் விவசாயிகளுக்கும் மேல் தற்கொலை செய்துகொண்ட தேசம் இந்த தேசம். எந்த தேசம்? இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்கின்றோமே, அதே தேசத்தில்தான். விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நாம் சொல்வதும் ஒரு கிரிமினல் தந்திரமே! அவர்களை தற்கொலைக்கு தூண்டியது இந்த தேசத்தின் ஆளவந்தார்களும் நாமும்தானே! குற்றவாளிகளாகிய நாம் சொல்கின்றோம் விவசாயிகள் தற்கொலை செய்கின்றார்களாம்! எப்படியான தேசம் இது? விளை நிலங்களை அரசே ஃப்ளாட் போட்டு விற்கும் தேசம்; வெளிநாட்டுக்கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க தொழிற்சாலை கட்ட இந்தியவிவசாயிகளின் விளைநிலங்களில் இருந்து அவர்களை இந்திய அரசே வெளியேற்றும் தேசம்; மீறினால் சோறுபோட்ட விவசாயிகளின்மீது துப்பாக்கி சூடு நடத்தும் தேசம். விதர்ப்பாவிலும் புனாவிலும் அதைத்தான் பார்த்தோம். விவசாயிகளைக் கொன்றுபோட்டுவிட்டு ஹாப்பி பொங்கல் சொல்லும் ஆட்சியாளர்களும் அதை மவுனமாக ஆமோதிக்கும் நாமும் இந்த தேசமும் உருப்படுவோமா? இப்படி ஒரு கொடுநிலை தமிழகத்திலும்...?

தை பிறந்தது தமிழகத்தில், கடலூர் பண்ருட்டி நாகப்பட்டினம் புதுச்சேரி நீங்கலாக...விதர்ப்பா புனா நீங்கலாக.

திரைக்கலைஞர் நாசர் ஒரு டிவி சானலுக்கு பொங்கல் பேட்டியில் பொங்கல் வாழ்த்து சொல்ல மறுத்துவிட்டார், அதன் பதிவு இணைப்பை இங்கே தருகின்றேன், பாருங்களேன். அவர் சொல்லாத வாழ்த்துத்தான் உண்மையில் இந்த பொங்கலின் உண்மையான வாழ்த்தாக எனக்குப்படுகின்றது! 
http://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM

ஞாயிறு, ஜனவரி 01, 2012

விந்திய இமாசல யமுனா கங்கா...


  1)    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆம்பிட் (Ambit) என்ற கார்பொரேட் கட்டிடத்திற்குள் இன்று (31.12.2011) பிற்பகல் நுழைய வேண்டிய கட்டாயம் நேரிட்டது. அது மிகப்பெரிய கட்டடம். தரைத்தளத்தில் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்கள் உள்ளன, நான் சென்றது சாப்பிட மட்டுமே. உள்ளே சென்ற பிறகுதான் தெரிந்தது, அது ஒரு மால் கலாச்சார (mall culture) அல்லது கார்பொரேட் கலாச்சார  உணவக தளம் என்று. புரியவில்லையா? நீங்கள் ஒரு உணவகத்துக்கு சென்றால் அங்கே உணவோடு குடிநீரும் தரப்படும், அதாவது குடிநீரும் உணவின் ஒரு பகுதி, அதற்கும் சேர்த்துத்தான் பணம் உங்களிடம் இருந்து பெறப்படுகின்றது. சென்னையில் உள்ள மால்களில் (நான் அரும்பாக்கத்தில் உள்ள அம்பா மாலுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன்) உள்ள உணவகங்களில் நீங்கள் நுழைந்தால் (பாவம், ஒரு நாளைக்கு 32 ரூபாய் வருமானம் மட்டுமே உள்ள மாண்டே சிங் அலுவாலியா போன்றவர்களால் இங்கே நுழைய முடியாது) அங்கே தண்ணீர் தனியாக காசு கொடுத்து வாங்க வேண்டும், அதுவும் வெளியே ஒரு பாட்டில் 15, 16 ரூபாய்க்கு விற்பது இங்கே 20க்கு குறையாது.  இந்த ஆம்பிட் உணவக தளத்திலும் இதுதான் நடந்தது! குடிக்க 20 ரூபாய் கொடுத்து தனியே தண்ணீர் வாங்கினேன்!
 2) எந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை இது? ஒரு காலத்தில் திரும்பிய திசையில் எல்லாம் எந்திரங்களின் சத்தமும் தொழிலாளர்களின் நடமாட்டமும் 24 மணி நேரமும் கேட்டுக்கொண்டிருந்த தொழிற்பேட்டை! அதாவது மனிதனுக்கும் எந்திரங்களுக்கும் ஆன ஒரு உறவும் உற்பத்தியும் நடந்து, அதன் மூலம் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்த தொழிற்பேட்டை. ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக இருந்தது அது!  இன்று... ஒரு சில, மிக சில தொழிற்சாலைகள் தவிர அனேகமாக மற்ற அனைத்தும் மூடப்பட்டு, மூடிய தொழிற்சாலைகளில் மென்பொருள், கணிப்பொறி தொடர்பான கார்ப்பொரேட் கம்பெனிகள் ஆக்கிரமித்துள்ளன.  வெறும் கம்ப்யூட்டர் போதும், உலகம் வாழ்ந்துவிடும் என்று பிரம்மையின் பின்னே ஓடும் இளைஞர்கள் திரும்பிய திசை எங்கும்! தங்களை அமெரிக்கர்களாக, பிரிட்டிஷ்காரர்களாக நினைத்துக்கொண்டு திரியும் தமிழர்களின் பிள்ளைகள்! தமிழ் பேசிய தொழிலாளர்கள் அலைந்து திரிந்த இடங்களில் இன்று வலிந்து பேசப்படும் ஆங்கிலம்! தொழிற்சங்கங்கள், வாயிற்கூட்டங்கள், ‘தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!என்று ஆக்ரோசமான முழக்கங்கள் கேட்ட வீதிகளில் ‘தொழிற்சங்கமா? உஷ்! அது கெட்ட வார்த்தைஎன்று போதிக்கின்ற மென்பொருள் நிறுவனங்கள்! ‘உன் சக நண்பனோடு சினிமாவுக்குப்போ, ‘பப்புக்கு போ, வீக் எண்ட் பார்ட்டிக்கு போ, ஆனால் அவன் ஊதியத்தை நீ கேட்பதே தவறு!என்று போதிக்கின்ற கார்ப்பொரேட் கலாச்சாரம்! ஒரு பைசா கூலி உயர்வும், ஒரு ரூபாய் போனசும் கூட தம் உரிமை என்று தொழிலாளர்கள் முழங்கிய, அதற்காக கூட்டங்களும் உண்ணாவிரதங்களும் இன்னபிற போராட்டங்களும் நடந்த அதே தொழிற்பேட்டையில்தான் குடிநீரும் தான் உண்கின்ற உணவின் ஒரு பகுதி, அதற்கும் சேர்த்தே நான் காசு கொடுக்கின்றேன், ஆனால் எனக்கு அது தரப்படவில்லையே! என்ற சுரணை துளியளவும் இன்றி அங்கே கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் உட்கார்ந்து ஆங்கிலத்தோடு உணவையும் மென்பொருளாக மென்று விழுங்கிக் கொண்டிருந்த கொடுமையை என்னென்று சொல்ல!
  
  3)    பொலிவியா. மத்திய தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள வறுமை மிகு நாடு. 1985இல் அதன் பணவீக்கம் 25,000%! கேடுகெட்ட அயோக்கிய ஆட்சியாளர்களின் கடைசிப்புகலிடமான உலகவங்கியை பொலிவிய ஆட்சியாளர்களும் நாடினார்கள். உலகவங்கி என்ற ஓநாய் ‘வந்தியா மாப்ளே!என்று போட்ட நிபந்தனைகளின் படி பொலிவியாவின் ரயில்வே, தொலைபேசி, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம் என கேந்திரமான அனைத்து அரசுத்துறைகளும் தனியார் கையில் தாரைவார்க்கப்பட்டன.  இது போதாது என்று உச்சகட்டமாக ஒரு கட்டளை இட்டது உலகவங்கி. ‘லா பாஸ் (La Pas), கொச்சபம்பா (Cochabamba) ஆகிய ஊர்களின் இயற்கை நீர் வளங்களை அதாவது ஆறு, குளம் எல்லாவற்றையும் தனியார் கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பெக்டெல் (Bechtel) என்ற அமெரிக்க கம்பெனியின் துணை நிறுவனமான International Water Limited (தண்ணீருக்கு லிமிட்!) என்ற கம்பெனியின் கீழ் Aguas  del Tunari என்ற உள்ளூர் கம்பெனிக்கு பொலிவியாவின் நீர்வளம் 40 வருட குத்தகைக்கு விடப்பட்டது! பெக்டெலுக்கு இந்த காண்ட்ராக்ட் உலகவங்கியின் நிர்ப்பந்தத்தால் கிடைத்தது.  கொச்சபம்பாவில் வசித்த அமெரிக்க குடிமகனான ஜிம் ஷுல்ட்ஸ் என்பவர் ஜனநாயக மையம் (Democracy Centre) என்ற அமைப்பை நடத்தினார். அவர் சொன்னது: “யேசுவை, முகம்மது நபியை, மோசசை, புத்தரை எப்படி சாமானிய மக்கள் நம்புகின்றார்களோ அதேபோல் ‘தனியார்மயம்என்பதை உலகவங்கியின் நீர் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றார்கள்”. ("Bank water officials believe in privatization - the way other people believe in Jesus, Mohammed, Moses, and Buddha," says Jim Schultz).   இதற்கான ஒரு பிரத்தியேகமான சட்டத்தையே (Law 2029) அரசு இயற்றியது.  ஒரு மாதத்திற்கு சராசரி வருமானம் 70 டாலர் மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருந்த பொலிவிய மக்கள் அதில் இருபது டாலரை தண்ணீருக்காக செலவு செய்ய வேண்டிய கொடுமை ஏற்பட்டது. வீட்டின் கூரை மேல் விழும் மழைத்தண்ணீரை சேமிக்கவும் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்கின்ற அளவுக்கு கொடுமை உச்சத்தை தொட்டது. விளைவு, மக்கள் அரசுக்கும் பெக்டெலுக்கும் உலகவங்கிக்கும் எதிராக வீதிகளில் திரண்டனர். விவசாயிகள், தொழிலாளர்கள், படிப்பாளிகள், அறிவுஜீவிகள் என ஒன்றுதிரண்டு Coordinator for the Defense of Water and Life என்ற அமைப்பை நிறுவினார்கள். La Coordinadora என்ற மத்திய போராட்ட அமைப்பு ஆஸ்கார் ஆலிவேரா என்பாரின் தலைமையில் அமைக்கப்பட்டது.  பல்வேறு கட்டப்போராட்டங்களில் மக்கள் போலீசுடனும் ராணுவத்துடனும் நேரடியாக மோதினார்கள். பலர் துப்பாக்கிசூட்டில் இறந்தார்கள்.  குறிப்பாக ஏப்ரல் 2000இல் கிளர்ச்சி வலுத்தது, வேலைநிறுத்தங்கள் நடந்தன, ஐந்து லட்சம் மக்கள் கொண்ட கொச்சபம்பாவில் முழு அடைப்பு நடந்தது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து போராட்ட தலைவர்களை வஞ்சகமாக சிறையில் அடைத்தது அரசு.  பலரை பிரேசில் எல்லை அருகே அமேசான் மழைக்காட்டு பிரதேசமான சான் ஜோவோக்வின் என்ற காட்டுப்பகுதியில் சிறை வைத்த்து.  மக்கள் கம்புகளையும் கற்களையும் துணிகளையும் ஏந்தி வீதிகளில் போலீசின் துப்பாக்கிசூடு, கண்ணீர்ப்புகையை சந்திக்க திரண்டார்கள்.  மறுநாள் காலையில் பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். மீண்டும் அன்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அரசு. ஆனால் அரசுத்தரப்பில் யாரும் வராமல் காலம் கட்த்தினார்கள். பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக இருந்த ரோமன் கத்தோலிக்க பிஷப் திடீர் என்று  வந்து, ‘அரசு பெக்டெல் கம்பெனியுடன் ஆன ஒப்பந்த்த்தை முறித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகஅறிவித்தார்.  “ஒரு முக்கியமான பொருளாதார வெற்றியை நாம் இக்கணத்தில் ஈட்டியுள்ளோம்!என ஆஸ்கர் ஆலிவேரா மக்கள் கூட்டத்தில் பிரகடனம் செய்தார்.

4)     குடிமக்களுக்கு சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வி ஆகியனவற்றை இலவசமாக தருவது அரசின் அடிப்படைக் கடமை என்ற மனிதநேயமிக்க கொள்கையை உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம் (IMF) ஆகிய அமெரிக்க நலன் காக்கும் அமைப்புக்கள் மறுக்கின்றன, எதுவும் இலவசம் இல்லை, இயற்கையில் கிடைக்கும் தண்ணீரைக் கூட அரசு தராது, நீ காசு கொடுத்து வாங்கு!என மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்கு கட்டளை இடுகின்றன. இந்தியாவில் அமெரிக்க, உலகவங்கி, IMF அடிமைகளான மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் போன்றவர்கள் இந்தக் கட்டளைகளை சிரமேல் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகின்றார்கள். LPG என்று இன்று அறியப்படும்  Liberalisation, Privatisation, Globalisation  ஆகிய பாதகங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது இந்த கும்பலே. விளைவாக விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்வதை இந்த கும்பல் மனச்சாட்சி சற்றும் வலிக்காமல் வேடிக்கை பார்க்கின்றது; இக்கும்பலின் கொலைபாதக்க் கொள்கைகளின் விளைவாக சிறுதொழில்கள், விவசாயம் யாவும் அழிக்கப்படுகின்றன; வெளிநாட்டுக்கம்பெனிகள் இங்கே அனுமதிக்கப்படுகின்றன, உள்நாட்டுத்தொழில் அழிக்கப்படுகின்றது. தொடக்கத்தில் சொன்ன அம்பத்தூர் தொழிற்பேட்டையும் இந்த அழிவுக்கு நம் கண் முன்னே உள்ள ஆகப்பெரும் சாட்சி.  அந்நியக்கம்பெனிகளுடன் அந்நியக் கலாச்சாரமும் நுழைய, நம் முன்னோர்கள் ஆகப்பெரும் உயிர் தியாகங்கள் செய்து நமக்கு ஈட்டித்தந்த தொழிற்சங்க உரிமைகள் சவக்குழியில் புதைக்கப்படுகின்றன, இப்படியான உரிமைகள் இருக்கின்றன என்பதே தெரியாத, சமூக அக்கறை சிறிதும் இல்லாத, தேசப்பற்று என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தலைமுறை - ஒரு கார்ப்பொரேட் மென்பொருள்  தலைமுறை – வளர்ந்து கொண்டு இருக்கின்றது. ‘இப்படியான இயற்கையில் கிடைக்கும் ஒரு பொருளை-தண்ணீரை- காசு கொடுத்து வாங்க வேண்டுமா?என்ற சாதாரண அடிப்படைக்கேள்வியைக் கூட தனக்குத்தானே கேட்டுக்கொள்ளவும் தெரியாத ஒரு தலைமுறை வளர்ந்து நிற்கின்றது; இத்தலைமுறைதான் இருபது ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குவது நியாயம்தானே?என்று எண்ணவும் தலைப்பட்டுள்ளது.

5) அடிப்படைக்கல்வியை அரசாங்கமே வியாபாரமாக ஆக்கியுள்ள நிலையில், கல்வி கற்பதே சம்பாதிக்கவும் ஆடம்பர வாழ்க்கை வாழத்தேவையான பொருள் சேர்க்கவும் ‘சந்தோசமாகவாழ்க்கையை வாழவும் என்று இன்றைய தலைமுறை நினைத்தால் தவறு யார் பக்கம்? மனிதனை மனிதனாகப் பார்க்க கற்றுத்தராத, தன் போன்ற சகமனிதர்களின் கூட்டத்தால் ஆனதே இந்த சமூகம் என்ற அடிப்படைப் பார்வையை உருவாக்காத, சக மனிதனின் வலியை என்ன என்றாவது கேட்க வேண்டும் என்ற உணர்வைக் கூடத்தராத, காசு கொடுத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும், இதில் கேள்வியெல்லாம் எதற்கு என்று மனிதனின் சூடு சுரணையை மழுங்கடிக்கும்  இந்தக் கல்வியும் கல்வி கற்பிக்கும் இந்த அமைப்பும் யாருக்கு வேண்டும்? 

6)   இப்புதிய ஆண்டில் குரு ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் ஜன கண மன... பாடலின் தமிழாக்கத்தை இங்கே தந்து முடிக்கின்றேன் (மனக்குமுறலோடு)...


          மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான்.      
     வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ.

வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!