சனி, மே 31, 2025

இரு பெரும் பரிமாணங்கள்: தியடோர் பாஸ்கரன் (மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் நூல் மதிப்புரை)


மதிப்புக்குரிய எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள் எம் பி சீனிவாசன் வாழ்க்கை வரலாற்றை வாசித்து விட்டு காலச்சுவடு மே 2025 இதழில் எழுதியுள்ள மதிப்புரை இது.

....

இரு பெரும் பரிமாணங்கள் 


- தியடோர் பாஸ்கரன் 

சென்னையில் திரைப்படத் தொழில் தொடங்கி 60 ஆண்டுகளாகி, ஆண்டுக்கு 200 படங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அதில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு என்று கூட்டாக முதலாளிகளிடம் பேச ஓர் அமைப்பு இருக்கவில்லை. அவர்களுக்கு எந்தவிதப் பணி பாதுகாப்பும் கிடையாது. இந்தப் பின்புலத்தில்தான் மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன் (எம் பி எஸ் 1925-1988) தோன்றுகிறார். தொழிற்சங்கங்கள் உருவாவதை ஸ்டுடியோ முதலாளிகள் தங்களால் முடிந்தவரை தடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், சீனிவாசன் ஊழியர்களை ஒன்றிணைக்கத் தொடங்குகிறார். தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. 1960 இல் தொடங்கிய இந்த முயற்சியில் இவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ். இவர்கள் இருவரையும் இணைத்தது இடதுசாரி கருத்தியல். சிறு வயது முதலே கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சீனிவாசன் தனது சித்தாந்தத்திலிருந்து விலகாமல், தனது வாழ்க்கைப் பணியை தொடர்ந்தார். இன்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தென்னிந்தியத் திரையுலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

அவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூல் மக்களிசை மேதை எம்பி சீனிவாசன். 

இசைத்துறையிலும், அதிலிருந்து திரைத்துறையிலும் இவர் ஆற்றிய பணி இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது, பலர் சேர்ந்து பாடும் சேர்ந்திசையை இவர் மெட்ராஸ் யூத் காயர் Madras Youth Choir என்ற அமைப்பின் மூலம் வளர்த்தது மனித குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைக்கருவிகளின் எண்ணிக்கையை குறைத்து அவர் உருவாக்கியது தான் சேர்ந்திசை வடிவம். " இசைக்கருவிகளுக்கு இங்கு முக்கியத்துவம் இல்லை; எங்களது சேர்ந்து இசையில் இருக்கும் இசைக்கருவிகள் எனில் ஹார்மோனியம், தபேலா, கிதார், அவ்வளவுதான்" என்கிறார் சீனிவாசன் உடன் இணைந்து பணியாற்றிய டி ராமச்சந்திரன். 

சீனிவாசன் தன் வாழ்நாளில் பெற்ற விருதுகளையும் அங்கீகாரங்களையும் விவரித்து நூலாசிரியர் தரும் பட்டியல் நம்மை பிரமிக்க வைக்கிறது. 
இத்தகைய ஓர் ஆளுமை இந்திய சினிமா உலகிலும் மற்ற வகையிலும் ஏன் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. தொழிற்சங்க வளர்ச்சியை ஆதரித்ததும் தனது அரசியல் கருத்தாக்கமான இடதுசாரின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுமே காரணம். பணம் திரட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்படும் திரைப்படங்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதும் காரணமாக இருக்கலாம். செல்வம், புகழை பற்றி சீனிவாசன் கவலைப்பட்டதாக தெரியவில்லை. 

சினிமாவின் சாத்தியக் கூறுகளையும் இயல்புகளையும் நன்கு உணர்ந்து இருந்த சீனிவாசன் அதேபோன்று நோக்குடைய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர் இசையமைத்து கொடுத்தது ஜான் ஆபிரகாமுக்கு மட்டுமல்ல, அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய பெருவாரியான படங்களுக்கும் சீனிவாசன்தான் இசையமைத்தார். சினிமாவில் இசையின் இடத்தை அதன் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருந்தவர் சீனிவாசன். பின்னணி இசை ஒரு திரைப்படத்தில் வரும் பிம்பங்களை எவ்வாறு செறிவுள்ளதாக ஆக்க முடியும் என்பதை அடூரின் 'எலிப்பத்தாய'த்தில் (1982) செய்து காட்டி இருப்பார் 

சீனிவாசன் இசையமைத்த படங்களில், இசை கதையின் மையக்கருவோடு ஒன்றிணைந்து இருந்தது. சேர்ந்திசையை இவர் சில படங்களிலும் அறிமுகப்படுத்தினார். தமிழில் அவர் இசையமைத்த முதல் படமான பாதை தெரியுது பார் (1960) படத்தில் இதை அவதானிக்கலாம். தாகம் (1972) படத்தில் 'வானம் நமது தந்தை' போன்ற பாடல்கள் இந்தப் பாணி இசைக்கு நல்ல எடுத்துக்காட்டு. யதார்த்த பாணி சினிமாவிற்கு இவர் கொடுத்த ஆதரவின் அடையாளம் ஜான் ஆபிரகாம் இயக்கிய 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தில் கதாநாயகனாக நடித்தது. 

இந்தியன் பர்பாமிங் ரைட்ஸ் சொசைட்டியின் தலைவராக பல ஆண்டுகள் சீனிவாசன் பணியாற்றினார். பாரம்பரிய இசை விற்பனர்கள் பலர் இவரது பங்களிப்பை போற்றினர். இதன் விளைவாக 1986 ஆம் ஆண்டு இவருக்கு சங்கீத நாடக அகாடமியின் விருது வழங்கப்பட்டது.

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும்போது நூலின் குவி மையம் அந்த ஆளுமை மேல் இருக்க வேண்டும். சேகரித்த தகவலை எல்லாம் இந்த நூலில் அடக்கி விட வேண்டும் என்ற ஆர்வம் இந்த குவி மையத்தை குலைக்கிறது. பாடகர் யேசுதாசைப் பற்றி இவ்வளவு விவரங்கள் இங்கு தேவையில்லை என்று நினைக்கிறேன். சீனிவாசன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை வரலாற்று நூலில் இவை தேவையில்லை. அதேபோல அஞ்சலி குறிப்புகளும் தேவைக்கு மிகுதியானவை. ஒரு நூலில் எதை சேர்க்க வேண்டும் என்று தீர்மானிப்பது போலவே எதை சேர்க்கக்கூடாது என்பதையும் நூலாசிரியர் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நூலின் குவி மையம் கலையாமல் இருக்கும். அது மட்டுமல்ல இந்த நூலில் சேர்க்கப்பட்ட கட்டுரைகள் எந்த தருணத்தில் எப்பொழுது எழுதப்பட்டன என்ற விவரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. திரைப்படப் பாடல்களும் சமுதாய மாற்றமும் என்ற கட்டுரை ஆங்கிலத்தில் ஒரு கருத்தரங்கிற்காக எழுதப்பட்டது என்று கூறி சீனிவாசன் அதன் தட்டச்சு பிரதி ஒன்றை 1975இல் என்னிடம் கொடுத்தது நினைவில் இருக்கிறது.

இந்த நூலில் சில தகவல் பிழைகள் உள்ளன 1897 இல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இந்தியாவின் முதல் சலனப்பட காட்சி திரையிடப்பட்டது என்கிறது நூல் (பக்கம் 82). 1896 இல் ஜூலை மாதம் பம்பாயில் வாட்சன் ஹோட்டலில் தான் முதல் சலனப்பட காட்சி திரையிடப்பட்டது. சீனிவாசன் இசையமைத்த படங்களின் முழுப் பட்டியல் கொடுக்கப்படவில்லை. அடூரின் அனந்தரம் 1987 போன்ற பல முக்கியமான படங்கள் விட்டுப் போயிருக்கின்றன. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அவரோடு தொடர்புடைய முக்கிய காலக்குறிப்புகளை சொல்ல வேண்டும். சீனிவாசன் எந்த ஆண்டு பிறந்தார் என்ற விவரம் கூட இந்த நூலில் இல்லை. வேறு ஒரு தரவில் இருந்து தான் எடுக்க வேண்டி இருந்தது. 

இந்த நூல் செப்பனிடப்படவில்லை சந்திப்பிழைகள் மலிந்துள்ளன. இதில் உள்ள ஒளிப்படங்கள் முக்கியமானவை. ஆனால் தெளிவாக அச்சிடப்படவில்லை.

வருங்கால ஆய்வாளர்களுக்கு பயனுள்ள தரவுகளின் பட்டியலை நூலாசிரியர் தந்துள்ளார். ஆனால் சொல்லடைவு (இன்டெக்ஸ்) இல்லாதது ஒரு குறை. பொருள் அடக்கம் போன்று சொல்லடைவும் நூலின் இன்றியமையாத அங்கம். இது நூலின் பயனைக் கூட்டும். தமிழ் வெளியீட்டுச் சூழலில் ஏனோ இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை 

இந்த நூலை எழுதியுள்ள இக்பால் அகமது ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் சீனிவாசனின் தொழிற்சங்க இயக்கத்தின், சினிமா இசையின் பங்களிப்பை பதிவு செய்கிறார். அவரது உறவினர்களுடனும் நண்பர்கள் உடனும் ஆன நேர்காணல்கள், அவர் எழுதிய கட்டுரைகள், உரைகள் என பலவித தரவுகளை ஆய்வுக்கு நூலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். அவரது இரு பரிமாணங்களையும் ஏராளமான விவரங்களையும் கொண்ட இந்த நூல் இந்திய சினிமா வரலாற்றிற்கு ஓர் சீரிய பங்களிப்பு.
...

தியடோர் பாஸ்கரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள பிழைகள் பின்னர் வரும் பதிப்பில் திருத்திக்கொள்ளப்படும்.

சீனிவாசன் பிறந்த நாள் 19.9.1925.  அனந்தரம், முகாமுகம் ஆகிய படங்கள் பட்டியலில் விடுபட்டுள்ளன.