வியாழன், ஏப்ரல் 23, 2020

நான்கு புத்தகங்கள்

மார்கரிட்டா ஃபோபானோவா
(தமிழில்: மு.இக்பால் அகமது)


லெனின் தனது கடைசி தலைமறைவு வாழ்வை 1917 செப்டம்பர் - அக்டொபர் காலகட்டத்தில் பெட்ரோகிராட்டில் விபோர்க்ஸ்கயா ஸ்டொரோனாவில் உள்ள எனது வீட்டில் கழித்தார். அது நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு. இப்போது அது லெனின் அருங்காட்சியகமாக உள்ளது.

அவரது ஒரு நாளுக்கான வேலை திட்டத்தை பேசும் போது முதல் வேலையாக அவர் எனக்கு சொன்னது இதுதான்: அன்றைய நாளின் அனைத்து நாளிதழ்களும் 9 அல்லது 10 மணிக்குள்ளாக எனக்கு வந்து விட வேண்டும். அதற்கு முன்பாகவே கிடைக்கும் எனில் என் அறையின் கதவின் கீழாக தள்ளி விடுங்கள்.

அத்தனை நாளிதழ்களையும் அவர் எப்படி வாசித்து முடிக்கின்றார் என்பது ஆச்சரியம் மிகுந்த ஒன்று. ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்ததால் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

எனது உணவு அறையின் வலது மூலையில் ஜன்னலில் புத்தக அலமாரியின் அருகே எனது எழுத்து மேசை இருக்கிறது. பெரிதும் விவசாயம் தொடர்பான நூல்கள் அடங்கிய ஒரு சிறு நூலகம் என்னுடையது. வெகு விரைவிலேயே எனது நூல்களின் தொகுப்பை புரிந்து கொண்ட லெனின் அவை குறித்து என்னுடன் உரையாடத் தொடங்கினார். பள்ளி செல்லும் சிறுமியான என் மகளின் மேசையைத்தான் அவர் பயன்படுத்தி வந்தார். விரைவிலேயே எனது பல நூல்கள் அவர் மேசைக்கு இடம் பெயர்ந்தன.

நிகோலாயேவிச் போக்தானோவ் என்ற ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் மீது லெனினின் கவனம் குவிந்தது. இவர் ஒரு விலங்கியல் அறிஞர். 1800களில் வாழ்ந்தவர். விலங்கியல் மட்டுமின்றி ரஷ்ய கிராமங்கள், விலங்குகள் குறித்த கதைகளையும் சித்திரங்களையும் அவர் தீட்டி இருந்தார். அவரது மறைவுக்குப் பின் அவர் நண்பர் பேராசிரியர் N.Vagner என்பவர் அவர் கட்டுரைகளை தொகுத்து From Russian Wildlife என்று நூலாக வெளியிட்டார்.


"போக்தானோவ் என் ஊர்க்காரர். நான் பிறந்தது சிம்பிர்ஸ்க் என்ற ஊரில். அவரும் நானும் ஒரே உடற்பயிற்சி பள்ளிக்குத்தான் சென்றிருக்கின்றோம். ஆனால் அவர் பட்டம் பெற்றது காசான் பல்கலைக்கழகத்தில். நான் வேறு பல்கலைக்கழகத்தில்...".

From Russian Wildlife என்ற அந்த நூலை பல முறை அவர் விரும்பி வாசித்தார். மிகுந்த புலமையுடன் எழுதப்பட்ட நூலின் பக்கங்களை எனக்கு சத்தமாய் வாசித்தும் காண்பித்தார். "மிக அகன்று பரந்த மத்திய ரஷ்யாவின் வெளிகளிலும் உக்ரைனின் ஸ்டெப்பி புல்வெளிகளிலும் வோல்கா நதியின் மேலுமாக" பறந்து திரிந்த சிறிய வெள்ளை ஆந்தையை பேசும் DEEP IN THE FOREST என்ற பகுதியை ரசித்து வாசித்தார்.  "அடர் காட்டின் சொந்தக்கார சீமாட்டியான" சிவிங்கிப்பூனையை ரசித்து வாசித்தார். "குட்டிப் பறவைகள் ஏன் கவலையில் ஆழ்ந்துள்ளன" என்ற கதை நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் மட்டுமே ஆனது, ஆனால் இக்கதையை தொடக்கம் முதல் முடிவு வரை பல முறை சத்தமாக வாசித்தார்.

The Little Starling என்ற புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. காரணம் இப்புத்தகம் அவரது ஊரான சிம்பிர்ஸ்க் பற்றியும் அவரது குழந்தைப் பருவத் த்தையும்   இளமைப் பருவத்தையும் ஞாபகப்படுத்தியதாம்.

போக்தோனோவின் மற்றோரு புத்தகமான Nature's Spongers ஒட்டுண்ணிகள் பற்றி சொல்கிறது. இத்தகைய விலங்குகளும் பூச்சிகளும் எப்படி பிற உயிர்களை சார்ந்து 'உழைக்காமல்' வாழ்கின்ற ன, குறிப்பாக விவசாயத்தை எப்படி பாழாக்குகின்றன என்று விரிவாக சொல்கிறார். நூலின் தலைப்பை லெனின் வெகுவாக ரசித்தார். மிகப் பொருத்தமான தலைப்பு என்று வியந்தார். "இயற்கையின் ஒட்டுண்ணி"களை சரியான முறையில் கையாளும் கலை சோசலிச அரசுக்கு மட்டுமே கை கூடும் என்றார். "நாம் ஆட்சிக்கு வருவோம், உடன் இயற்கை யின் எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் தொடுப்போம்" என்று சொல்கிறார்.

அக்டொபர் புரட்சிக்கு முன்பு இந்நூல் 18 முறை மறுபதிப்பு கண்டது. 1923இல் 19ஆவது மறுபதிப்பு. இந்நூல் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும் என அரசுப் பதிப்புத்துறைக்கு ஆலோசனை சொன்னது யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் இதில் லெனினின் பங்கு இருக்கும் என்பது உறுதி.

V.N.சுகசேவ் எழுதிய Swamps(சதுப்பு நிலம்) என்ற நூல். மேய்ச்சல் நில வேளாண்மை குறித்த படிப்புக்கு இந்நூல் பாடமாக இருந்தது. இது நான் வாசித்துக் கொண்டிருந்த நூல், உணவறை மேசையில் வைத்திருந்தேன். ஒரு நாள் லெனின் என்னிடம் சொன்னார், "தெரியுமா, அந்த நூல் சுவாரஸ்யமான ஒன்று, படித்து முடித்து விட்டேன்!  மிகப்பல சிந்தனைகளை உள்ளடக்கிய நூல். எழுதிய முறையோ மிக அற்புதம்! வாசிப்பவரை வசீகரிக்கும் வண்ணம் எழுதியுள்ளார். சதுப்பு நிலங்கள் உண்மையில் பெரிய அளவு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. நம் தாய் நாடான ரஷ்யாவில் என்ன நடக்கிறது, பாருங்களேன், மிகப் பரந்த அளவுக்கு நம் நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ளன, உண்மையில் இவை யாவும் இயற்கையான கரிச்சுரங்கங்கள், மிக மலிவான எரிபொருள் கிடங்குகள், இவற்றைக் கொண்டு செலவு பிடிக்காத மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்..."  பிற்காலத்தில் தோழர் கிரிசிஜானோவ்ஸ்கி சொன்னதை இங்கே நினைவு கூர்வோம்: "1919 டிசம்பர், லெனின் சொன்னார், கரியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அத்தகைய வெப்பத்தை உற்பத்தி செய்யக்கூடிய கரி நம் நிலங்களில் அபரிமிதமாக உள்ளது, வெட்டி எடுப்பதும் அவ்வளவு செலவு பிடிக்க கூடியது அல்ல".

இந்நூல் பற்றி அவருடன் உரையாடும்போது வேட்டையாடுவதில் அவருக்கு அலாதி பிரியம் என்பதை கண்டுகொண்டேன். "ஒரு சதுப்பு நிலம், உங்களிடம் ஒரு துப்பாக்கி, உங்களின் இலக்குக்காக நீங்கள் காத்திருக்கின்றீர்கள்....ஆகா! என்ன ஒரு அனுபவம்!".

இந்த நூலை அவர் தன் மேசையில் வைத்திருந்தார். ரஷ்யாவின் சதுப்பு நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்தனை அவரை விட்டு நீங்கவே இல்லை என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். எங்கள் உரையாடல்களில் இது பற்றி பல முறை பேசலானார்.

நான்காவது நூல் The New Earth (புதிய பூமி).  William S Hardwood   என்பவர் அமெரிக்காவின் நவீன விவசாயம் குறித்து எழுதிய நூல் இது.

ஒரு நாள் இரவு உணவுக்கு பின்னான உரையாடலின் போது நூல் அலமாரியின் அருகே நின்று கொண்டு என்னுடன் பேசினார்: உங்கள் நூலகத்தில் ஒரு அற்புதமான நூலை கண்டெடு த்தேன். அடடா! சும்மா சொல்லக்கூடாது! நூலின் அளவும் கச்சிதம், உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள லாம். நாம் ஆட்சிக்கு வரும்போது இந்நூலை நிச்சயமாக மறுபதிப்பு செய்வோம். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்நூலைப் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்நூலில் ஆசிரியர் சொல்லும் ஆலோசனைகள், அவர் வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை விவசாயத்தொழிலில் ஈடுபடும் அனைவரும் மட்டுமின்றி வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விஞ்ஞானிகள் ஆகியோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

1918. சோவியத் அரசு நிர்வாகம் மாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தது. லெனின் என்னை தொலைபேசியில் அழைத்தார், புதிய பூமி என்ற அந்த நூல் என்னிடம் இருந்தால் க்ரெம்ளினுக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டார். பேராசிரியர் திமிர்யாசேவ் என்பவருக்கு நூலை அனுப்பி வாசிக்குமாறு வேண்டியதுடன் நூலுக்கு முன்னுரை ஒன்று எழுதுமாறும் பணித்தார். நூலை மிக விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கூறினார். பேராசிரியர் நூலுக்கு முன்னுரை எழுதியதுடன் நூலின் தலைப்பை Regenerated Land என்றும் மாற்றினார். 1919இன் முற்பகுதியில் நூல் வெளியானது.

நூலின் இரண்டு பிரதிகளை லெனின் எனக்கு அனுப்பியிருந்தார். இந்நூலின் பல பிரதிகளை அவர் எப்போதும் தன் மேசை மீது அடுக்கி வைத்திருப்பார். தன்னைக் காண வருபவர்களிடம், குறிப்பாக விவசாயத் தொழிலின் முன்னோடிகளிடம் நூலின் முக்கியத்துவம் குறித்துப்பேசி நூலை மிகப் பரவலாக கொண்டு செல்ல வலியுறுத்துவார்.

லெனினுடன் வேறு பல நூல்கள் குறித்தும் உரையாடி இருக்கின்றோம். நீங்கள் லெனினுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தால், அது மிகக் குறைந்த நேரமே என்றாலும் நீங்கள் புதிய சில விசயங்களை தெரிந்து கொள்வீர்கள். அவர் பிறரைப் போல் இல்லை, அவருடன் உரையாடுபவரை கவனமாக கேட்பார், உரையாடுபவரின் கேள்விகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார், உரையாடலில் தொடர்பான பல புது விஷயங்களை சேர்த்து உரையாடலை செழுமைப் படுத்துவார்.

(Lenin And Books, 1971ஆம் ஆண்டுப் பதிப்பில் ( Progress Publishers) இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை)

(ஏப்ரல் 22 லெனின் பிறந்த நாள், ஏப்ரல் 23 உலக புத்தக நாள்)

புதன், ஏப்ரல் 15, 2020

மஞ்சள் பிசாசின் மனிதவேட்டை

எல்லாம் என்னுடையது என்றது தங்கம்.
எல்லாம் என்னுடையது என்றது வாள்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது தங்கம்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது வாள்.

எல்லாவற்றையும் வாங்குவதற்காக வாள் பலத்தைக்கொண்டு தங்கத்தை பறித்துக்கொள் என்பதே இந்த உரையாடல் சொல்லும் செய்தி. இந்த கவிதையை எழுதியவர் ரஷ்யக்கவிஞர் புஷ்கின்.

1846. அமெரிக்காவின் பிற்பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறுகின்றார்கள். எதற்கு? தங்கவேட்டைக்காக! ஜேக்கப் டோனர் என்பவருடன் வந்தவர்கள் டோனர் பார்ட்டி என்று அழைக்கப்பட்டார்கள். 91பேரும் 1846-47இல் சியேறா நெவேடா என்னும் பனிப்பிரதேசத்தில் உணவும் பிற ஆட்களும் இன்றி. மேலும் பயணத்தை தொடர முடியாமல் மாட்டிக்கொண்டனர். வாழ்வதா சாவதா என்ற போராட்டம். நாகரிகம் அடைந்த மனிதகுல வரலாற்றில் மரணமுற்ற மனிதனின் பிணத்தை அல்லது ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு பிணத்தை சாப்பிட்ட கொடுமை இங்குதான் நடந்தது.

கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அலாஸ்காவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் அங்கெல்லாம் குடியேறிய மக்கள் அங்கு பூர்வகுடிகளாய் இருந்த மக்களை கொடூரமாக அழித்தார்கள்.   500 ஆண்டுகளுக்கு முன் கொலம்பஸ் நிகழ்த்திய படுகொலைகளை மீண்டும் நடத்தினார்கள். சில நூறாயிரம் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவில்1849-54 காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் பொருட்டு 4200 கொலைகள் நடந்ததாக பதிவுகள் உள்ளன.
......
இதே போன்றதொரு தங்கவேட்டை 1898இல் வடக்கு கனடாவிலும் அலாஸ்காவின் குளோண்டிக் பகுதியிலும் நடந்தது. குளோண்டிக் நதிப்பிரதேசத்துக்கு தங்க வேட்டை க்கு வந்த ஒரு லட்சம் பேரில் 30000 முதல் 40000 பேர் மட்டுமே உயிருடன் அங்கே போய் சேர்ந்தார்கள். பனி படர்ந்த அலாஸ்காவின் கடும் குளிரின் முன்னே மனிதனின் பேராசை தோற்றுப்போன து. செத்து மடிந்தது. மிக நீண்டதும் கடினமானதும் ஆபத்து மிகுந்ததும் ஆன சில்கூட் கணவாய் பாதையில் தங்கத்தை தேடி நூற்றுக்கணக்கானவர்கள் மலை ஏறிக்கொண்டிருக்கும் முதல் காட்சியுடன் தனது கோல்டு ரஷ் (1925) படத்தை தொடங்குகின்றார் சார்லி சாப்ளின். அவரும் தங்கம் தேடித்தான் போகின்றார். வழக்கம் போலவே இப்படத்திலும் பாத்திரத்துக்கு பெயரில்லை. அவரைத் தொடர்ந்து ஒரு கரடியும் வந்து கொண்டு இருப்பதை அவர் அறிய மாட்டார்!

படத்தை இரண்டு பகுதிகளாக பிரித்தால் முதல் பகுதியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கொடும் பனிச்சூறாவளி வீசும் அலாஸ்காவில் தங்கம் என்ற அற்ப உலோகத்துக்காக மனிதன் போராடுவதையும் இரண்டாம் பகுதியில் தன் உயிருக்காக அலாஸ்காவின் கிராமம் ஒன்றில் போராடுவதையும் பார்க்கலாம்.

தங்க வேட்டையில் ஓரளவிற்கு தங்கத்தை சம்பாதித்த ஜிம் மெக்கெ என்பவனது கூடாரம் பனிப்புயலில் அடித்து  செல்லப்படுகிறது. கொலை வழக்கில் தேடப் லபடும் பிளாக் லார்சன் என்பவனது கூடாரத்துக்கு அவன் இல்லாத போது வந்து சேர்கின்றான் நம் நாயகன். திரும்பி வந்த லார்சன் நாயகனை வெளியே துர்த்தவிடுகின் றான். இப்போது ஜிம் அங்கே வருகின்றான். லார்சனுடன் நடந்த மோத லில் லாரசன் அடக்கப்படுகின் றான். மூவரும் ஒரு உடன்படிக்கை க்கு வருகின்றனர். சீட்டுக்கட்டை கலைத்துப்போடுவது, அதன் மூலம் உணவு தேடி வெளியே போவது யார் என முடிவு செய்வ்து. இதில் லார்சனே வெளியே போவதாக ஆகின்றது. வெளியே சென்ற லார்சன் தன்னை தேடி வந்த இரண்டு போலீஸ்காரர்களை கொலை செய்கின்றான்.

நாயகனும் ஜிம்முவும் நன்றி தெரிவிக்கும் விருந்து நடத்த முடிவு செய்கின்றனர். ஆனால் விருந்துக்கான உணவுதான் இல்லை! இருக்கின்ற ஒரே பொருள் நாயகனின் காலணி மட்டுமே, அதை வேக வைத்து சாப்பிட லாம் என முடிவு செயகின் றார்கள்! காலணியின் மேல் பகுதியை நாயகனும் கீழ் பகுதியை ஜிம்மும் சாப்பிடுகின்றனர்.  ஒன்றும் இல்லாத சூழலில் காலனியை ரசித்தும் ருசித்தும் சாப்பிடும் இந்த காட்சியை மிக அற்புதமாக சித்தரித்து இருப்பார் சாப்ளின். காட்சியின் தெரியாத பக்கமோ பசியால் நொந்து போனவனின் நிலையை சொல்கின்றது.

ஜிம்மின் கற்பனை யோ வேறு மாதிரி போகிறது. தன் எதிரே உட்கார்ந்து இருக்கும் நாயகனை ஐந்தடி உயரமுள்ள கொழுத்த கோட் சூட் அணிந்த கோழி யாக பார்க்கும் அவன் அவனை சுட்டு ரோஸ்ட் செய்து சாப்பிட முடிவு செயகின் றான். ஒரு கையில் துப்பாக்கியும் மறுகை யில் கோடரியும் ஏந்தி நாயகனை அவன் துரத்த ஒன்றும் புரி யாத நாயகன் தப்பித்து ஓ ட உணவுக்கும் உயிருக்கு மான போராட்டம் அங்கே நடக்கின்றது. உணவு தேடி வந்த ஒரு கரடி இந்த சண்டை யில் எதிர்பாராத விதமாக உள்ளே வர திடீர் என துப்பாக்கி வெடிக்க கரடி சாக... இருவருக்கும் ஆன உணவுப்பிரச்னை இப்படி தீர்க்கப் படுகின்றது.

இக்காட்சியில் கோழியின் உடல் அசை வுகளை சாப்ளின் நுட்பமாக வெளிப்படுத்தும் அழகு, மிக அழகு!

ஜிம்முக்கும் லார்சனுக்கும் இடையே தங்கத்துக்காக நடக்கும் சண்டையில் ஜிம் தலையில் அடிபட்டு சுய நினைவை இழக்கின்றான், ஆனால் தங்கம் குறித்த நினைவு அப்படியே இருக்கிறது! தங்கம் படுத்தும் பாடு!


மீண்டும் சந்தித்த இருவரும் பழைய கூடாரத்தை கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால் நள்ளிரவு அடித்த சூறாவளி யில் கூடாரம் மலைமுகட்டி ல் தொங்குகின்றது. இது சாப்ளினின் அற்புதமான கற்பனை மட்டுமே அல்ல, தூரக் காட்சியில் மிகுந்த திகில் ஊட்டும் ஒன்றாகவும் உள்ளது. கூடாரத்தின் ஒரு பாதி மலைமுகட்டில் பாதாள த்தை நோக்கி சரிய மறு பாதி மலையில் இருக்க, இவர்களது ஒவ்வொரு அசைவுக்கும் கூடாரம் மேலும் கீழுமாக தள்ளாடுவதைப் பார்க்கும் போது எந்த வினாடியிலும் அது அதல பாதாளத்தில் விழுந்துவிடும் என பார்க்கின்ற நாம் பதைக்கின்றோம்.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இருவரும் வெளியேறும் இறுதி நொடியில் கூடாரம் பாதாளத்தில் விழுந்து நொறுங்குகின்றது. தேடி வந்த தங்கமும் கிடைத்திட அலாஸ்க்காவில் இருந்து வெளியேறுகின்றனர். அலாஸ்காவில் இருந்தபோது எதிர்பாராத நேரத்தில் சந்தித்த. ஜார்ஜியா என்ற பெண்ணை கப்பலில் பார்க்கின்றான்    நாயகன். மனம் விரும்ப இருவரும் இணைகிறார்கள்.
......
1925இல் வெளி வந்த படம். ஹாலிவுட்டிலும் நெவேடாவிலும் ஆக 15 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து அது வரலாற்றில் சமூக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக இன்றைய முதலாளித்துவ அரசு-ஏகபோகக்கூட்டத்தின் வளர்ச்சியோடும் குறிப்பாக  பணவியல் அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளின் பரிமாணத்தோடும். இணைந்திருக்கின்றது. இதையே தலைகீழாக சொன்னால் தங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற கூறுகளில் முதலாளித்துவ சமூக அரசியல் நெருக்கடிகளும் பணவீக்கமும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

மஞ்சள் பிசாசு என்ற நூலில் அ.வி.அனிக்கின் கூறுகின்றார்: "மஞ்சள் பிசாசு தன்னுடை ய முகத்தை மாற்றிக்கொள்ள முடியும். அது முன்னேற்றம், கடன் வசதி, தொழில்நுட்ப ம் மற்றும் கலை என்ற கவுரவமான முகமூடிக்கு பின்னால் மறைந்து கொள்கின்றது. முதலாளித்துவம் நீடிக்கின்ற வரை மஞ்சள் பிசாசு உயிரோடு இருக்கும்."

சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் சமூக அவலங்களின் பின்னால் இருக்கின்ற முதலாளித்துவ அரசியலை எள்ளி நகையாடிய மிக சீரியசான படங்கள். அவன் எளிய மக்களைப் பற்றி பேசியவன். ஆகவேதான் அவன் மக்கள் கலைஞன்.

(சார்லி சாப்ளின் பிறந்த நாள் 16 ஏப்ரல் 1889)